புதன், 15 மே, 2019

ராகுல் பிரதமர்: ஏற்கத் தயாராகும் மம்தா?

ராகுல் பிரதமர்: ஏற்கத் தயாராகும் மம்தா?மின்னம்பலம் :பாஜக அல்லாத ஆட்சி அமைக்க, காங்கிரஸுடன் கூட்டணியில் இணைய தயாராக இருப்பது போன்ற கருத்தை திருணமூல் காங்கிரஸ் கட்சி வெளிப்படுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தல் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி மற்றும் மூன்றாவது அணி தொடர்பான பேச்சுகளும் அதிகரித்துள்ளன. இம்முறை பாஜகவுக்கோ அல்லது காங்கிரஸுக்கோ தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்றே இதுவரையில் வெளியான பல்வேறு கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் கூறியுள்ளன. இதனால் அடுத்து வரும் ஆட்சி மாநிலக் கட்சிகளின் ஆதரவினால்தான் அமையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதற்கேற்றாற்போல மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ், மாயாவதி கூட்டணி உள்ளிட்ட சில மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் மூன்றாவது அணி தொடர்பாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல பாஜக அல்லாத ஆட்சியமைக்க வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், மூன்றாவது அணி தலைமையில் ஆட்சியமைக்க வேண்டும் என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் தனித்தனியே நாடு முழுவதும் தலைவர்களைச் சந்தித்துப் பேசி வருகின்றனர். மூன்றாவது அணியில் மாயாவதி மற்றும் மம்தா பானர்ஜி போன்றவர்களை பிரதமர் வேட்பாளராகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் பேச்சுகள் எழுந்து வருகின்றன. ஆனால், தேர்தலுக்குப் பின்பு மம்தா பானர்ஜியும், மாயாவதியும் தங்களோடு இணைவார்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சிலர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாஜக ஆட்சியை அகற்ற என்ன விலை வேண்டுமானாலும் கொடுப்போம் என்று திருணமூல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திரசேகர ராவ் மே 13ஆம் தேதி சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். மூன்றாவது அணி தொடர்பாகவே சந்திரசேகர ராவ் ஸ்டாலினிடம் பேசியதாகவும், ஆனால் ஸ்டாலின் அவரை காங்கிரஸ் கூட்டணிக்கு வருமாறு அழைத்ததாகவும் சொல்லப்பட்டது. இதையடுத்து ராகுல் காந்திதான் அடுத்த பிரதமராக இருப்பார் என்று மு.க.ஸ்டாலின் மீண்டும் கூறினார்.
இதுகுறித்து திருணமூல் காங்கிரஸ் கட்சியின் பெயர் குறிப்பிட விரும்பாத தலைவர் ஒருவர் என்.டி.டி.வி. ஊடகத்திடம் பேசுகையில், “ஸ்டாலின் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துகிறார் என்றால் அது ஒரு விஷயமல்ல. மோடியை அனுப்ப வேண்டும் என்பதுதான் எல்லோருடைய நோக்கமும். நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வராமல் இருக்க என்ன விலையை வேண்டுமானாலும் கொடுப்போம்” என்று கூறியுள்ளார்.
இதன்மூலம் காங்கிரஸ், பாஜக அல்லாத கூட்டணி தலைமையில்தான் ஆட்சி என்ற தனது நிலைப்பாட்டிலிருந்து திருணமூல் காங்கிரஸ் கட்சி சற்று இறங்கியிருப்பதாகவே பார்க்கப்படுகிறது. பாஜக அரசை அகற்ற தேர்தலுக்குப் பிந்தைய காங்கிரஸ் கூட்டணியில் பங்கேற்க திருணமூல் காங்கிரஸ் தயாராக இருப்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது

கருத்துகள் இல்லை: