வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

பாமக, சிறுத்தைகள் இரண்டுமே திமுக அணியில் ? திமுக தரப்பில்....

பாமக - சிறுத்தை: ஸ்டாலின் போடும் கணக்கு!மின்னம்பலம் : தமிழ்நாட்டில் கூட்டணிப் பேச்சு சூடு பிடித்திருக்கிறது. தமிழ்நாடு பாஜகவுக்கான பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று (பிப்ரவரி 14) இரவு சென்னை வந்தார். அதிமுகவோடும், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளோடும் புரபோஸ் செய்வதற்காகக் காதலர் தினத்தன்று அவர் சென்னை வந்திருக்கிறார்.
அதேநேரம், அதிமுக அணியில் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படும் பாமகவின் ரகசிய காய்நகர்த்தல்கள் அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்ல, அக்கட்சியின் நிர்வாகிகளுக்கிடையிலும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன. கூட்டணி பற்றி ஊடகங்கள் பலவிதமாக எழுதுவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வருத்தத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தினார். ஆனால், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு திசைகளில் பாமக நடத்தும் பேச்சுவார்த்தைகள் பாமகவின் கூட்டணி நிலைப்பாடு பற்றிய கேள்விகளையும் எழுப்பியுள்ளன.
இந்த வகையில் கடந்த வாரம் அதிமுகவோடு பாமகவின் டீல் முடிந்துவிட்டது என்று ரகசியத் தகவல் கிடைத்த நிலையில், இன்னொரு பக்கம் திமுகவுக்கும் கூட்டணிக் கதவைத் திறந்தே வைத்திருந்தது பாமக.

பாஜக தமிழகப் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தமிழகம் வருவதற்கு முன்பாகவே, பாமகவின் இளைஞரணித் தலைவர் அன்புமணியோடு பேசுவதற்காகத் தொடர்ந்து முயன்றபோதும் கோயலின் லயனில் அன்புமணி கிடைக்கவில்லை. தொடர்ந்து முயன்றபோதும் அன்புமணியின் தொடர்பு கிடைக்காததால், அன்புமணிக்கு நெருக்கமான தொழிலதிபர் மூலம் அவரைத் தொடர்புகொண்டார்.
இந்த நிலையில்தான் அன்புமணி திமுக தலைவர் ஸ்டாலின் மருமகனான சபரீசன் சந்திப்பு பற்றிய தகவல்கள் ஐபி மூலம் மத்திய அரசுக்குத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அன்புமணியை அவருக்கு நெருக்கமான மேலும் சில நண்பர்கள் மூலம் தொடர்புகொண்ட பாஜக மேலிடம், ‘அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள்’ என்று சொல்லி தொகுதிகளுக்கு அப்பாற்பட்ட சில விஷயங்களைபாஜகவே செய்து தரும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
அதேநேரம் திமுக தரப்பில் ‘பாமக - தேமுதிக ஆகிய இரு கட்சிகளும் அதிமுக அணியில் இடம்பெற்றால் அதுதான் வெகுஜன கூட்டணி போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும். எனவே இரண்டில் ஒரு கட்சியை திமுக அணிக்குள் கொண்டுவர வேண்டும்’ என்றும் ஸ்டாலினிடம் சொல்லப்பட்டது. இதற்கு ஸ்டாலின் பச்சைக் கொடி காட்டிய நிலையில்தான் கடைசி கட்டத்தில் திமுக அணிக்குள் பாமகவை செட் செய்வதற்கான தீவிர நகர்த்தல்கள் நடைபெற்று வருகின்றன.
பாமக திமுகவை நோக்கித் திரும்பினால் திமுக அணியில் நீண்டகாலமாக இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் என்னாகும் என்ற கேள்வியும் பெரிய அளவில் எழுந்து நிற்கிறது.
பாமக இருக்கும் அணியில் இடம்பெற மாட்டோம் என்பதைக் கொள்கை முடிவாகவே வைத்திருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன். சில மாதங்களுக்கு முன் திமுக பொருளாளர் துரைமுருகன் தொலைக்காட்சிப் பேட்டியில், ‘திமுக கூட்டணியில் காங்கிரஸ், முஸ்லிம் லீக் தவிர வேறு யாரும் இல்லை. கடைசி நேரத்தில் வருபவர்களும் உண்டு. எங்களுடனே இருப்பவர்கள் விலகிக் கொள்வதும் உண்டு’ என்று பேட்டியளித்திருந்தார்.
அப்போது திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இருக்கிறதா என்பதை திமுகதான் தெரிவிக்க வேண்டும் என்று திருமாவளவன் பேட்டியளித்தார். அதன்பின் ஸ்டாலினை சந்தித்தபோது கூட, ‘பாமகவைக் கூட்டணியில் சேர்த்துக்கொள்வது என்பது உங்கள் விருப்பம். உங்கள் முடிவு அதுவாக இருந்தால் நாங்கள் அதற்குத் தடையாக இருக்க மாட்டோம். அதேநேரம் பாமக - பாஜக இருக்கும் அணியில் எங்களால் இடம்பெற முடியாது’ என்று நேரடியாகவே சொல்லியிருக்கிறார். அப்போது ஸ்டாலின் திருமாவளவனிடம், ‘அப்படியெல்லாம் எதுவும் நடக்காது. நீங்க நம்ம கூட்டணியிலதான் இருக்கீங்க’ என்று பதில் தெரிவித்திருக்கிறார். அதன் அடிப்படையில்தான் தொடர்ந்து திமுகவுடன் தோழமை பாராட்டி வந்தார் திருமாவளவன்.
இப்போது திமுக கூட்டணிக்கு வரும் என்ற செய்திகள் வரும் நிலையில் திருமாவளவனும் தன் கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறார். ஆனால், ஸ்டாலின் நெருங்கிய வட்டாரத்திலோ, “பாமக, சிறுத்தைகள் இரண்டுமே திமுக அணியில் இடம்பெற்றாலும் நல்லது என்று நினைக்கிறார் ஸ்டாலின். 2004 போல நாற்பதுக்கு நாற்பது ஜெயிக்க நல்ல வாய்ப்பிருக்கும் நிலையில் அனைவரையும் ஒருங்கிணைத்து தேர்தலைச் சந்தித்தாலும் நல்லது என்றே நினைக்கிறார் ஸ்டாலின். ஆனால், திமுக அணிக்குள் பாமக வரும் பட்சத்தில், திருமாவளவனை தக்கவைத்துக் கொள்வது என்பது திமுகவுக்கு தர்ம சங்கடம்தான்” என்று கூறுகிறார்கள்.

கருத்துகள் இல்லை: