திங்கள், 11 பிப்ரவரி, 2019

திமுக கூட்டணியில் விசிகவும் பாமகவும் இடம் பெற வாய்ப்பு இல்லை? தினமலர் ..

சென்னை: தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை சேர்க்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 'இரு கட்சிகளையும் சேர்க்கக்கூடாது' என தி.மு.க., மூத்த தலைவர்கள் பலர் வலியுறுத்தி உள்ளனர். இதுதொடர்பான ஸ்டாலினின் சமரசத்தையும் ஏற்க மறுத்து அவருடன் காரசார விவாதமும் நடத்தியுள்ளனர். அதனால் குழப்பத்தை தவிர்க்கும் வகையில், இரு கட்சிகளுக்கும் இடமில்லை என்ற அறிவிப்பு தி.மு.க.,வில் இருந்து விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலுக்கு, தி.மு.க., தலைமையில் காங்கிரஸ், ம.தி.மு.க., - கம்யூனிஸ்டுகள், முஸ்லிம் லீக், வி.சி., உட்பட ஒன்பது கட்சிகள் அணி சேர தீர்மானித்துள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு தி.மு.க., தரப்பில் துவக்கப்படலாம் என நம்பப்படுகிறது.
இந்நிலையில் தி.மு.க., பொருளாளர் துரைமுருகன் அளித்த பேட்டி ஒன்றில், 'லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் அதிக 'சீட்'களை கேட்கும் கட்சிகள் வெளியேறும்; சில கட்சிகள் உள்ளே வரும்' என்றார். இது, 'தி.மு.க., அணியில் பா.ம.க., சேரும்; விடுதலை சிறுத்தைகள் வெளியேறும்' என்பதை அவர் சூசகமாக தெரிவித்ததாக கூட்டணி கட்சியினர் கருதுகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களை சந்தித்த இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன், ''கூட்டணி தொடர்பாக, துரைமுருகன் சில கருத்துக்களை கூறி வருகிறார். அது ஏன் என புரியவில்லை,'' என்றார்.< இதற்கிடையில் ஸ்டாலின் குடும்ப உறுப்பினர் ஒருவரும், ஸ்டாலினை முன்னிலைப்படுத்தும் 'ஒன் மேன் குரூப்'பை சேர்ந்த நிர்வாகி ஒருவரும் இணைந்து பா.ம.க.,விடம் ரகசிய பேச்சு நடத்தியுள்ளனர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த தகவலை அறிந்த வி.சி., தலைவர் திருமாவளவன் கோபம் அடைந்துள்ளார்.

அதனால்தான், 'பா.ம.க., இடம் பெறும் அணியில் விடுதலை சிறுத்தைகள் இடம் பெறாது; சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவேன்' என அவர் அறிவித்துள்ளார். மேலும் பா.ம.க.,வை கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்பதில் தி.மு.க., மகளிர் அணி மாநில செயலர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் அ.ராஜா, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு போன்றவர்களும் ஒருமித்த கருத்துடன் உள்ளனர். அதேநேரத்தில், வி.சி.,யை சேர்க்காமல் பா.ம.க.,வை மட்டும் சேர்க்கலாம் என துரைமுருகன்,
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் போன்றவர்கள் விரும்புகின்றனர்.
சமாதான முயற்சி:

இரு கட்சிகளையும் கூட்டணியில் சேர்ப்பதா, வேண்டாமா என்பதில் தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதனால் மாறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ள இரு தரப்பினரிடமும் கருத்துக்களை கேட்டறிந்த தி.மு.க., தலைவர் ஸ்டாலின் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அந்த நேரத்தில் துரைமுருகன், ஸ்டாலின் மற்றும் சில தலைவர்கள் இடையே காரசார விவாதமும் நடந்துள்ளது. அப்போது ஸ்டாலின் அளித்த விளக்கம் குறித்து தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: 2016 சட்டசபை தேர்தலில், பா.ம.க., வி.சி., கட்சிகள் கூட்டணியில் இல்லாமலேயே 98 தொகுதிகளில் தி.மு.க., வெற்றி பெற்றது. பா.ம.க., தனித்துப் போட்டியிட்டது. அதன் முதல்வர் வேட்பாளராக அன்புமணி அறிவிக்கப்பட்டார்.
ஒரே மேடையில் தன்னுடன் விவாதிக்க தயாரா என ஸ்டாலினுக்கு அவர் சவால் விட்டார். இருந்தும் பா.ம.க.,வால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. அதேபோல மக்கள் நல கூட்டணியில் இணைந்த வி.சி.,யும் எங்கும் வெற்றி பெறவில்லை.
பொருந்தா கூட்டணி:

அதே நேரத்தில் 2011 சட்டசபை தேர்தலில் பா.ம.க., - வி.சி., கட்சிகள் தி.மு.க., கூட்டணியில் இருந்தன. ஆனாலும் அது பொருந்தாக் கூட்டணியாகி தி.மு.க., வெற்றி வாய்ப்பை இழந்தது. எனவே அ.தி.மு.க., உடன், பா.ம.க., கூட்டணி அமைத்தால் வி.சி.,க்கு ஒரு 'சீட்' மட்டும் கொடுக்கலாம். இவ்வாறு ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
உடனே துரைமுருகன், 'வி.சி.,க்கு சட்டசபை தேர்தலில் இரண்டு; லோக்சபா தேர்தலில் ஒரு 'சீட்' வழங்கும் நிலையில் தான் அந்த கட்சியின் ஓட்டு வங்கி உள்ளது. அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இடம் பெற்றால் நம் அணியில் வி.சி.,யை சேர்ப்போம். இல்லையெனில் அந்தக் கட்சியை நம் கூட்டணியில் சேர்க்க வேண்டியதில்லை' என தெரிவித்துள்ளார்.
இந்த விவாதங்களை பார்க்கும் போது, பா.ம.க., மற்றும் வி.சி.,யை கூட்டணியில் சேர்க்கும் விஷயத்தில் தி.மு.க.,வில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது தெளிவாகிறது. அதனால், குழப்பத்தை தவிர்க்கும் வகையில் தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., மற்றும் வி.சி., கட்சிகளுக்கு இடமில்லை என்ற அறிவிப்பு விரைவில் வெளியானாலும் ஆச்சர்யமில்லை என்கின்றன தி.மு.க., வட்டாரங்கள்.

கருத்துகள் இல்லை: