வியாழன், 16 மே, 2019

சென்னை: ஷவரில் குளிக்க வேண்டாம்!

சென்னை: ஷவரில் குளிக்க வேண்டாம்!மின்னம்பலம்: சென்னையில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்களில் குளிக்க வேண்டாம் என்று மக்களுக்கு சென்னை குடிநீர் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் டி.என்.ஹரிஹரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் சென்னைக்கு குடிநீர் விநியோகிக்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகளில் தண்ணீர் சேமிக்க முடியாத நிலை உருவானது. தற்போதைய நிலவரப்படி, பூண்டியில் 133 மில்லியன் கன அடி, புழலில் 37 மில்லியன் கன அடி, சோழவரத்தில் 4 மில்லியன் கன அடி, செம்பரம்பாக்கத்தில் ஒரு மில்லியன் கன அடி என மொத்தம் 175 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.

சோழவரமும், செம்பரம்பாக்கமும் வறண்டுவிட்ட நிலையில் பூண்டி, புழல் ஏரிகளில் ஒருசில நாட்களுக்கு தண்ணீர் கிடைக்கும் நிலை உள்ளது. பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக 830 மில்லியன் லிட்டர் நீர் தினசரி தேவைப்படுகிறது. நீர் பற்றாக்குறை இருப்பதால் தினசரி 550 மில்லியன் லிட்டர் விகிதம் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்கு தேவையான தண்ணீர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம், வீராணம் ஏரி, நெய்வேலி சுரங்கம், போரூரை அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள விவசாய நிலங்களிலுள்ள ஆள்துளை கிணறுகள் வாயிலாக பெறப்படும் நீர் மூலம் சமாளிக்கப்படுகிறது.
இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அனைவரும் ஷவர்களில் குளிப்பதை விரும்புகின்றனர். ஷவர்பாத்தில் குளிக்கும்போது 40 முதல் 50 லிட்டர் நீர் வீணாகிறது. ஆனால் பிளாஸ்டிக் பக்கெட்டில் 5 முதல் 8 லிட்டர் மட்டுமே தேவைப்படுகிறது. தற்போது நிலவும் தண்ணீர் பற்றாக்குறை தீரும்வரை ஷவர்களில் குளிப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: