திங்கள், 22 மார்ச், 2021

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20 சதவீத இட ஒதுக்கீடு- நீதிமன்றம் உத்தரவு

 மாலைமலர் : மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்திராஜ் என்பவர், தமிழ்வழியில் படித்தவர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதாவது முதல் வகுப்பில் இருந்து கல்லூரி படிப்பு வரை தமிழ்வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே இந்த இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கூறி உள்ளது.
பள்ளி, கல்லூரி அல்லது தொழில் துறை படிப்பு ஆகிய எல்லாவற்றிற்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்றும் நீதிபதிகள் கூறி உள்ளனர். அதேபோல், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் பயின்றவருக்கான போலி சான்றிதழ் வழங்கப்பட்டதாக கூறப்படும் புகார் குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுபற்றி ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை நடத்தி 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

வழக்கு விவரம்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி அலுவலர் உள்ளிட்ட 181 பணியிடங்களுக்கான தேர்வுக்கு அழைப்பு விடுத்தது. அதில், தமிழ் வழியில் கல்வி பயன்றவர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் நான் தேர்வு செய்யப்படவில்லை என மனுதாரர் கூறியிருந்தார்.

தொலைநிலை கல்வியில் தமிழில் பயின்றவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், முழுமையாக தமிழில் படித்த எனக்கு வழங்கப்படவில்லை என்றும் கூறி உள்ளார்.

‘டிஎஸ்பிஎஸ்சியின் ஒவ்வொரு தேர்வு அறிவிப்பிலும் இந்த இடஒதுக்கீட்டை முழுக்க முழுக்க தமிழ்வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே தர வேண்டும். தொலைநிலை கல்வியில் தமிழ்வழியில் பயின்றவர்களுக்கு தரக்கூடாது. அதாவது 1 முதல் 12ம் வகுப்பு வரை ஆங்கில வழியில் படித்துவிட்டு, இடஒதுக்கீடு பெறுவதற்காக தொலைநிலை கல்வியில் தமிழ் இளங்கலை பட்டமோ, முதுகலை பட்டமோ பெற்று அதை சமர்ப்பித்து இட ஒதுக்கீட்டை பெறுகிறார்கள். அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக் கூடாது’ என மனுதாரர் கோரியிருந்தார்.

கருத்துகள் இல்லை: