செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

டாக்டர் கிருஷ்ணசாமி தனித்து போட்டி?.. அவமானப்படுத்திய பாஜகா .. வீடியோ


LR Jagadheesan : கேட்டது பட்டியலினத்திலிருந்து வெளியேற்றம். கிடைத்ததோ கூட்டணியிலிருந்து வெளியேற்றம். எந்த தலித்திய அறிவுசீவியும் இது
தலித்துக்கு நேர்ந்த அவமானமா என்று ஆர்ப்பரிக்கவில்லை. கொக்கரிக்கவில்லை. கண்டிக்கவில்லை. கள்ளமௌனம் காக்கிறார்கள்.
எடுத்ததற்கெல்லாம் தமிழ்நாட்டில் 21% தலித்துகள் இருக்கிறார்கள் என்பவர்கள் அதில் நான்கில் ஒருபகுதியாக இருக்கும் ஒரு ஜாதியின் பிரதிநிதியாக தன்னை அறிவித்துக்கொண்டு செயற்படும் ஒரு அரசியல்வாதியை, அதுவும் மோடிக்கும் எடப்பாடிக்கும் தாசானு தாசனாய் இருந்தவரை பாஜகவும் அதிமுகவும் கூட்டணிபேச்சுவார்த்தைக்கு கூட கூப்பிடாமல் அவமதிப்பது குறித்து எதுவும் பேசவில்லை. எந்த தலித்திய அறிவுஜீவிக்கும் இது சிறு உறுத்தலாகக்கூட படவில்லை.

ஆனால் இந்த அறிவுஜீவிகளில் 99.9% பேர் திமுக கூட்டணியில் திருமா மரியாதையோடு நடத்தப்படவில்லை என்று ஓயாமல் பிலாக்கணம் பாடுகிறார்கள். அதுவும் திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடக்கும் சூழலிலும் திமுக கூட்டணியில் இருந்துகொண்டே திமுக கூட்டணி இறுதி செய்யப்படுவதற்கு முன்பே தான் போட்டியிடப்போகும் தொகுதியை தன்னிச்சையாக அறிவிப்பது முதல் பாமக வந்தால் நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்றதுவரை எல்லாவிதமான அடங்காப்பிடாரித்தனங்களையும் செய்தாலும் திருமாவை மரியாதையோடு நடத்தும் திமுகவை நோக்கிதான் இந்த 99.9% அறிவுஜீவிகளும் தங்களின் அறச்சீற்றத்தை, அறிவுரையை அனுதினமும் வழங்குவார்கள்.
இந்த இரட்டை அளவுகோலுக்கு என்ன காரணம்? வேறென்ன?
ஜாதியமனநிலைதான் ஒரேகாரணம். அண்ணல் அம்பேட்கர் தலித் என்பதை பயன்படுத்திய நோக்கம் வேறாக இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டின் தலித்தியம் என்பது ஜாதி ஒழிப்பு, மறுப்புக்கான அணிதிரட்டலல்ல. மாறாக தலித்துகளில் எண்ணிக்கை பலம் மிக்க ஒரே ஒரு ஒற்றை ஜாதியின் அணிதிரட்டலாக மட்டுமே அது ஆதிமுதலே உருவாக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டு வருகிறது.
அந்த ஒரு ஜாதியில் பிறக்க நேர்ந்தவர்களின் பிரச்சனைகள் மட்டுமே ஒட்டுமொத்த தலித் பிரச்சனையாக்கப்படும். அது சிறுமியின் கொடூரகொலைமுதல் சினிமாக்காரரின் சிக்கல்வரை அந்த ஒருஜாதியினரின் பிரச்சனைகள் மட்டுமே “தலித் பிரச்சனை” என்பதாக வடிவமைக்கப்படும். வாதாடப்படும். வலிந்து பொய்யாகவேனும்.
அதுவும் அந்த ஜாதியினரின் அப்பட்டமான ஜாதி ஆதிக்க கண்ணோட்டம் கூட ஜாதி பிரச்சனையே அல்ல என்றும் வாதாடப்படும். நீதிமன்றத்தில் சக தலித்துகளுக்கு எதிரான தீண்டாமைச்சுவரை ஆதரித்து வழக்கே கூட தொடுக்கப்படும். நடத்தப்படும். மற்ற பட்டியலின ஜாதிகளின் எந்த ஒரு பிரச்சனைக்கும் இப்படியான “தலித்திய அணிதிரட்டல்கள்” நடக்காது.
ஏனென்றால் தமிழ்நாட்டு தலித்தியம் என்பது கிறிஸ்தவ தொண்டுநிறுவன அனுசரணையோடு முன்னெடுக்கப்பட்டு திராவிட இயக்க எதிர்ப்பை மட்டுமே மூலதனமாக கொண்டு திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட Trojan Horse. திராவிட கோட்டையை தகர்க்கும்வரை இதற்கு பட்டுகுஞ்சலமெல்லாம் பூட்டி அழகுபார்ப்பார்கள். ஒருபக்கம் தேவாலயங்களும் மறுபக்கம் இந்துத்துவர்களும் இடையிடையே வஹாபியமும் சேர்ந்து மூன்றாடு ஊட்டிய குட்டியாக. திராவிட கோட்டை சரிந்த அடுத்தநொடி இதுவும் எரித்து சாம்பலாக்கப்படும். எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
திராவிடத்தின் ஆனப்பெரிய சீரழிவாக நீங்கள் கருதும் எந்த ஒரு அரசியல்வாதியும் கூட பொதுவெளியில் ஜாதியை ஆதரித்து பகிரங்கமாக பேசமுடியாது என்கிற நிலையை இன்றுவரை நீடிக்கச்செய்திருப்பதே திராவிட அரசியலின் பெரியாரின் ஜாதி ஒழிப்பு சித்தாந்தத்திற்கான, செயல்பாட்டுக்கான சான்று.
திருமாவின் பேரால் தினம் தினம் களமாடும் தலித்தியம் பேசும் ஆனப்பெரிய அறிவுஜீவிகள் யாரும் சக தலித்துகளின் பிரச்சனையைக்கூட தம் பிரச்சனையாக கருதி களமாடாமல் கள்ள மௌனம் காக்கும் கேவலத்துக்கு என்ன காரணம் என்பதை அந்த தலித்திய அறிவுசீவிகளின் மனசாட்சிக்கும் அறிவுநாணயத்துக்குமே விட்டுவிடுகிறேன். அப்படி ஒன்று அவர்களிடம் இன்னமும் மிச்சமிருந்தால்.

கருத்துகள் இல்லை: