புதன், 24 மார்ச், 2021

பிரதமர் மோடியுடன் பேச்சு நடத்த போரிஸ் ஜான்சன் தனுஷ்கோடியை தேர்வு செய்தது ஏன்?

பிரதமர் மோடியுடன் பேச்சு நடத்த போரிஸ் ஜான்சன் தனுஷ்கோடியை தேர்வு செய்தது ஏன்?

மாலைமலர் :ராமேசுவரம்..    இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், குடியரசு தின கொண்டாட்டத்துக்கு சிறப்பு விருந்தினராக இந்தியா வர சம்மதம் தெரிவித்து இருந்தார்.
அந்த நேரத்தில் இங்கிலாந்தில் கொரோனா பரவல் மீண்டும் உச்சம் அடைந்ததால் அவரது வருகை ரத்தானது.
இந்தநிலையில் அடுத்த மாதம் (ஏப்ரல்) போரிஸ் ஜான்சன் இந்தியா வர இருப்பதாகவும், பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சீன அதிபர் ஜின் பிங் தமிழகம் வந்து, மோடியுடன் மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது போன்று போரிஸ் ஜான்சனுடனான சந்திப்பையும் தமிழகத்திலேயே நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
தனுஷ்கோடி தமிழகத்திற்கும் இலங்கையின் வடபகுதிக்கு இடையில் ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்
தனுஷ்கோடிக்கு தலைமன்னாருக்கும் இடையில் சில நூற்றாண்டுகளாக போக்குவரத்தை மேற்கொண்டது ஆங்கிலேயர் ஆட்சிதான் .
இன்றும் கூட ஆங்கிலேயர்களால் மேற்கொள்ளப்பட்ட பல கட்டுமானங்கள் இப்போதும் அந்த பகுதியில் உள்ளது.
இருபகுதியில் வாழும் தமிழர்களின் வாழ்வியலில் தனுஷ்கோடிக்கு ஒரு வரலாற்று சிறப்பு மிக்க இடம் உள்ளது. தமிழர்களின் வரலாற்று அடையாளங்களை நினைவு கூறும் ஒரு நிகழ்வாகவே இங்கிலாந்து பிரதமர் மோடியுடனான பேச்சு வார்த்தைக்கு தனுஷ்கோடியை தெரிவு செய்துள்ளார் என்று தெரிகிறது   .
திரு போரிஸ் ஜான்சன் அவர்கள் ர் முன்பு இலங்கைக்கு வருகை தந்த வடஇலங்கையில் பல இடங்களை பார்வையிட்டுருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது


இந்த நிலையில் மோடி, போரிஸ் ஜான்சன் சந்திப்பு முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த 3 நாட்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து இங்கிலாந்து நாட்டு தூதரக அதிகாரி ஒருவர் ராமேசுவரம் வந்துள்ளார்.

அவர் ராமேசுவரம் கோவில் வாசல் பகுதியில் நின்று பார்வையிட்டதுடன் பின்னர் அங்கிருந்து கார் மூலமாக தனுஷ்கோடிக்கு சென்றுள்ளார். கம்பிப்பாடு மற்றும் அரிச்சல்முனை கடற்கரை பகுதிகளை பார்வையிட்ட அவர், மீண்டும் ராமேசுவரம் ரெயில் நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்து ரெயிலில் ஏறி உச்சிப்புளி சென்றுள்ளார். இங்கிலாந்து தூதரக அதிகாரி ஆய்வின்போது இந்தியாவின் பாதுகாப்பு பிரிவு மற்றும் மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகளும் உடன் சென்றுள்ளனர்.

இதுபற்றி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-  
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், வருகிற ஏப்ரல் மாதம் ராமேசுவரம், தனுஷ்கோடி வர உள்ளதாக ஒரு தகவல் வந்துள்ளது. ஆனால் இதுவரையிலும் அது குறித்து அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.
அவர், தனுஷ்கோடி வரும் நிகழ்ச்சி உறுதி செய்யப்படும்பட்சத்தில் இங்கிலாந்தில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்திறங்கி, மதுரையில் இருந்து மற்றொரு விமானம் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் உள்ள இந்திய கடற்படை விமான தளத்துக்கு வருவார். அங்கிருந்து கார் மூலமாக அவர் தனுஷ்கோடி அழைத்து வரப்படலாம்.

இங்கிலாந்து சார்பில் கடலில் காற்றாலை அமைக்க இந்திய அரசுடன் ஒப்பந்தம் போட திட்டமிடப்பட்டு உள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்திலோ அல்லது தனுஷ்கோடி கடல் பகுதியிலோ இந்த காற்றாலை அமைக்கப்படலாம். இதுகுறித்தும் அதிகாரபூர்வமாக தெரியவில்லை. ஆனால் இங்கிலாந்து தூதரக அதிகாரி தனுஷ்கோடி கடற்கரை பகுதியை பார்வையிட்டுள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் ராமேசுவரம், தனுஷ்கோடி வருவது உறுதியானால், அதுபற்றிய உறுதியான தகவல் 15 நாட்களுக்கு முன்னர்தான் தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதே நேரத்தில் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் 26-ந் தேதி தனுஷ்கோடி வரலாம் என அதிகாரபூர்வமற்ற தகவல்களும் வெளியாகி உள்ளன.

கருத்துகள் இல்லை: