ஞாயிறு, 25 ஜூலை, 2021

திமுகவை மேடைக்குமேடை குத்திக்கிழித்த ரஞ்சித் எனும் ஈட்டி மழுங்கிப் போனதா?’ -கொதிக்கும் ஜெயக்குமார்

vikatan.com :பிரேம் குமார் எஸ்.கே.`1980-ம் ஆண்டு தமிழ்நாடு அமெச்சூர் பாக்சர் சங்கத்துக்கான நிதி திரட்டும் வேடிக்கை குத்துச் சண்டையில் பங்கேற்பதாக நாக் அவுட் நாயகன் முகமது அலியை சென்னை அழைத்து வந்தவர் நமது எம்ஜிஆர்’ - ஜெயக்குமார்
ஜெயக்குமார் - இரஞ்சித்

பா.ரஞ்சித் இயக்கத்தில், நடிகர்கள் ஆர்யா, பசுபதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் `சார்பட்டா பரம்பரை’ திரைப்படம், தி.மு.கவைத் தூக்கிப்பிடித்து அ.தி.மு.கவை விமர்சிப்பதாக கருத்துகள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டது. `சார்பட்டா பரம்பரை’ குத்துச்சண்டையை மையப்படுத்திய படமாக இருந்தாலும், படத்தில் ஆங்காங்கே அரசியல் வசனங்களும் காட்சியமைப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன. மேலும் வெளிப்படையான அரசியல் அடையாளங்கள் படத்தில் காணப்பட்டது.

சார்பட்டா பரம்பரை

சார்பட்டா பரம்பரை

சார்பட்டா பரம்பரையின் கோச்சாக, ரங்கன் வாத்தியார் என்கிற கதாபாத்தில் நடித்திருக்கும் பசுபதி, படம் முழுவதும் தி.மு.க கரைவேட்டியுடனே வலம் வருவதில் தொடங்கி அப்போது புதிதாகக் கட்சி ஆரம்பித்திருக்கும் எம்.ஜி.ஆரின் பின்னால் மக்கள் அணிதிரளக்கூடாது என்பதை ரங்கன் வாத்தியார் அறிவுறுத்தும் வகையிலான வசனங்களும் காட்சிப் படுத்தப்பட்டிருக்கின்றன. இது தவிர்த்து எமெர்ஜென்சியை மிகக் கடுமையாக எதிர்த்து தி.மு.க ஆட்சியை இழந்ததையும் அக்கட்சித் தொண்டர்கள் சிறைக்குச் சென்றதையும் இந்திரா காந்திக்கு ஆதரவாக அ.தி.மு.க தொண்டர்களின் பாதாயாத்திரை சுவரொட்டிகளையும் நம் பார்வைக்கு `சார்பட்டா பரம்பரை’ மூலம் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித். இது போன்ற காட்சி அமைப்புகள் தான் தி.மு.கவைத் தூக்கிப்பிடித்து அ.தி.மு.கவை விமர்சிக்கும் வகையில் படம் இருப்பதான கருத்துகள் வந்தது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், `சார்பட்டா பரம்பரை’படத்தை கடுமையாக விமர்சித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர், ``முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் நபர்களை நாம் அறிவோம். ஆனால் 30 ஆண்டுகால நல் ஆட்சியையே திட்டமிட்டு ஒரு படத்தில் மறைத்துள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித். சமீபத்தில் வெளியாகிய ’சார்பட்டா’ படத்தில் எம்ஜிஆருக்கும் விளையாட்டுத் துறைக்கும் எதுவுமே தொடர்பில்லை என்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திரைப்படம் முழுக்க முழுக்க தி.முக-வின் பிரச்சாரப் படமாகவே எடுக்கப்பட்டுள்ளது.

திரைப் பயணம் தொடங்கி அரசியல் பயணம் வரை விளையாட்டை விடாப்பிடியாய் கைக்கொண்டவர் எம்ஜிஆர். அவர் படங்களை முன்மாதிரியாகக் கொண்டு, ஆயிரக்கணக்கான வீரர்கள் களத்திற்கு வந்து வீரர்கள் ஆகியுள்ளனர். மான்கொம்பு சண்டை, வாள் சண்டை, குத்துச் சண்டை, குதிரையேற்றம் ஒவ்வொரு படத்திலும் விளையாட்டு வீரராகவே வெளிப்படுத்திக் கொண்டவர் எம்ஜிஆர். முக்கியமாக குத்துச்சண்டையை மிகவும் நேசித்த ஒரே அரசியல் தலைவர் எம்ஜிஆர்.

எம்.ஜி.ஆருடன் முகமது அலி
எம்.ஜி.ஆருடன் முகமது அலி

1980-ம் ஆண்டு தமிழ்நாடு அமெச்சூர் பாக்சர் சங்கத்துக்கான நிதி திரட்டும் வேடிக்கை குத்துச் சண்டையில் பங்கேற்பதாக நாக் அவுட் நாயகன் முகமது அலியை சென்னை அழைத்து வந்தவர் நமது எம்ஜிஆர். போட்டி முடிந்து தன் ராமாவாரம் தோட்டத்திற்கு அழைத்து மீன் குழம்பு பரிமாறினார். அந்த அளவிற்குக் குத்துச்சண்டை மீது காதல் கொண்டிருந்தார் எம்ஜிஆர்.

திரையில் விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த எம்ஜிஆர் முதல்வரான பிறகு விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் எண்ணற்ற சலுகைகள் வழங்கினார். நலிவடைந்த வீரர்களுக்கு அரசின் நிதி அளித்து சர்வதேசப் போட்டிகளில் அவர்களைப் பங்கேற்கச் செய்து அழகு பார்த்தார். ஆனால் 'சார்பட்டா' திரைப்படம் திமுக ஆட்சியில் மட்டுமே விளையாட்டு வீரர்கள், மதிக்கப்பட்டது போலவும் எம்ஜிஆர், அவர்களைக் கைகழுவியது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கலை என்பது வரலாற்றை விடக் கூர்மையானது. எனவே அதில் உண்மைகள் மறைக்கப்படுவது சம்பந்தப்பட்ட மனிதர்களுக்கு மட்டுமல்ல. வருங்காலத் தலைமுறைக்கே செய்யும் துரோகம் அது. ஆட்சியில் இல்லாத வரை திமுகவை மேடைக்கு மேடை குத்திக்கிழித்த ரஞ்சித் எனும் ஈட்டி, இப்போது மழுங்கிப் போனதன் காரணம் என்னவோ? அதிகார மையம் இடத்தில் அடைக்கலமாக எதிர்க் கட்சியின் மீது புழுதி வாரி தூற்ற வேண்டுமா ரஞ்சித்? சமரசம் செய்து கொள்வது கலைக்கு மட்டும் அல்ல கலைஞனுக்கும் அது அழகல்ல.

பா.ரஞ்சித் | Pa.Ranjith
பா.ரஞ்சித் | Pa.Ranjith

எம்ஜிஆர், அவர்களது படங்களில் விளையாட்டு வீரராக ஏற்றுவரும் கதாபாத்திரங்கள் என்னைப் போன்ற எண்ணற்றோருக்கு வீர விளையாட்டுகளின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது என்று சொன்னால் மிகையாகாது. எத்தனையோ வீரர்களை ஊக்குவித்த எம்ஜிஆரை ’சார்பட்டா' படத்தில் தவறாகச் சித்திரித்துள்ளது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மேலும், இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை: