புதன், 13 பிப்ரவரி, 2019

திருச்சி மாநாட்டிற்கு அனுமதி மறுப்பு ! நடப்பது கார்ப்பரேட் காவி பாசிசம்தான் | மக்கள் அதிகாரம் கண்டனம்


அரசமைப்பு சட்டத்துக்கு அப்பாற்பட்ட ஒரு "மேலிடத்தின் ஆட்சி"தான் தற்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
பாஜக-வும் ஆர்.எஸ்.எஸ்-ம் தான் அந்த "மேலிடம்" திருச்சியில் 23.02.2019  அன்று நடக்கவிருந்த எமது மாநாட்டுக்கு, சட்டவிரோதமான காரணங்களைச் சொல்லி, திருச்சி மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
மோடி – எடப்பாடி அரசுகளின் கீழ் வாழ்வுரிமை பறிக்கப்பட்ட மக்களோ, அவர்களுக்காக போராடும் இயக்கங்களோ தமது உரிமை பற்றி பேசக்கூட முடியாது என்ற சூழ்நிலை கடந்த பல மாதங்களாகவே தமிழகத்தில் நிலவி வருகிறது. ஸ்டெர்லைட், எட்டு வழிச்சாலை, ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள், அந்த திட்டங்களுக்கு எதிராக தமது கருத்தைப் பேசினாலோ, துண்டறிக்கை விநியோகித்தாலோ கூட கைது செய்யப்படுகின்றனர்.

இதனை எதிர்த்து, “அடக்குமுறைதான் ஜனநாயகமா?” என்ற தலைப்பில் திருச்சியில் மாநாடு நடத்த கடந்த செப்டம்பர் மாதத்தில் அனுமதி கேட்டிருந்தோம். அன்று அதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது.
அனுமதி மறுப்புக்கு எதிராக நாங்கள் தொடுத்த வழக்கில், போலீசின் உத்தரவை ரத்து செய்து 21.12.2018 அன்று மதுரை உயர்நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பின் அடிப்படையில்தான் மேற்சொன்ன மாநாட்டை நடத்த விண்ணப்பித்திருந்தோம். “காவி பாசிசம் என்று கூறுவது தேசியக் கொடியை அவமதிப்பதாகும்” “கோவன் மீது வழக்கு இருப்பதால் அவர் பாடக்கூடாது” “உங்களால் விமரிசிக்கப்படும் கட்சிகள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும்” – என்பன போன்ற சட்டவிரோதமான காரணங்களைக்கூறி மீண்டும் எமது மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி மறுத்திருக்கிறது.
“தமிழ்நாட்டில் எச்.ராஜா போன்ற காவி பாசிஸ்டுகளும், ஸ்டெர்லைட் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களும் மட்டும்தான் பேசலாம். அவர்களை எதிர்க்கும் தமிழ்மக்கள் பேசக்கூடாது” என்பது எழுதப்படாத சட்டமாக அமல்படுத்தப்படுகிறது. “அரங்குகளில் கூட்டம் நடத்த போலீசின் அனுமதி தேவை இல்லை. ஆனால் அரங்க உரிமையாளர்களை மிரட்டி தடுத்து வருகிறது. கூட்டம் நடத்த யார் அனுமதி கேட்டாலும் ஒரு நீண்ட வினாத்தாளைக் கொடுத்து, “கூட்டத்தில் யார் என்ன பேசப்போகிறார்கள்? மேடையில் பாடவிருக்கும் பாடல்களின் வரிகள் என்ன? பொதுமக்கள் எத்தனை பேர் வருவார்கள் – அவர்களுடைய முகவரி என்ன?” என்று தனது அதிகார வரம்புக்கு அப்பாற்பட்ட பல கேள்விகளை காவல்துறை எழுப்புகிறது.

நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால், அங்கேயும் காவல்துறை சட்டப்படியான காரணங்களை சொல்வதில்லை. பேச்சாளர்கள் செயல்வீரர்கள் மீது டஜன் கணக்கில் பொய் வழக்குகளைப் போட்டு வைத்துக் கொண்டு “பேச்சாளர்கள் மீதும், நிர்வாகிகள் மீதும் பல வழக்குகள் உள்ளன” என்று கூறி அனுமதி மறுக்கிறது. ஒரு சுவரொட்டி ஒட்டினால் அதற்கு எதிராக பல காவல்நிலையங்களில் தனித்தனியே வழக்கு பதிவு செய்யப்படுகிறது. நடத்தப்படும் ஒவ்வொரு ஆர்ப்பாட்டத்திற்கும், போராட்டத்திற்கும் ஒரு வழக்கு பதிவு செய்து வைத்துக் கொள்ளப்படுகிறது. வழக்கு இருப்பவர்கள் கூட்டம் நடத்தக்கூடாது என்றால் அதிமுகவும், பா.ஜ.கவும் எப்படி பேசுகிறார்கள்.?.
கூட்டம் நடத்துவதை தடுப்பது மட்டுமல்ல துண்டறிக்கை, சுவரொட்டி, ஓவியம்,  பாடல் என்று அனைத்துக்கும் தடை –  வழக்கு என்பதுதான் தமிழகத்தின் இன்றைய நிலை.

எதைக்கேட்டாலும் சட்டப்படியான விளக்கத்தை சொல்வதற்குப் பதிலாக, “மேலிடத்து உத்தரவு” என்று காவல்துறை உயரதிகாரிகள் பதிலளிக்கிறார்கள். அரசமைப்பு சட்டத்துக்கு அப்பாற்பட்ட ஒரு “மேலிடத்தின் ஆட்சி”தான் தற்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. பாஜக-வும் ஆர்.எஸ்.எஸ்-ம் தான் அந்த “மேலிடம்”. நடப்பது கார்ப்பரேட் காவி பாசிசத்தின் ஆட்சிதான் என்பதை மாநாட்டுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை நிரூபிக்கிறது.
மக்களின் வாழ்வைப் பறிப்பது மட்டுமல்ல, அவ்வாறு வாழ்வைப் பறி கொடுத்தவர்கள் எதிர்த்துக் குரலெழுப்பவும் கூடாது என்ற இந்த ஒடுக்குமுறையை முறியடிக்க தமிழக மக்கள், கட்சிகள், இயக்கங்கள், ஊடகங்கள் ஆகிய அனைவரும் ஒன்றிணைய வேண்டுமெனக் கோருகிறோம்.
பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டோர்
வழக்கறிஞர். சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்
தோழர். காளியப்பன், பொருளாளர், மக்கள் அதிகாரம்.
தோழர். கற்பக விநாயகம், தலைமைக்குழு உறுப்பினர்
தோழர். வெற்றி வேல் செழியன், தலைமைக்குழு உறுப்பினர்.
தோழர். அமிர்தா, சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர்.
தோழர். மருதையன், பொதுச்செயலாளர், மக்கள் கலை இலக்கியக் கழகம்.
தோழர். கோவன், ம.க.இ.க. கலைக்குழு.
மக்கள் அதிகாரம்
தோழமையுடன்,
வழக்கறிஞர். சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,

மக்கள் அதிகாரம்.

கருத்துகள் இல்லை: