வியாழன், 29 ஜூலை, 2021

குறு, சிறு, தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்கக் குழு!

 மின்னம்பலம் : குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் முதல்வர் ஸ்டாலின் குழு அமைத்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக தொழிற் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் சிறு, குறு தொழில்களையும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக தற்போது, குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மேம்படுத்தக் குழு அமைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று (ஜூலை 28) வெளியிட்ட செய்திக்குறிப்பில், “குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கினை வகிப்பதுடன் வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்கப் பங்கினை வழங்கி வருகின்றன.
இந்நிறுவனங்கள் கோவிட் பெருந்தொற்று மற்றும் பல்வேறு பொருளாதாரக் காரணங்களால் பாதிக்கப்பட்டு மிகவும் கடினமான சூழலைச் சந்தித்து வருகின்றன.



சட்டப்பேரவையில் கடந்த ஜூன் 21ஆம் தேதி ஆளுநர் ஆற்றிய உரையில் 'நலிவுற்ற குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கான திட்டங்களை வகுப்பதற்காகத் தொழிலதிபர்கள், வங்கியாளர்கள், நிதித்துறை வல்லுநர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்படும்' என்று அறிவிப்பு செய்யப்பட்டது.

இந்த அறிவிப்பின் படி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கான திட்டங்களை வகுப்பதற்கான குழுவினை ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், முன்னாள் தொழில்துறைச் செயலாளருமான ந.சுந்தரத்தேவன் தலைமையில் பின்வரும் உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில்,

i). பேராசிரியர் எம்.விஜயபாஸ்கர், பகுதி நேர உறுப்பினர், மாநில வளர்ச்சி கொள்கைக் குழு மற்றும் பேராசிரியர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் (MIDS).

ii). பிந்து ஆனந்த், இந்திய ரிசர்வ் வங்கியின் Financial Inclusion, SME Finance and Securitization குழுக்களின் முன்னாள் உறுப்பினர்.

iii) பாலசுப்ரமணியம், முன்னாள் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், இந்தியச் சிறுதொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI)

iv) ஹேமலதா அண்ணாமலை, முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, ஆம்பியர் வெகிகல்ஸ் மற்றும் முன்னாள் தலைவர், TiE Women.

v) இஸ்ரார் அகமத், மண்டலத் தலைவர், இந்திய ஏற்றுமதி கழகங்கள் கூட்டமைப்பு (FIEO).

vi) அன்புராஜன், தலைவர், தமிழ்நாடு சிறு மற்றும் சிறிய தொழில்கள் சங்கம் (TANSTIA)

vii) ஆனந்த், முன்னாள் பங்குதாரர், எர்னஸ்ட் & யங் மற்றும் பட்டயக் கணக்காளர், இந்திய ரிசர்வ் வங்கியின் Asset Reconstruction Companies குழுவின் முன்னாள் உறுப்பினர்.

இக்குழுவில் கீழ்க்காணும் அலுவலர்கள் அலுவல் சாரா உறுப்பினர்களாக இருப்பர்

viii) செயலாளர், நிதித்துறை.

ix) செயலாளர், தொழில்துறை,

x) செயலாளர், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

xi) தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் (உறுப்பினர் - செயலாளர்)

xii) தலைவர், மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு

மேற்கண்ட குழு தமிழகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றிலிருந்து நிறுவனங்களை மீட்டெடுப்பதற்குத் தேவையான உடனடி, குறுகிய மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தேவையான பரிந்துரைகளை வழங்கும். இக்குழு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான கடன் வசதி பெறவும் மற்றும் ஏற்றுமதியினை மேம்படுத்தவும் தேவையான ஆலோசனை வழங்கும்.

இக்குழு மூன்று மாதங்களுக்குள் அதன் அறிக்கையை அரசுக்கு அளிக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பிரியா

கருத்துகள் இல்லை: