புதன், 27 அக்டோபர், 2010

திருமலை மாவட்டத்தில் இஸ்லாமிய புனித நகரம் உருவாக்கப்படும்-பிரதமர்..!

திருமலை மாவட்டத்தில் இஸ்லாமிய புனித நகரம் ஒன்று உருவாக்கப்படும் என்று பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார். திருமலை மாவட்டத்தில் பள்ளிவாசல்களுக்கு அண்மையில் இருக்கும் படைமுகாம்கள் விரைவில் வேறு இடங்களுக்கு மாற்றப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். கடந்த 30 வருடகாலமாக வடக்கு கிழக்கில் நிலவிய பயங்கரவாதத்தை ஜனாதிபதியின் சிறந்த வழிகாட்டலின் மூலமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் அமைதி நிலவுகிறது. அதனால்தான் நானும் இப்பிரதேசத்திற்கு வந்து உங்களது கஷ்டங்களையும் குறைகளையும் கேட்டறிகின்றேன் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். கிண்ணியா பெரியபள்ளி வாசலில் திருகோணமலை மாவட்ட உலமாக்கள் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஊர் பிரமுகர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இம்மாவட்டத்திலுள்ள சகல முஸ்லிம் பிரதேசங்களையும் ஒன்றிணைத்து அதனூடாக கிண்ணியாவில் இஸ்லாமிய கலாசாரத்தினூடாக ஒரு பெரிய பள்ளிவாசலை நிர்மாணித்து புனித நகரமாக உருவாக்குவதற்கு மத விவகார அமைச்சர் என்ற வகையில் சகல நடவடிக்கைகளையும் எடுப்பேன். மேலும் முஸ்லிம் மக்கள் மூன்று தலைமுறையாக எனக்கு வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பியுள்ளார்கள். அதேபோன்று தான் முஸ்லிம் நாடுகள் எமது நாட்டுக்கு பல ஆண்டு காலமாக உதவிகளை வழங்கி வருகிறது. முஸ்லிம்களுக்கு ஒரே ஒரு அல்லாஹ் ஆனால் அவர்கள் இன்று பல கூறுகளாக பிரிந்து பிரச்சினையில் இருக்கிறார்கள். நாங்கள் போய் சமாதானம் புரிய வேண்டியிருக்கிறது. எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் இல்லாமல் குர்ஆனில் கூறப்பட்ட மசுரா அடிப்படையில் உங்களது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளுங்கள் என மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: