திங்கள், 25 பிப்ரவரி, 2019

லயோலா வழக்கு தள்ளுபடி ...இந்து கடவுள், பிரதமரை அவமதிக்கும்வண்ணம் ஓவியக்கண்காட்சி

tamilthehindu :ஓவிய கண்காட்சியில் பிரதமர் மற்றும் இந்து கடவுள்களுக்கு அவமதிப்பு
ஏற்படுத்தும் வகையில் ஓவியங்கள் இடம் பெற அனுமதித்த தனியார் கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த ஜனவரி 19, 20-ம் தேதிகளில் ஓவிய கண்காட்சி நடத்தப்பட்டது. இதில், பிரதமர் மற்றும் இந்து கடவுள்களை கேலி செய்து ஓவியங்கள் வைக்கப்பட்டதாக எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா மற்றும் இந்து முன்னணி போன்ற அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டன.
இதையடுத்து, கல்லூரி நிர்வாகமும் மன்னிப்பு கோரியது. இந்நிலையில், இந்து - கிறிஸ்தவ மக்கள் மத்தியில் மோதலை ஏற்படுத்தும் வகையில், அவதூறு ஓவியங்கள் வைக்க அனுமதியளித்த சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர் மீது குற்ற நடவடிக்கையும், துறைரீதியான நடவடிக்கையும் எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த தாமோதரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தன் மனுவில், ஓவியங்கள் வரைந்து கண்காட்சியில் வைத்த ஓவியர்கள் முகிலன் மற்றும் காளீஸ்வரன் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கவும் கோரியுள்ளார். இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் ஏற்கனவே மன்னிப்பு கோரப்பட்டதால், இதுசம்பந்தமாக பதிவு செய்யப்பட்ட சி எஸ் ஆர் முடிக்கப்பட்டு விட்டதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை: