வியாழன், 16 மே, 2019

ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு: நடவடிக்கைக்குத் தடை!

ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு: நடவடிக்கைக்குத் தடை!மின்னம்பலம் : பணியிலுள்ள ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும், அவர்கள் மீது பணி நீக்க நடவடிக்கை எடுக்கத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
திருவண்ணாமலை மாவட்டம் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா எனும் அரசு உதவி பெறும் பள்ளியைச் சேர்ந்த இந்திராகாந்தி உள்பட 4 ஆசிரியைகள், உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடர்ந்தனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத தங்களைப் பணி நீக்கம் செய்யக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் தங்களது மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

கடந்த 30ஆம் தேதியன்று, இந்த வழக்கு விசாரணை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அமர்வு முன்பாக நடைபெற்றது. அப்போது, ‘தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காக சுமார் 60,000 பேர் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால், மனுதாரர்கள் வாய்ப்புகள் கிடைத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் உள்ளனர். எனவே, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் ஆசிரியர்களாகப் பணியாற்றி வருபவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி, அவர்களிடம் விளக்கம் பெற்று சட்டப்படி தகுந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியர்கள் பலர் மேல்முறையீடு செய்தனர். ‘தகுதித் தேர்வு அறிமுகப்படுத்தி 9 ஆண்டுகளில் ஆண்டுக்கு இரண்டு முறை என 18 தேர்வுகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. மற்ற மாநிலங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக தெளிவான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது போன்ற அரசாணை தமிழகத்தில் பிறப்பிக்கப்படவில்லை. மத்திய அரசு சார்பில் தேசிய அளவில் ஆண்டுக்கு இரு முறை தகுதித் தேர்வு நடத்தப்பட்டாலும், அந்த தேர்வில் தமிழக ஆசிரியர்களால் கலந்துகொள்ள முடியாது. இதைப் புரிந்துகொள்ளாமல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யவேண்டும் அல்லது அதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்” என்று அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இன்று (மே 16) இந்த வழக்கு நீதிபதிகள் கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய விடுமுறைக் கால அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் வருகிற ஜூன் மாதம் நடைபெறக்கூடிய தகுதித் தேர்வில் பங்கேற்க வேண்டும் என்றும், அவர்கள் மீது பணி நீக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டனர். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை வரும் ஜூன் இரண்டாவது வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: