வியாழன், 14 அக்டோபர், 2010

சிலி சுரங்கத்தினுள் சிக்கியோர் வெற்றிகரமாக மீட்பு

சிலியில் 68 நாட்களாக சுரங்கத்துக்குள் சிக்கி ஜீவ மரணப் போராட்டம் நடத்திய 33 சுரங்கத் தொழிலாளர்களையும் மீட்கும் பணி நேற்று ஆரம்பமாகியது. இலங்கை நேரப்படி நேற்றுக் காலை 6.30 அளவில் பிளாரென்கியோ அவலோன் என்ற நபர் முதலில் பத்திரமாக மீட்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து இதுவரை 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புத் பணிகள் நடக்கும் இடத்தில் சிலிநாட்டு ஜனாதிபதி செவான்டியன் பிரினெராவும் இருந்தார். முதலில் மீட்கப்பட்ட அவலோனை ஜனாதிபதி கைகொடுத்து வரவேற்றார்.
அவலோனை அவரது மனைவியும் குழந்தையும் கண்ணீர் மல்க வரவேற்று கட்டித் தழுவிய காட்சி அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கும் ஒவ்வொரு தொழிலாளியையும் மீட்க 90 நிமிடங்கள் தேவைப்படும் என மீட்புக் குழுவினர் கூறுகின்றனர்.
மீட்கப்படும் அனைத்து தொழிலாளர்க ளுக்கும மருத்துவ உதவி வழங்கப்படுகிறது. 68 நாட்கள் சுரங்கத்துக்குள் இருளில் சிக்கியிருந்ததால் அவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகியிருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் தான் அவர்களுக்கு மருத்துவ கவுன்சிலிங் வழங்கப்படுவதாக மருத்துவர்கள் குழு கூறுகிறது.
சுரங்கத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில் சிலி ஜனாதிபதி செபஸ்டியன் பிரினெரா மீட்பு நடவடிக்கை பற்றி குறிப்பிடும்போது,
துன்பம் வரும் வேளையில் எமது உண்மையான ஆத்மா எத்தகையவற்றை செய்ய முடியும் என்பதை இந்த நாடு காட்டியுள்ளது. ஆனால் 33 பேரும் மேலே வரும்வரை அது முடிந்ததாக கூறமுடியாது என்று கூறியுள்ளார். சிலியை கடந்த பெப்ரவரியில் தாக்கிய பூகம்பத்தினால் ஏற்பட்ட பாதிப்பையும் அவர் இச்சமயம் நினைவுபடுத்தினார்.
சுரங்கத் தொழிலாளர்கள் சிலியின் ஐக்கியத்தையும் அது செய்யக்கூடியதையும் பிரதிபலிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
உலகிலேயே அதிக ஆழத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு மீட்பு நடவடிக்கை இது என நம்பப்படுகிறது. அத்துடன் சுரங்கத்துக்குள் சிக்கியிருந்தவர்கள் பூமிக்குள் சுரங்கமொன்றுக்குள் அதிக காலம் சிக்கியிருந்து உயிருடன் மீட்கப்பட்டவர்களாவர்.
இதேவேளை சுரங்கத்தில் விபத்து ஏற்பட்ட விதம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று சுரங்கக் கைத்தொழிலுக்கு பொறுப்பான சிரேஷ்ட அதிகாரியொருவர் கூறுகிறார்.
சிலி நாட்டிலுள்ள அடகாமா பாலைவனத்தில் உள்ள 700 மீட்டர் நீளம் கொண்ட சுரங்கத்தின் முக்கியபாதை திடீரென மண் சரிவால் மூடப்பட்டுவிட்டது. அப்போது சுரங்கத்தின் உட்பகுதியில் வேலை செய்துகொண்டிருந்த 33 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.
உள்ளே சிக்கிக்கொண்டவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா? என்ற அச்சம் நிலவியது. இந்நிலையில், உள்ளே இருந்தவர்கள் எஸ். எம். எஸ். மூலம் நாங்கள் உயிருடன் இருப்பதாக வெளியே இருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து நாசாவின் உதவியுடன் சிலி அரசாங்கம் மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தது.
மண்சரிவால் மூடப்பட்ட பகுதியில் துளை ஏற்படுத்தப்பட்டு அதன் வழியாக ஒரு சிறிய கமரா மூலம் சுரங்கத்தின் உட்பகுதி கண்காணிக்கப்பட்டது. அப்போது உள்ளே இருந்தவர்கள் கைகளை அசைத்தனர். இதனைத் தொடர்ந்தே மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
முதலில் மீட்கப்பட்டவர்கள் நல்ல மனநிலையுடன் இருந்த அனுபவ மிக்க சுரங்கத் தொழிலாளர்களாவர். மீட்பு நடவடிக்கையின்போது பாதகமான சூழ்நிலை ஏற்பட்டால் அதனை தாங்கிக்கொள்ளும் மன உறுதி தேவை தேவைப்படுவதால் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
அடுத்ததாக உடல் நிலை குன்றியவர்கள் மற்றும் சுகவீனமுற்றவர்கள் மேலே அழைத்து வரப்படுகின்றனர். உள்ளே சிக்கியுள்ள சுரங்கத் தொழிலாளர்களில் ஒருவர் அதிக இறத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர், ஒருவர் நீரிழிவு நோயாளர். சுரங்கத்துக்குள் நிலவும் ஈரத்தன்மை காரணமாக சிலர் சுவாச தொற்றுக்கும் தோல் நோய்களுக்கும் ஆளாகியுள்ளதாக தெரியவருகிறது.
உள்ளே சிக்கியிருக்கும் ஜிமி சன்சன் என்ற சுரங்கத் தொழிலாலியே வயதில் குறைந்தவர். 19 வயதான இவர் நான்கு மாத குழந்தையொன்றின் தந்தையாவார். கடந்த 5 மாதங்களாகத்தான் இவர் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
கிளொடியோ யெனஸ் என்ற சுரங்கத் தொழிலாளி 8 ஆவதாக மீட்கப்பட்டவர். கிறிஸ்டினா நுனெஸ் என்ற பெண் இவரை 11 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். யெனஸ் உயிருடன் மீட்கப் பட்ட மறுகனமே நுனெஸ் அவர்களது திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். கூடிய விரைவில் திருமணம் செய்ய இவர்கள் தீர்மானித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: