வெள்ளி, 26 மார்ச், 2021

ஐந்து மாநில தேர்தல்: லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பு முடிவுகள்! தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம், மேற்குவங்கம் புதுச்சேரி..

nakkeeran :தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கும் அடுத்த சில நாட்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தல் முடிவுகள் வரும் மே 2ஆம் தேதி வெளியாக இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து டைம்ஸ் நவ் ஊடகமும், சி-வோட்டர்ஸும் இணைந்து இம்மாநிலங்களுக்கான தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை ஏற்கனவே வெளியிட்டிருந்தன. தற்போது தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மீண்டும் ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளன. இந்தப் புதிய கருத்துக்கணிப்பின்படி, ஒரு மாநிலத்தில் போட்டி அதிகரித்திருக்கிறது. மற்ற மாநிலங்களில், கடந்த கருத்துக்கணிப்பில் வெற்றிபெறும் என கணிக்கப்பட்ட கட்சிகள் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்திக்கொண்டிருக்கின்றன. புதுச்சேரி

டைம்ஸ் நவ் - சி-வோட்டர்ஸின் கடந்த கருத்துக்கணிப்பில், புதுச்சேரியில் பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் - அதிமுக கட்சிகள் இணைந்து 18 இடங்களைக் கைப்பற்றும் எனவும், காங்கிரஸ் - திமுக கூட்டணி 12 இடங்களைப் பெற்று தோல்வியடையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள், பாஜக தலைமையிலான கூட்டணி 21 இடங்களைக் கைப்பற்றி பெரும் வெற்றியை ஈட்டும் என்றும், காங்கிரஸ் - திமுக கூட்டணி வெறும் 9 இடங்களை மட்டுமே பெறும் எனவும் தெரிவிக்கிறது.

 அஸ்ஸாம்

அஸ்ஸாம் மாநிலத்தில் பாஜக கூட்டணி 67 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 57 இடங்களையும் வெல்லும் என கடந்த கருத்துக்கணிப்பு கூறிய நிலையில், தற்போதைய கருத்துக்கணிப்பு முடிவின்படி, பாஜக கூட்டணி 69 இடங்களைக் கைப்பற்றவுள்ளது. காங்கிரஸ் ஒரு இடம் குறைந்து 56 இடங்களைப் பெறவுள்ளது. 

 கேரளா

டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸின் தற்போதைய கருத்துக்கணிப்பில், கேரளாவில் போட்டி சற்று அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த கருத்துக்கணிப்பில் 82 இடங்களைப் பெற்று ஆட்சியமைக்கும் என கூறப்பட்ட இடது ஜனநாயக முன்னணி, தற்போது 77 இடங்களை மட்டுமே பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு 56 இடங்களை வெல்லும் என கூறப்பட்ட காங்கிரஸ், 62 இடங்களை வெல்லும் என தற்போதைய கருத்துக்கணிப்பு கூறுகிறது.

 மேற்குவங்கம்

மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் முந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கையை விட, அதிக தொகுதிகளை வெல்லும் என புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. முன்பு 156 இடங்களில் வெல்லும் என கூறப்பட்ட மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் தற்போது 160 இடங்களை வெல்லும் எனவும், முந்தைய கருத்துக்கணிப்பில் 107 இடங்களைக் கைப்பற்றும் என கூறப்பட்ட பாஜக தற்போது 112 இடங்களில் வெல்லும் என புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

 தமிழ்நாடு

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிவாய்ப்பு முன்பை விட தற்போது உயர்ந்துள்ளதாக டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸின் புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. கடந்த கருத்துக்கணிப்பில் 158 இடங்களில் வெல்லும் என கூறப்பட்ட திமுக கூட்டணி, தற்போதைய கருத்துக்கணிப்பின்படி 177 இடங்களைக் கைப்பற்றவுள்ளது. அதேநேரத்தில் 65 இடங்களைக் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்ட அதிமுக கூட்டணி, தற்போது 49 தொகுதிகளை மட்டுமே பெறும் என புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. அதேபோல் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டி.டி.வி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவை தலா 3 இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: