சனி, 2 மார்ச், 2019

முதுகலை மருத்துவப் படிப்புகள் தமிழகத்தில் அதிகம்!

முதுகலை மருத்துவப் படிப்புகள் தமிழகத்தில் அதிகம்!மின்னம்பலம் : முதுகலை பட்டயப் படிப்புகள் அனைத்தும் முதுகலை பட்டப் படிப்புகளாக மாற்றிக்கொள்ள, தமிழக அரசுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, நாட்டில் அதிக முதுகலை மருத்துவப் படிப்புகள் உள்ள மாநிலம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது தமிழகம்.
2018-19 கல்வியாண்டில் தமிழகத்திலுள்ள மருத்துவ முதுகலை பட்டப் படிப்புக்கான 1,250 இடங்கள் நிரப்பப்பட்டன. கடந்த ஆண்டு முதுகலை பட்டயப் படிப்புகளை, பட்டப் படிப்புகளாக மாற்றுவதற்கான அனுமதியை இந்திய மருத்துவ கவுன்சிலிடம் கோரியது தமிழக அரசு. இந்திய மருத்துவ கவுன்சிலில் உள்ள ஆட்சிக்குழுவானது இதற்கு ஒப்புதல் வழங்கியது.
இதையடுத்து, வரும் 2019-20ஆம் கல்வியாண்டில் மருத்துவ முதுகலைப் படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கை 1,758ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக, இந்தியாவில் அதிக மருத்துவ முதுகலை படிப்புக்கான இடங்கள் உள்ள மாநிலம் என்ற பெருமை தமிழகத்துக்குக் கிடைத்துள்ளது.
இது தொடர்பான ஆணை கடந்த 28ஆம் தேதி கிடைத்ததாகக் கூறியுள்ளார் தமிழக மருத்துவக் கல்வி இயக்குனர் எட்வின் ஜோ.
“மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி, மதுரை மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் மற்றும் கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரிகளில் இருந்த 384 மருத்துவ முதுகலை பட்டயப் படிப்புகள் முதுகலை பட்டப் படிப்புகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்த ஆறு கல்லூரிகளில் மட்டுமே பட்டயப் படிப்புக்கான இடங்கள் இருந்தன. தற்போது, தமிழகத்தில் டயாபெட்டாலஜியில் மட்டுமே 3 பட்டயப் படிப்பு இடங்கள் உள்ளன. இது தவிர கூடுதலாக 124 முதுகலை பட்டப் படிப்பு இடங்களை ஒதுக்கீடு செய்துள்ளது இந்திய மருத்துவ கவுன்சில் ஆட்சிக் குழு” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கூடுதலாக 350 எம்பிபிஎஸ் இடங்களை ஒதுக்கீடு செய்யுமாறு இந்திய மருத்துவ கவுன்சிலிடம் விண்ணப்பித்துள்ளது தமிழக மருத்துவக் கல்வி இயக்குனரகம். தமிழகத்தில் தான் அதிகளவில் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. பெரம்பலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கான கோரிக்கைகள் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: