புதன், 13 நவம்பர், 2019

கோவையில் மயில்களுக்கு விஷம் வைக்கிறார்கள் .. பயிர்களை அழிக்கின்றனவாம்

Sundar P : மயில்களின் தலைவிதி ! கோவைப் பகுதி விவசாயிகளுக்கு
இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று “மயில்கள்”
மயில்கள் எண்ணிக்கை தற்போது பெருகிய காரணத்தால், அவை பயிர்களைக் கொத்திக் குதறி அழித்து வருகின்றன. அதனால், விவசாயிகள் மயில்களுக்கு விஷம் வைத்துக் கொல்லுவது இங்கே இயல்பான நிகழ்வு...
வனத்துறை என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது வினா?….
முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை கிராமங்கள் “இட்டேரிகளால்” இணைக்கப்பட்டு இருந்தன.
“இட்டேரி” என்பது கொங்கு நாட்டு சொல். இருபுறமும் அடர்ந்த வேலி. நடுவில் ஒற்றையடிப் பாதை அல்லது வண்டித் தடம். இதுவே “இட்டேரி” என்று இங்கே அழைக்கப்படும். மற்ற ஊர்களில் என்ன பெயர் என்று தெரியவில்லை.
இந்த இட்டேரி என்பது "ஒரு தனி உலகம்." அது ஒரு eco-balance-system
கள்ளி, முட்ச்செடிகளுக்கு இடையே, வேம்பு, மஞ்சக்கடம்பு, நுணா, பூவரசு போன்ற மரங்கள், நொச்சி, ஆடாதொடை, ஆவாரம் போன்ற செடிவகைகள், பிரண்டை, கோவை போன்ற கொடிவகைகள், மற்றும் பெயர் தெரியாத எண்ணற்ற புற்பூண்டுகள் நிறைந்திருக்கும்.

இவை உயிர்வேலியாய் விவசாய நிலங்களை காத்து வந்தன. இங்கு எண்ணற்ற உயிர்கள் வாழ்ந்து வந்தன.
கறையான் புற்றுகள் , எலி வங்குகள் நிறைய காணப்படும். நிழலும் ஈரமும், இலைக்குப்பைகளும் எப்போதும் காணப்படுவதால் எண்ணற்ற பூச்சியினங்கள் காணப்படும்.
இவற்றை உணவாக கொள்ள வண்டுகள் , நண்டுகள் பாம்புகள், பாப்பிராண்டிகள்,
உடும்புகள், ஓணான்கள், கோழிகள், குருவிகள் அலுங்குகள், ஆமைகள்
இப்படி பல உயிர்களும்; இவற்றை உணவாக கொள்ள பாம்புகள் , பருந்துகள், நரிகள் போன்றவையும் இருந்தன.
மனிதர்களுக்கு கோவப்பழம், கள்ளிப்பழம், சூரிப்பழம், பிரண்டைப்பழம், போன்ற சுவையான கனிவகைகளும், கோவைக்காய், களாக்காய், பிரண்டை கொழுந்து, சீகைக்கொழுந்து என்று சமையலுக்கு உதவும் பொருட்களும், மூலிகைகளும் கிடைத்தன.
பள்ளிப் பருவத்தில் விடுமுறை நாட்களில், “ஓணானைக்கண்டால் ஓட ஓட விரட்டு; பாப்பிராண்டியைக் கண்டால் பாவம்ன்னு விட்டிடு” என்று ஓணான் வேட்டைக்குப் போன அனுபவம் கண்டிப்பாக இருக்கும்.
இந்த வேலியில் வாழ்ந்த எண்ணற்ற குருவிகள், ஓணான்கள், தவளைகள் பயிர்களை சேதப்படுத்தும் பூச்சிகளை அழித்தொழித்தன.
பாம்புகளும் ஆந்தைகளும் எலிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தின. பறவைகளின் எண்ணிக்கையை பாம்புகளும், வல்லூறுகளும் கட்டுப்படுத்தின.
பாம்புகளின் எண்ணிக்கையை மயில்கள் கட்டுப்படுத்தின.
"மயில்களின் எண்ணிக்கையை நரிகளும், காட்டுப்பூனைகளும் கட்டுப்படுத்தின."
ஆனால் இன்று .....???
ஏலியன்கள் பூமியை அழிப்பது போல் வெறி கொண்டு இந்த உலகத்தை அழித்து விட்டோம்.
விவசாய நிலங்கள் ப்ளாட்டுகள் ஆன போது இந்த வேலிகளும் அழிந்தன.
வண்டித்தடங்கள் தார் சாலைகள் ஆன போது இட்டேரிகள் மறைந்தன.
கொஞ்சம் நஞ்சம் மிஞ்சியிருக்கும் விவசாய நிலங்களுக்கு உயிர் வேலியை அழித்து காக்கா குருவி கூட கூடு கட்டாத கம்பிவேலிகள் அமைக்கப்பட்டன.
இதனால் எண்ணற்ற ஜீவராசிகள் வாழ இடமின்றி போனது.
அதில் முக்கியமானது குள்ளநரிகள். இவை மயில்களுக்கு முக்கியமான எதிரிகள். இவை மயில்களின் முட்டைகளையும், குஞ்சுகளையும் தந்திரமாக கவர்ந்து உணவாக்கிக்கொள்ளும்.
இவற்றை நாம் எங்கும் காண முடியவில்லை. காடுகளில் மட்டும் ஓரிரு ஜோடிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்படுகின்றன.
விளைவு ??
மயில்களின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகி விட்டன.
நாம் விதைத்தது நாம் அறுவடை செய்கிறோம்.
கொள்ளிக்கட்டையால் சொரிந்து கொண்டால் புண்ணாகத்தான் செய்யும்.
மயில்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் மீண்டும் உயிர்வேலி முறைக்கு மாறுங்கள்.
இல்லையேல் இழப்புகளை அனுபவிக்கத்தான் வேண்டும்

கருத்துகள் இல்லை: