வியாழன், 7 ஏப்ரல், 2011

கள் இறக்க அனுமதிக்கப்படும்: ஜெயலலிதா

அதிமுக ஆட்சிக்கு வரும்பட்சத்தில், தென்னை மற்றும் பனை தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கள் இறக்க அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று ஜெயலலிதா உறுதி அளித்தார்.
 பொள்ளாச்சியில் புதன்கிழமை நடைபெற்ற அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா பேசியது:  தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடத்தி வரும் கருணாநிதிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். அந்த வகையில், இந்தத் தேர்தலில் தமிழகத்திற்கு சுதந்திரம் பெற்றுத் தாருங்கள். ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு மின்சாரம் மிகவும் முக்கியம். ஆனால், தமிழகத்தில் மின்சார வெட்டுப் பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. மாநிலத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள்கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமாகிவிட்டது. எந்தத் தொழிலை எடுத்தாலும், அதில் கருணாநிதி குடும்பத்தினர் உள்ளனர். திரைப்படத் தொழில், பத்திரிகை தொழில், மணல், கிரானைட் தொழில் என எல்லா துறைகளிலும் அவரது குடும்பத்தினர் புகுந்துவிட்டனர்.  இப்போது 6-வது முறையாக முதல்வராக வேண்டும் என்று கூறி கருணாநிதி வாக்கு கேட்டு வருகிறார். மீதமிருக்கும் துறைகளையும் அபகரிக்கத்தான் மீண்டும் வாக்கு கேட்டு வருகிறார். தமிழக மக்கள் ஏமாந்துவிடக்கூடாது.  இலங்கைத் தமிழர் பிரச்னையில் போர் நிறுத்தம் வேண்டி திடீரென 3 மணி நேர உண்ணாவிரத நாடகம் நடத்தியவர். ஒரே நாளில் பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட காரணமாக இருந்தவர்.  இலங்கைத் தமிழர்கள்: மத்திய அரசில் அதிமுக அங்கம் வகித்திருந்தால், மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றிருப்போம். இலங்கைத் தமிழர்களையும் காப்பாற்றி இருப்போம். ஆனால் கருணாநிதியோ, அப்படி எதுவும் செய்யவில்லை. இலங்கைத் தமிழர்களை அழித்து, தன் குடும்பத்தைக் காப்பாற்றிக் கொண்டவர்.  2ஜி முறைகேட்டில் முதல்வர் குடும்பத்தினருக்கு தொடர்பு உள்ளது. ஆனால், மாட்டிக் கொண்டது ஆ.ராசா; உயிரை விட்டவர் சாதிக் பாஷா.  கருணாநிதி குடும்பத்தைத் தண்டிக்கக்கூடிய சக்தி, வாக்காளர்களாகிய உங்களிடம் தான் உள்ளது. எனவே, சிந்தித்து வாக்களியுங்கள். இப்படியே போனால், தமிழகத்தை குடும்ப வசம் ஆக்கிக் கொள்வார் கருணாநிதி. அவரது குடும்பத்தை அப்புறப்படுத்த வேண்டும்.  கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் அளவுக்கு கருணாநிதியின் குடும்பம் ஊழல் புரிந்துள்ளது. எனவே, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் அளவுக்கு, திமுக போட்டியிடும் அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழக்கும் அளவுக்கு, அதிமுகவை வெற்றி பெறச் செய்து வரலாற்றுச் சாதனையை நீங்கள் நிகழ்த்த வேண்டும்.  இத்தொகுதியில் பரம்பிக்குளம் -ஆழியாறு திட்டத்தில் ஆனைமலையாறு, நல்லாறு அணைக்கட்டு திட்டம் செயல்படுத்தப்படும். அம்பராம்பாளையம் திட்டத்தில் 294 கிராமங்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  நெசவுத் தொழிலாளர்களுக்கு இலவச மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தென்னை, பனை தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கள் இறக்க அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.  உடுமலை வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன், மடத்துக்குளம் வேட்பாளர் சி.சண்முகவேல், பொள்ளாச்சி வேட்பாளர் முத்துக்கருப்பண்ணசாமி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வால்பாறை (தனி) தொகுதி வேட்பாளர் எம்.ஆறுமுகம்  உள்ளிட்டோரை அறிமுகப்படுத்தி, ஜெயலலிதா வாக்கு சேகரித்தார்.  இதுதவிர கேரள மாநிலத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் சம்பத், சுந்தரமூர்த்தி உள்ளிட்ட 6 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியும், அவர் வாக்கு சேகரித்தார்.

கருத்துகள் இல்லை: