செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

யாருடனும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.. டாக்டர். கிருஷ்ணசாமி.. தனியாக களம் இறங்க முடிவு?

யாருடனும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை: கிருஷ்ணசாமிமின்னம்பலம் : கூட்டணி தொடர்பாக எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலைச் சந்திக்க அதிமுக, பாமக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ள நிலையில், பாமகவுக்கு 7+1 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி உள்ளிட்டவற்றுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் தகவல் வெளியானது. இதில் புதிய தமிழகம் கட்சி கடந்த சில ஆண்டுகளாக பாஜகவுடன் நட்புடன் இருந்து வந்திருக்கிறது.
இக்கூட்டணியில் புதிய தமிழகத்துக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்படலாம் என்றும் தகவல் வெளியான நிலையில், பேச்சுவார்த்தையே நடைபெறவில்லை என்று மறுத்துள்ளார் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி.

புதிய தமிழகம் கட்சியின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று (பிப்ரவரி 25) நடைபெற்றது. அதன்பிறகு சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, “எங்களுடைய பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசும், தமிழக அரசும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை. இருந்தாலும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் நாங்கள் உள்ளோம். ஏழு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எங்களை தேவேந்திர குல வேளாளர்கள் என்று அறிவிப்பதில் அரசுக்கு எந்த நிதிச்சுமையும் வரப்போவதில்லை. வரும் மார்ச் 6ஆம் தேதிக்குள் அதை அறிவித்தால் அதற்குத் தகுந்தாற்போல கூட்டணி அமைக்கப்படும். இல்லையெனில் வேறு கட்சி தேர்தல் அறிக்கையில் இதுகுறித்து குறிப்பிட்டால் அதையும் பரிசீலிப்போம். இந்த இரண்டும் இல்லாதபட்சத்தில் 12 சட்டமன்ற தொகுதிகள், 20 மக்களவைத் தொகுதிகளைத் தேர்வு செய்து மக்களைச் சந்திக்க முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
கூட்டணி குறித்து யாருடனும் பேசவில்லை என்று தெரிவித்த கிருஷ்ணசாமியிடம், பாஜகவுடன் இணக்கமாக இருந்தீர்களே என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “ஓர் அரசியல் கட்சியுடன் நட்பாக இருப்பதற்கும் அது தேர்தல் கூட்டணியாக மாறுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது” என்று பதிலளித்தார்.

கருத்துகள் இல்லை: