புதன், 27 பிப்ரவரி, 2019

பாரிவேந்தர் வெளியேற்றம் ..... ராமதாஸ்- பாரிவேந்தர்: மீண்டும் பழைய போர்!

ராமதாஸ்- பாரிவேந்தர்: மீண்டும் பழைய போர்!மின்னம்பலம் : பாமக இருக்கும் பக்கம் திரும்பிக் கூட பார்க்கமாட்டேன் என்று கூறியிருக்கும் இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர், பாமக ஒரு தீண்டத் தகாத கட்சி என்றும் கூறியிருக்கிறார். மக்கள் நீதி மய்யம் கட்சியோடு கூட்டணி பேசிவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுக அணிக்கு பாமக வருகிறது என்ற தகவல் அறிந்த உடனேயே இம்முடிவை மேற்கொண்டுவிட்டார் பாரிவேந்தர். ஏனெனில் 2016 ஆம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் எஸ்.ஆர். எம். பல்கலைக் கழகத்தில் மோசடிகள் நடப்பதாகவும், அவற்றை விசாரிக்க வேண்டும் என்று கோரி தொடர்ந்து அறிக்கைகள் வெளியிட்டார் ராமதாஸ்.
எஸ்.ஆர்.எம். கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர்க்க வேந்தர் மூவிஸ் மதனிடம் பலர் பல லட்சக்கணக்கில் பல கோடி ரூபாய் கொடுத்ததை, மீட்டுத்தருமாறு பாதிக்கப்பட்டவர்கள் 2016 ஆம் ஆண்டு காலம்ஆரம்பத்தில் போலீசில் புகார்கள் கொடுக்க 2016 மே 29 ஆம் தேதி காசிக்குப் போகிறேன் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவானார் வேந்தர் மூவிஸ் மதன். இவர் பாரிவேந்தருக்கு நெருக்கமானவர்.

அப்போதில் இருந்து மதன் கைதான2016 நவம்பர் வரை பாரிவேந்தரைக் குறிவைத்து ஏராளமான அறிக்கைகளைக் கடுமையாகவே வெளியிட்டார் ராமதாஸ். பாரிவேந்தரின் முறைகேடுகள் பற்றி சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த பாரிவேந்தர், ‘ சாதாரண டாக்டராக இருந்த ராமதாஸுக்கு ஏது இவ்வளவு சொத்துகள் என்றும் வன்னியர் கல்வி அறக்கட்டளை மோசடிகள் பற்றியும் கேள்விகள் கேட்டார்.
இந்த பழைய போர்தான் இப்போது பாமகவுக்கும் ஐஜேகேவுக்கும் இடையே பலத்த பிளவை உண்டுபண்ணியிருக்கிறது. இதன் விளைவாகவே பாமக இருக்கும் அணியில் இருப்பதில்லை என்று முடிவெடுத்துவிட்டார் பாரிவேந்தர். ராமதாசா, பாரிவேந்தரா என்றால் அரசியல் ரீதியில் ராமதாஸ்தான் என்று முடிவெடுத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

கருத்துகள் இல்லை: