சனி, 16 அக்டோபர், 2010

வடக்கில் நவம்பர் இறுதிவரை வாக்காளர் பதிவு நடைபெறும்!

வடக்கில் வாக்காளர் பதிவு எதிர்வரும் நவம்பர் இறுதி வரை நடைபெறவுள்ளது. இதன்படி யாழ்ப்பாணம் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் நவம்பர் மாதம் இறுதிவரை வாக்காளர் பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.மீள்குடியேற்றம் நடைபெறும் முல்லைத்தீவு,கிளிநொச்சி மாவட்டங்ளுக்கென உதவி தேர்தல் ஆணையாளர் ஒருவர் தேர்தல் ஆணையாளரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

வாக்காளர் பதிவுகளை மேலும் இலகுவாக்கும் நோக்குடன் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி கச்சேரியில் தற்காலிக தேர்தல் அலுவலகமொன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவிக்கிறது.
2011 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவு நடவடிக்கை வட மாகாணம் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் கடந்த ஜூன் முதலாந் திகதி ஆரம்பமானது.
யுத்தம் முடிவடைந்த பின்னர் வடமாகாணத்தின் அனைத்துப் பிரதேசங்களிலும் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைப் பதியும் பணிகள் இம்முறையே முதன் முதலாக மேற்கொள்ளப்படுகிறது.பதிவு செய்யும் நடவடிக்கைகள் பெருமளவில் பூர்த்தியடைந்துள்ளன.
எனினும், பெருந்தொகையான இடம்பெயர் மக்களையும் முகாம்களில் தங்கியிருப்பவர்களையும் கொண்டுள்ள வடமாகாணத்திற்காக விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: