ஞாயிறு, 10 அக்டோபர், 2010

ரணிலைப் பதவியிலிருந்து இறக்குவதற்கு எவ்வளவோ முயற்சிகள் எடுத்தாலும் அவரை அசைக்க முடியவில்லை

சமஷ்டியை மாத்திரமன்றி தமிழ் பேசும் மக்களையும் ஐ.தே.க கைவிட்டுவிட்டது!


எதிர்க்கட்சித் தலைவர் நித்திரையிலிருந்து விழித்தவர் போல இப்போதெல்லாம் அதிகம் பேசுகின்றார். சரத் பொன் சேகாவுக்கு இராணுவ நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்ததைப் பற்றி மாத்திரம் பேசுகின்றார். வேறு எதைப் பற்றியாவது பேசுவதற்கு இப்போது அவருக்கு நேரம் இல்லை போல் தெரிகின்றது. சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவதிலேயே இப்போது ரணிலின் காலம் போகின்றது.

சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாகப் பதவிவகித்த காலத்தில் அவரின் செயற்பாடுகளை மோசமாகக் கிண்டலடித்தவர் ரணில். புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இராணுவம் அடைந்த ஒவ்வொரு வெற்றியையும் ரணில் கிண்டல் செய்தார். ஜனாதிபதித் தேர்தலில் கூட பொன்சேகாவுக்கு எதிராக ரணில் ‘கீழ்வேலை’ செய்தார் என்று அரசியல் வட்டாரங்களில் ஒரு கதை உலாவுகின்றது.
அப்படியிருக்க இப்போது பொன் சேகாவுக்காக ரணில் ‘கண்ணீர் விடுகின்றார்’ என்றால் இருவருக்கு மிடையே பொதுவான பிணைப் பொன்று இருத்தல் வேண்டும்.
ரணில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர். அவருக்கு முன் தலைவராக இருந்த டி.பி. விஜேதுங்க சிறுபான்மையினர் பற்றிக் கூறிய ஒரு கூற்று இப்போது நினைவுக்கு வருகின்றது. இலங்கை சிங்கள வர்களின் நாடு என்றும் சிங்களவர்கள் என்ற பெரிய விருட்சத்தைச் சுற்றிப் படரும் கொடிகளே சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார்.
சரத் பொன்சேகாவும் இதே மாதிரியான ஒரு கருத்தை இராணுவத் தளபதியாக இருந்த போது வெளியிட்டார். இலங்கை சிங்களவர்களின் நாடு என்றும் சிங்களவர்களின் விருப்பத்துக்கு அமைவாகவே சிறு பான்மையினர் வாழ வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்த வகையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சரத் பொன்சேகாவுக்குமிடையே பொதுவான ஒரு உறவு இருக்கின்றது. அதனாலேயே ரணில் அவருக்காகப் பேசுகின்றார் போலும்.
சரத் பொன்சேகா விடயத்தில் ஜனநாயகம் பற்றிப் பேசும் ரணிலுக்கு இனப் பிரச்சினை விடயத்தில் அந்த ஞானோதயம் இல்லாமல் போய்விடுகின்றது.
இனப் பிரச்சினையின் தீர்வுக்கான பேச்சுவார்த்தை என்றோ தீர்வுக்கான ஆலோசனை மீது பாராளுமன்ற வாக்கெடுப்பு என்றோ வரும் போது தந்திரமாக அதிலிருந்து நழுவும் கொள்கையையே ரணில் இன்று வரை கடைப்பிடித்து வருகின்றார். இதுவரை எந்தச் சந்தர்ப்பத்திலாவது இனப் பிரச்சினையின் தீர்வுக்கான கொள்கைத் திட்டமொன்றை ஐக்கிய தேசியக் கட்சி வெளியிடாததையும் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத்திட்டம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வந்த போது ஐக்கிய தேசிய கட்சி முறைகேடாக நடந்து அந்த வாக்கெடுப்பைத் தடுத்ததையும் உதாரணமாகக் கூறலாம்.
புலிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது சமஷ்டித் தீர்வுக்கு ஐக்கிய தேசியக் கட்சி சம்மதம் தெரிவித்தது பற்றி அக்கட்சியின் தமிழ் ஆதரவாளர்கள் பெரிதாகப் பேசினார்கள். அது ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் தந்திரமேயொழிய மனப்பூர்வமான சம்மதமல்ல.
பாராளுமன்றத் தேர்தல் நடந்து ஒருவருடம் பூர்த்தியானதும் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. பாராளுமன்றத் தேர்தல் நடந்து ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சிக்கும் புலிகளுக்கும் இடையிலான ஒஸ்லோ பேச்சுவார்த்தை நடைபெற்றது. அன்றைய ஜனாதிபதி பாராளுமன்றத்தை ஒரு வருட முடிவில் கலைத்துவிடுவார் என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைமை அப்போது கருதியது. அவர் அவ்வாறு பாராளுமன்றத்தைக் கலைத்தால், சமஷ்டித் தீர்வுக்குத் தயாராகிய வேளையில் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டார் என்று பொதுத் தேர்தலில் சிறு பான்மையினர் மத்தியில் பிரசாரம் செய்வதற்கு ஏதுவாகவே ஐக்கிய தேசியக் கட்சி ஒஸ்லோவில் சமஷ்டித் தீர்வுக்குச் சம்மதித்தது.
ஒஸ்லோ அறிக்கை வெளியாகிச் சில வாரங்களின் பின் புலிகள் சமஷ்டித் தீர்வை நிராகரித்தார்கள். பின்னர் ரணிலும் கூறினார் ஐக்கிய தேசியக் கட்சி சமஷ்டியைத் கைவிட்டுவிட்டது என்று. இப்போது கட்சியின் பொதுச் செயலாளர் அதே அறிவிப்பைச் செய்திருக்கின்றார்.
சமஷ்டிக் கொள்கைக்குப் பதிலாக வேறு எந்தக் கொள்கையையும் ஐக்கிய தேசியக் கட்சி முன்வைக்கவில்லை. அதாவது இனப் பிரச்சினையின் தீர்வுக்கு ஐக்கிய தேசியக் கட்சியிடம் இப்போது எந்தக் கொள்கையும் இல்லை. சமஷ்டியை மாத்திரமன்றித் தமிழ் பேசும் மக்களையும் அக் கட்சி கைவிட்டுவிட்டது என்பதே இதன் அர்த்தம்.
எங்கேயும் நடக்காதது
உலகின் எந்த நாட்டிலும் எந்தக் கட்சியிலும் நடக்காத சம்பவங்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நடக்கின்றன. அடுத்தடுத்து எல்லாத் தேர்தல்களிலும் கட்சியைத் தோல்விக்கு இட்டுச் செல்லும் தலைவர் இங்கே தான் இருக்கின்றார்.
ரணிலைப் பதவியிலிருந்து இறக்குவதற்கு எவ்வளவோ முயற்சிகள் எடுத்தாலும் அவரை அசைக்க முடியவில்லை. அதனால் இப்போது புதிய முயற்சி. தேங்காய் உடைப்பு.
ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தர்கள் சிலர் ரணில் பதவி விலக வேண்டும் என்று நேர்த்தி வைத்து தெஹியத்த கண்டி தேவாலயமொன்றில் ஒரு தொகை தேங்காய்கள் உடைத் திருக்கின்றார்கள். இதுவும் வேறு எங்கும் நடக்காத சம்பவம்.
கட்சியின் தலைமைக் குழுவைச் சேர்ந்த சிலர் ரணிலுக்கு எதிராகக் குற்றப் பத்திரிகை தயாரிக்கின்றார்களாம். 1994 ஆம் ஆண்டு காமினி திசாநாயக்கவின் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அமைவதற்குத் தடையாகச் செயற்பட்டார் என்பது முதலாவது குற்றச்சாட்டு.
1994 ஆம் ஆண்டு சந்திரிகா குமாரதுங்க ஒரேயொரு பெரும்பான்மையுடனேயே ஆட்சி அமைத்தார். அந்த ஒற்றைப் பெரும்பான்மை மலையக மக்கள் முன்னணித் தலைவர் சந்திரசேகரனாக இருந்தது. அப்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் சில கட்சிகளைச் சேர்த்துக் கூட்டரசாங்கம் அமைப்பதற்குக் காமினி திசாநாயக முயற்சித்த போது அதற்குத் தடையாக ரணில் இருந்தாராம்.
கட்சி முக்கியஸ்தரொருவர் தனது கட்சி ஆட்சி அமைப்பதற்குத் தடையாகச் செயற்படுவதும் கட்சித் தலைவருக்கு எதிராகக் கட்சிக் குள்ளேயே குற்றப் பத்திரிகை தயாரிப்பதும் வேறு எங்கேயும் நடக்காத சங்கதிகள்.
பதினெட்டாவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய தேசிய கட்சி எம்.பிக்களைக் கட்சியிலிருந்து நீக்குவதெனச் செயற்குழு தீர்மானித்திருக்கின்றது என்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் ஜயலத் ஜயவர்த்தன கூறினார். அப்போது குருநாகல் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி எம்.பியான தயாசிறி ஜயசேகர தொலைபேசி மூலம் இடைமறித்து ஜயலத் ஜயவர்த்தனவின் கூற்றை மறுதலித்தார். செயற்குழுக் கூட்டத்தில் அப்படி ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை என்றார். அதற்காக ஜயசேகர இப்போது ஒழுக்காற்று நடவடிக்கையை எதிர்நோக்கி இருக்கின்றார்.
செயற்குழுக் கூட்டத்தில் அப்படி ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை என்று அடித்துச் சொல்கிறார் ஜயசேகர.
ஆனால் அவரைக் குற்றவாளி ஆக்குவதற்கு அவர்களிடம் ஆதாரம் இருக்கின்றது.
செயற்குழுக் கூட்ட அறிக்கை பின்னர் திருத்தப்பட்டதாக ஒரு கதை.
கூட்ட அறிக்கையைத் தேவைக்கு ஏற்றபடி திருத்தி எழுதுவது வேறு எங்கும் நடக்காதது.
நம்பிக்கையில்லா தீர்மானம்
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்ஸ¤க்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் 107 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
அரசாங்கத்தின் முக்கியமான ஒரு அமைச்சருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் எதிர்க் கட்சியினரின் ஒற்றுமையைக் காண முடியவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியைத் தவிர மற்றைய எதிர்க் கட்சிகள் வாக்களிப்பில் பங்கு பற்றவில்லை. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்த ஐக்கிய தேசியக் கட்சியில் கூட ஏகோபித்த நிலைப்பாடு இருக்கவில்லை. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பிரிவினர் சபைக்கு வரவில்லை.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும் அளவுக்கு வெளிவிவகார அமைச்சர் முறைகேடுகளிலோ தவறான செயல்களிலோ ஈடுபட வில்லை. அப்படியிருக்க வெறுமனே வீம்புக்காகக் கொண்டு வந்தது போலவே ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கின்றது. பேராசிரியர் பீரிஸ் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசாங்கத்தின் பக்கம் வந்தவர் என்பதால் அவர் மீதான தனிப்பட்ட ரீதியிலான பழிவாங்கலாகவும் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் இருக்கலாம்.
எது எப்படியாயினும் பாராளுமன்றத்தின் முக்கியமான நேரத்தை இவ்வாறான ‘உப்புச்சப்பற்ற’ தீர்மானங்களின் மூலம் வீணடிப்பதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான நடவடிக்கைகள் பற்றிச் சபாநாயகர் கவனத்தில் கொள்வது நல்லது.
இங்கிலாந்தின் எதிர்க்கட்சியை ‘மாட்சிமை தங்கிய மகாராணியின் மாற்று அரசாங்கம்’ எனக் கூறுவர். ஒரு அரசாங்கத்துக்கு இருக்க வேண்டிய பொறுப்புணர்ச்சியுடன் எதிர்க்கட்சி செயற்பட வேண்டும் என்பதே இதிலிருந்து எதிர்பார்க்கப்படுவது.
இலங்கையின் இன்றைய எதிர்க்கட்சி பொறுப்பற்ற முறையில் செயற்படுகின்றது என்பதற்கு இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒரு உதாரணம்.

கருத்துகள் இல்லை: