சனி, 27 மார்ச், 2021

'அரசியல் குழந்தையாக ஒப்பிட்டேன்' - நான் பேசியதை வெட்டியும் ஒட்டியும் மாற்றி வெளியிட்டுள்ளார்கள். ஆ.ராசா விளக்கம்

நக்கீரன் செய்திப்பிரிவு :    தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.
அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனு தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
திமுக வேட்பாளர் டாக்டர் எழிலனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஆ.ராசா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் ஒப்பிட்டுப் பேசியவர் ஒருகட்டத்தில், "அரசியல் வளர்ச்சியில் மு.க. ஸ்டாலின், நல்ல உறவில் பிறந்த சுகப்பிரசவ குழந்தை; எடப்பாடி பழனிசாமி கள்ள உறவில் பிறந்த குறைப்பிரசவ குழந்தை. அந்தக் குறைப்பிரசவ குழந்தைக்கு சிகிச்சை அளிக்க ஒரு டாக்டர் தேவைப்பட்டார், அவர்தான் பிரதமர் மோடி” என தனது பேச்சில் குறிப்பிட்டார்.


ஆ.ராசாவின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வரை அவதூறாகப் பேசிய ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாஹுவிடம் புகாரளிக்கப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஆ.ராசா, ''முதல்வரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை.
ஸ்டாலினையும் முதல்வரையும் அரசியல் குழந்தையாக ஒப்பிட்டு பேசிய எனது பேச்சை வெட்டியும் ஒட்டியும் சமூக வலைதளங்களில் தவறாக பரப்பப்படுகிறது'' என கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: