வெள்ளி, 15 அக்டோபர், 2010

Alfred Duraiappa.1975 ல் நடந்த மேயரின் கொலை தொடர்பான நிஜமும் கற்பனையும்

1975 ல் நடந்த மேயரின் கொலை தொடர்பான நிஜமும் கற்பனையும்
                                     ஆக்கம்: ஜானக பெரேரா
ஒரு பத்திரிகைக் குறிப்பில் துரையப்பா அவரது கொலைக்குச் சில தினங்கள் முன்பு குறிப்பிட்டிருந்தது,”சிங்களமக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் ஐக்கியத்தை விரும்பும் ஒரு அரசியல்வாதியாக நான் இருப்பதனால் தீவிரவாதிகள் என்னை வெறுக்கவும் எனக்குப் பயப்படவும் செய்கிறார்கள்” என்று.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தோற்றத்தை மையப்படுத்தி கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட சில சாட்சியங்கள் பற்றி வெளியான சில பத்திரிகைக் குறிப்புகள் சிலரது மனங்களில் 1975 ஜூலையில் நிகழ்ந்த யாழ் மேயர் அல்பிரட் துரையப்பாவின் கொலை சம்பந்தமாக சில குழப்பங்களை நிகழ்த்தியுள்ளன.
தற்போதைய குழப்பங்கள் முன்னாள் கொழும்பு குற்றப்பிரிவில்  சிரேட்ட பிரதிக் காவல்துறை ஆய்வாளர் நாயகமாகவும் பின்னாளில் சர்வதேசக் காவல்துறையில் போதைப்பொருள் பிரிவில் ஆலோசகராகக் கடமையாற்றிய ராமச்சந்திரா சுந்தரலிங்கம் அவர்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது.முன்பு ஒரு சமயம் யாழ்ப்பாணத்தில் சிரேட்ட காவல்துறை கண்காணிப்பாளராகக் கடமையாற்றியதிலிருந்து அவர் விசுவசிப்பது கொலை சம்பந்தமான தவறற்ற முடிவுகளுக்கே அவரை அது வழிநடத்தியிருக்க முடியும் என்று.முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் மகன் காண்டீபன் இக்கொலையின் பின்னணியில் இருந்தார் என்பது ஒரு கற்பனைக் கதை.
இது நினைவுபடுத்துவது, குழப்பம் ஆரம்பித்தது, கொலை நடந்த உடனடியாக குற்றம் புரிந்ததாக விரல் சுண்டப்பட்டது உண்மையான குற்றவாளியான புலிகளுக்கு நேரே அல்ல. ஆளும் கட்சியில் இருந்த மேயரின் போட்டியாளர்களுக்கு நேரே.
இது சம்பந்தமாக சிலோன் ஒப்சேவர் பத்திரிகையில் 1972லிருந்து அலுவலக நிருபராகக் கடமையாற்றி “பொலிஸ் பீட்” என்ற பகுதியை நடத்தி வந்த எனது சொந்த அனுபவங்களை இதுபற்றிய நிகழ்வுகளுக்கு காட்சிப்படுத்துவது பலனுள்ளதாக இருக்கும். அந்த வருடம் ஜூலை மாதம் சரியாகத் துரையப்பா கொலை செய்யப் படுவதற்கு மூன்று வருடங்களுக்கு முன்பு, உரும்பராயைச் சேர்ந்த சிவகுமாரன் என்ற பெயருடைய ஒரு இளைஞன் ஒரு விழா மண்டபத்தின் முன்னால் நிறுத்தப் பட்டிருந்த மேயரின் ட்ரும்ப் ஹெரால்ட் சீருந்தின் சக்கரங்களுக்கு அடியில் ஒரு குண்டைப் பொருத்தினார்;. அது ஒரு பக்குவமற்ற சாதனம். ஆசனிக் சல்பைட்டும் பொட்டாசியம் குளொரைட்டாலும் கூட்டாக்கப்பட்ட ஒரு சேர்வையை ஒரு வெற்றிலையில் சுருட்டி நேரத்துக்கு வெடிக்கும்படி தீக்குச்சியால் கட்டப்பட்டிருந்தது. அது வெடித்ததின் பயனாக சீருந்து தீப்பிடித்து பலத்த சேதமடைந்தது. உடனடி நடவடிக்கையாக அச் செயலுக்கு தானே காரணம் எனப் பொறுப்பேற்றிருந்த சிவகுமாரனைக் கைது செய்யும்படி சுன்னாகம் காவல்துறையினருக்கு சுந்தரலிங்கம் கட்டளை பிறப்பித்தார்.
அதேவருடம் மே மாதம் 17 வயதுடைய பிரபாகரனும் மற்றும் அவரது நெருங்கிய சகாக்கள் சிலரும் சேர்ந்து உருவாக்கிய தமிழ் புதிய புலிகள் (TNT) என்கிற அமைப்பின் தோற்றத்தைக் காணக்கூடியதாக இருந்தது. அவர்கள் துரையப்பா விளையாட்டரங்கை குண்டுவைத்துத் தகர்த்தது உட்பட சிறியளவிலான தாக்குதல்களை அங்குமிங்குமாக நடத்தி வந்தார்கள். இந்த தமிழ் புதிய புலிகள் (TNT) தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னோடிகள்.
மூன்று வருடங்களின் பின்னர் ஜூலை 28 1975 ல் கொலை நடந்த மறுநாள் யாழ்ப்பாணம் விரைந்த முதல் லேக்ஹவுஸ் குழுவில் நானும் இருந்தேன். குழுவில் இருந்த மற்றவாகள் ஸ்ரான்லி பிரேமரத்ன (ஜனதா),பற்ரிக் குரூஸ் (டெய்லி நியுஸ்),பி.பாலசுந்தரம் (தினகரன்) வேணன் பொன்சேகா (படப்பிடிப்பாளர்). ஆறு நாட்களுக்கு முன் ஜூலை22ல் கொழும்பு குற்றப்பிரிவின் சிரேட்ட காவற்துறை ஆய்வாளர் நாயகம் சுந்தரலிங்கம் யாழ் மாவட்ட நீதிமன்றில் ஒரு காவற்துறை ஆய்வாளர், ஒரு ஜவுளிக் கடத்தல்காரரிடமிருந்து இலஞ்சம் பெற்றுக் கொண்டது சம்பந்தமான வழக்கொன்றைக் கவனிப்பதற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்தார். (முன்பு சுந்தரலிங்கம் வடமாகாண பிரதான காவற்துறைக் கண்காணிப்பாளராக 1966 – 1972  ஆறு வருடங்கள் கடமையாற்றியிருந்தார்.)
மாவட்ட நீதிமன்ற வழக்கு நடைபெறும்வரை சுந்தரலிங்கம் நல்லூர் கோவில் வீதியிலுள்ள அவரது மைத்துனியின் வீட்டிலியே தங்கியிருந்தார். ஜூலை 26 சனிக்கிழமை காலை மேயர் துரையப்பாவிடமிருந்து அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு கிடைக்கப் பெற்றது. அதில் மேயர் தனது மனைவி பரமேஸ்வரி பிரதான மருத்துவ அதிகாரியாகக் கடமையாற்றும் புரூணை நாட்டிலிருந்து தான் தற்போதுதான் வந்திருப்பதாகவும், அடுத்தநாள் பொன்னாலையில் இருக்கும் விஷ்ணு கோவிலுக்குப் போய் வந்த பின் சுந்தரலிங்கத்தைச் சந்திப்பதாக வாக்குறுதியளித்திருந்தார். தனது வெள்ளை நிற பேஜோ சீருந்தில் ஒவ்வொரு ஞாயிறும் இந்தக் கோவிலுக்கு வருகை தருவது மேயரின் வாடிக்கை. இது சம்பவ இடத்துக்கு மிதிவண்டிகளில் வந்திருந்த கொலையாளிகளுக்கு நன்கு தெரிந்திருக்கிறது.
அந்த விதிவசமான நாளின்போது சுந்தரலிங்கம் காரைநகர் கடற்படைத்தள கட்டளை அதிகாரியைச் சந்தித்து அப்போது பிரபலமாகவிருந்த இந்திய இலங்கைக் கடத்தல் முயற்சிகள் சம்பந்தமாகக் கலந்துரையாடிவிட்டு மதிய போசனத்துக்காக வந்தபோது இந்த துயரமான செய்தியைக் கேள்வியுற்றார். மேயர் துரையப்பா அவரது சீருந்தில் இருந்து கீழிறங்கி விஷ்ணு கோவிலை நெருங்கும் போது சரியாக இலக்கு வைத்துத் தாக்கும்படியான தூரத்தில் வைத்துச் சுடப்பட்டார்.ஒரு துப்பாக்கி ரவை சரியாக அவரது இதயத்தைத் துளைத்துச் சென்றபடியால் உடன் மரணம் சம்பவித்திருந்தது.
செவ்வாய் அன்று கொலை நடந்த இடத்துக்குச் சென்றபோது கோவிலின் சுவர்களில் எல்லாம் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த அடையாளங்களை நாங்கள் கண்டோம். சுண்டிக்குளியில் உள்ள மேயரின் இல்லத்தில் மரணச்சடங்குகளுக்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. பிணவறையில் இருந்து கொண்டு வரப்பட்ட உடலைக் காண்பதற்காக ஏராளமான கூட்டம் கூடியிருந்தது. கொலைக்கு முக்கிய சாட்சியான மேயரின் சாரதி செயதியாளர்களினதோ அன்றில் காவற்துறையினரினதோ கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளிக்கத் தயக்கம் காட்டினார். அவர் நேரடியாகப் பார்த்த கொலையாளிகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தோ அல்லது அச்சமுற்றோ இருக்க வேண்டும். கொலையில் சம்பந்தப்பட்ட சிலர் மற்றவர்களின் எதிர்தாக்கத்தை அறிவதற்காக கூடியிருந்த கூட்டத்துடன் கலந்திருக்கலாம் என்கிற சந்தேகமும் எழுந்தது.
ஒரு பயங்கரவாத இயக்கத்தினால் கொலை நடத்தப்பட்டது என யாராலும் காரணம் கூற முடியாமலிருந்தது. லேக்ஹவுஸ் தமிழ்பத்திரிகையாளர்  ஒருவர் கூறியதை இப்போதும் என்னால் மிக நன்றாக ஞாபகப் படுத்த முடிகிறது, புலிகள் இயக்கம் இதில் சம்பந்தப் பட்டிருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, இது ஆளும்கட்சியினரதோ அல்லது அவர்களுடன் சம்பந்தப்பட்டவர்களின் கைவேலையே இந்தக் கொலை, என்று. இதற்கான காரணம் அப்போதைய தபால் மற்றும் தொலைதொடர்புகள் அமைச்சர் செல்லையா குமாரசூரியருக்கும், துரையப்பாவுக்கும் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவர்களாக இருந்த போதிலும் அவர்களுக்கிடையே இருந்த தீவிரமான போட்டியே. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தமிழ் அரசியல் தலைமைத்துவத்திற்காக இருவரும் போராடிக் கொண்டிருந்தார்கள்.
எனவே கொலை நடந்தவுடனேயே குமாரசூரியர் பகுதியே கொலைக்குப் பின்னணி என வதந்திகள் பரவத் தொடங்கின. உண்மையான சூத்திரதாரிகள் எப்படியோ மறைந்த மேயரைப் பற்றி; யாழ்ப்பாண மக்களை நம்ப வைப்பதற்காக அவரைத் தமிழ் துரோகி என்றும் அதனால் மரணதண்டனைக்கு அருகதையானவர் என்றும் அவதூறுகளைப் பரப்பத் தொடங்கினார்கள். இது பிரபாகரனதும் அவரது கூட்டத்தினரதும் பிரச்சாரத் திட்டம் என்பதும் வெளிப்படை. ஆனால் காவல்துறையினர் இதைப்பற்றி நன்கறிந்திருந்தனர். இது முன்னாள் யாழ்ப்பாண அரசாங்க அதிபராக இருந்த திஸ்ஸ தேவேந்திராவினால் நன்கு உறுதிப் படுத்தப் பட்டது. கொலை நடந்தபோது திருகோணமலைக்கு அரசாங்க அதிபராக அவர் அப்போதுதான் கடமை ஏற்றிருந்தார். பிரதம மந்திரி ஸ்ரீமாவோபண்டாரநாயக்காவின் கட்டளைப்படி அவர் திரும்பவும் யாழ்ப்பாணம் விரைந்து மரணச்சடங்குகள் நிறைவடையும் வரை யாழ்ப்பாண அரசாங்க அதிபராக தற்காலிகமாகக் கடமையாற்றினார்.
ஒரு பத்திரிகைக் குறிப்பில் துரையப்பா அவரது கொலைக்குச் சில தினங்கள் முன்பு குறிப்பிட்டிருந்தது,”சிங்களமக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் ஐக்கியத்தை விரும்பும் ஒரு அரசியல்வாதியாக நான் இருப்பதனால் தீவிரவாதிகள் என்னை வெறுக்கவும் எனக்குப் பயப்படவும் செய்கிறார்கள்” என்று.
தேவேந்திராவின் கூற்றுப்படி காவற்துறை கண்காணிப்பாளர் மித்திர ஆரியசிங்காவின் தலைமையிலான காவற்துறைக் குழு கண்டு பிடித்தது, முக்கிய சந்தேக நபர் ஒரு சமயம் தேவேந்திராவின் கீழ் காணி இலிகிதராகக் கடமையாற்றிய வேலுப்பிள்ளையின் மகனான பதின்ம வயது பிரபாகரனே என்று.
உண்மையில் நாங்கள் துரையப்பாவின் வீட்டுக்குச் செல்வதற்கு முதல்நாள் அங்கு சென்றிருந்த சுந்தரலிங்கம் கண்டது துரையப்பாவின் மகள் 14 வயது இஷாவும் அவரது பாட்டி (துரையப்பாவின் மாமியார்) திருமதி. குமாரசாமியும் கூட மேயரின் அரசியல் போட்டியாளர்களான குமாரசூரியரும் அவரது குழுவுமே இந்தக் கொலைக்குப் பின்னணியில் இருப்பதாக நம்புவதை. ஏன் பிரதமர் ஸ்ரீமாவோபண்டாரநாயக்காவும் அரசாங்க அமைச்சர்கள் சிலரும் கூட இப்படித்தான் சந்தேகித்தார்கள்
சுந்தரலிங்கம் மரணவீட்டில் இருந்த சமயம் பிரதமமந்திரி தொலைபேசியில் அழைத்து இந்தச் சம்பவம் பற்றி விசாரித்தார். அப்போது பிரதமருடன் தனக்குத் தெரிந்த உண்மைகளை அதாவது ஆயதம் தாங்கிய தமிழ் கிளர்ச்சிக் குழுவினர் இதில் சம்பந்தப் பட்டிருப்பதாகக் கூறினாரே தவிர எவருடைய பெயரையும் குறிப்பிடவில்லை.

கொலையாளிகளைத் தேடிக்கண்டு பிடித்து வரிசையில் நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த குற்றப் புலனாய்வுப் பிரிவின் ஆய்வாளர் பஸ்தியாம்பிள்ளை மூன்று வருடங்களின் பின் மன்னாரில் வைத்து மேயரைக் கொலை செய்த அதே கொலையாளிகளின் கைகளினால் தனது மரணத்தையே சந்திக்கவேண்டி நேர்ந்தது. இரண்டு நிகழ்ச்சிகளுமே பிரபாகரனால் திட்டமிடப்பட்டு எல்லாம் நிறைவேற்றப்பட்டது.
தமிழில் எஸ்.குமார்

கருத்துகள் இல்லை: