வியாழன், 16 மே, 2019

தேனிக்கு மீண்டும் வந்த இருபது வாக்கு இயந்திரங்கள் ..... பன்னீரின் சொந்த இயந்திரங்கள்...?

votepallavinakkheeran.in - sakthivel.m : கடந்த 18ம் தேதி தமிழகத்தில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதிகளோடு 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் தேனி பாராளுமன்ற தொகுதியோடு ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தலும் நடைபெற்றது. இந்தநிலையில்தான் தேனி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிபட்டி தொகுதிக்கு உட்பட்ட பாலசமுத்திரம் மற்றும் பெரியகுளம் தொகுதிக்கு உட்பட்ட வடுகபட்டியிலும் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 
அதன்படி வருகிற 19ம் தேதி அந்த இரண்டு தொகுதிகளில் உள்ள இரண்டு பூத்களிலும் மறு வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. அதற்காக ஏற்கனவே 50 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனி தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டது. அதற்கு திமுக, காங்கிரஸ், அமமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வேட்பாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பிறகு தேர்தல் ஆணையம் தெளிவான விளக்கம் அளித்ததின் பேரில் எதிர்க்கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் மீண்டும் திருவள்ளுர் நுகர்வோர் வாணிப கிடங்கில் வைக்கப்பட்டிருந்த இருபது ஓட்டு பதிவு மிஷின்கள், இருபது விவிபேட் ஆகியவை ஒரு வேனில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேனி தாலுகா அலுவலகத்திற்கு மீண்டும் கொண்டு வரப்பட்டது.
இந்த விஷயம் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான பல்லவி பல்தேவ் காதிற்கு எட்டியதன் பேரில் உடனடியாக தாலுகா அலுவலகத்திற்கு விரைந்து அந்த ஓட்டுப் பெட்டிகளை ஆய்வு செய்தார். அதுபோல் எதிர்க்கட்சிகளான தி.மு.க., காங்கிரஸ், அமமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களும் தாலுகா அலுவலகத்திற்கு வந்து அந்த இருபது ஓட்டுப் பெட்டிகளையும் ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்த கலெக்டருடன் அதிகாரிகளும் சேர்ந்து ஒவ்வொரு பெட்டிகளாக திறந்து எதிர்க்கட்சிகாரர்களிடம் காண்பித்தனர்.
இது சம்மந்தமாக எதிர்க்கட்சிகாரர்களிடம் கேட்டபோது, தேனி தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிபட்டி தொகுதியில் உள்ள பாலசமுத்திரம், பெரியகுளம் தொகுதியில் உள்ள வடுகபட்டி ஆகிய இரண்டு வாக்குச்சாவடி மையத்தில் மட்டும் வருகிற 19ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதற்காக ஏற்கனவே 50 ஓட்டு மிஷின்கள் கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டு இருக்கிறது. அப்படி இருக்கும்போது மேலும் 20 ஓட்டு மிஷின்கள்  திடீரென கொண்டுவரப்பட்டிருப்பது எங்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரு ஓட்டு மிஷின் மற்றும் விவிபேட் போதுமானது. எதிர்பாராத விதமாக இயந்திரத்தில் பழுது ஏற்பட்டால் உபரியாக ஒன்று அல்லது இரண்டு இயந்திரம் வைத்துக் கொள்ளலாம். ஆனால் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு முன்பாகவே இதுபோல ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மொத்தமாக வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றி வருவது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே ஓபிஎஸ்  தரப்பு தோல்வி ரீதியில் ஓட்டுப் பெட்டியை மாற்றும் முயற்சியில் தான் ஐம்பது ஓட்டு மிஷின்களை கொண்டு வந்து இருக்கிறார்கள். அதற்கே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டும், தாலுகா அலுவலகம் முன்பு காவல் காத்து கொண்டும் இருக்கிறோம். அப்படி இருக்கும்போது மீண்டும் இருபது ஓட்டு மிஷின்களை கொண்டு வந்து இருப்பது எங்களுக்கு பல சந்தேகங்களை கிளப்பி வருகிறது. ஓபிஎஸ் தனது அதிகார பண பலம் மூலம் எப்படியும், மகனை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஓட்டுப் பெட்டிகளை எந்த வகையிலும் மாற்ற முயற்சி செய்யலாம் அதற்காகத்தான் தொடர்ந்து ஓட்டு மிஷின்கள் வந்து கொண்டே இருக்கிறது. இருந்தாலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை எங்களை மீறி ஓபிஎஸ் கனவு பலிக்காது தொடர்ந்து வாக்குப் பெட்டிகளை கண்காணித்துக் கொண்டுதான் வருவோம். அதுபோல் தேர்தல் ஆணையமும் ஆளுங்கட்சியின் அதிகாரத்திற்கு அடிபணியாமல் நேர்மையாக செயல்பட வேண்டும் என்று கூறினார்கள். ஆக இரண்டாவது முறையாக தேனிக்கு திடீரென வாக்குப்பெட்டி வந்து இறங்கியதன் மூலம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது!

கருத்துகள் இல்லை: