வியாழன், 7 ஏப்ரல், 2011

நடிகை சுஜாதா இன்று இறுதிச் சடங்கு

நடிகை சுஜாதா (58) உடல் நலக் குறைவால் சென்னையில் புதன்கிழமை காலமானார். கடந்த சில மாதங்களாக இதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுஜாதா, மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
 இலங்கையில் பிறந்த சுஜாதா, மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்.  மலையாளத்தில் "புனர் ஜென்மம்' படத்தின் மூலம் இரண்டாவது கதாநாயகியானார். பாலசந்தரின் இயக்கத்தில் "அவள் ஒரு தொடர்கதை' மூலம் கதாநாயகி ஆனார்.  கோவி. மணிசேகரனின் இயக்கத்தில் வெளிவந்த "தென்னங்கீற்று', ரஜினி, கமல் இணைந்து நடித்த "அவர்கள்', இளையராஜாவின் இசையமைப்பில் வெளிவந்த "அன்னக்கிளி' ஆகிய படங்கள் அவரை புகழின் உச்சிக்குக் கொண்டு போயின.  பஞ்சு அருணாசலத்தின் கதை, வசனத்தில் வெளிவந்த "உறவு சொல்ல ஒருவன்', மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த "கண்ணுக்கு மை எழுது', ஸ்ரீதர் இயக்கிய "ஆலய தீபம்' உள்ளிட்ட படங்களில் நடித்தார்.  "அந்தமான் காதலி', "வா கண்ணா வா', "அண்ணன் ஒரு கோயில்', "பரீட்சைக்கு நேரமாச்சு' உள்ளிட்ட படங்களில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தார்.  ஆரூர் தாஸ் வசனத்தில் வெளிவந்த "விதி' திரைப்படத்தில் சுஜாதாவின் நடிப்பும் வசன உச்சரிப்பும் வெகுவாக பாராட்டப்பட்டன.  ஜெயகரை காதலித்து மணந்துகொண்டார். திருமணத்துக்குப் பின் ஒரு சில படங்களில் நடித்தார். சிறிய இடைவெளிக்குப் பின் குணச்சித்திர பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். "உழைப்பாளி', "தாலாட்டு பாட வா', "கொடி பறக்குது', "அமைதிப்படை', "பாபா', 'வில்லன்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். இறுதியாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய 'வரலாறு' படத்தில் நடித்தார்.  இன்று இறுதிச் சடங்கு: சுஜாதாவுக்கு சாஜீத் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். இறுதிச் சடங்கு கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் வியாழக்கிழமை நடக்கிறது.

கருத்துகள் இல்லை: