செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

ராகுல் காந்தி தமிழகத்தில் போட்டியிடுகிறார் .... நம்பகமான தகவல் ..

மின்னம்பலம் : அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில்
ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடக் கூடும் என்று நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
1969ஆம் ஆண்டு நேசமணி மறைவினால் கன்னியாகுமரி (அன்றைய நாகர்கோவில் மக்களவை) தொகுதியில் இடைத்தேர்தல் வந்தபோது, அந்தத் தொகுதியில் காமராஜர் போட்டியிட வேண்டும் அப்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் சி.சுப்பிரமணியன் விரும்பினார். இதற்காக காமராஜரிடம் அவர் வற்புறுத்தினார்.
1967 தேர்தலில் விருதுநகரில் பெ. சீனிவாசன் என்ற இளைஞரிடம் தோல்வி அடைந்த காமராஜர் உடனடியாக கன்னியாகுமரியில் போட்டியிட விரும்பவில்லை. தான் போட்டியிட்ட நினைப்பது குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய விரும்பினார். அப்போது தீவிரமான காங்கிரஸ் இளைஞராக இருந்த பழ.நெடுமாறன் குமரி முழுவதும் கிராமம் கிராமமாக ஓப்பன் ஜீப்பில் சென்று இங்கே காமராஜர் போட்டியிடலாமா என்று மக்களிடம் கேட்டார். மக்களோ கண்டிப்பாக அவரே போட்டியிட வேண்டும் என்று கூறினர். பலர் எழுதிக் கையெழுத்து போட்டுக் கொடுத்தனர்.

இதையெல்லாம் கொண்டுபோய் தமிழக காங்கிரஸ் தலைவர் சி.சுப்பிரமணியத்திடம் கொடுத்தார் நெடுமாறன். அதன் அடிப்படையில் காமராஜர் 1969 இடைத்தேர்தலில் நாகர்கோவில் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக இரட்டைக் காளை சின்னத்தில் நின்று அமோகமாக வெற்றிபெற்றார். மீண்டும் 71 தேர்தலில் நின்று வென்றார்.
இது கன்னியாகுமரி கண்ட வரலாறு. காமராஜர் போட்டியிட்ட அன்றைய நாகர்கோவில் இன்றைய கன்னியாகுமரி தொகுதியில்தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடக் கூடும் என்ற பேச்சு காங்கிரஸ் வட்டாரத்தில் பலமாக உலவுகிறது.
தமிழகத்தில் காங்கிரஸ் முக்கிய தலைவர்களுக்காகக் குறிப்பிட்ட தொகுதிகளை திமுகவிடம் கேட்டு வருகிறது காங்கிரஸ். அகில இந்திய செயலாளர்கள் டாக்டர் செல்லக்குமார் கிருஷ்ணகிரி, மாணிக் தாக்கூர் விருதுநகர், கிறிஸ்டோபர் திலக் பெரம்பலூர், சிடி மெய்யப்பன் வடசென்னை, மோகன் குமாரமங்கலம் தமிழ்நாடு செயல் தலைவர் சேலம், ஜான்சி ராணி தென்காசி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோடு, கார்த்தி சிதம்பரம் சிவகங்கை, முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் திருச்சி மற்றும் கடலூர், விழுப்புரம் தொகுதிகளையும் கேட்டுவருகிறது காங்கிரஸ்.
இது தவிர கன்னியாகுமரி தொகுதி மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. இத்தொகுதியில் இம்முறை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியே போட்டியிடலாம் என்பதே, முக்கியத்துவத்துக்குக் காரணம். செயல் தலைவர் வசந்தகுமார் இந்தத் தொகுதியைக் கேட்டு வரும் நிலையில் ராகுல் காந்தியே போட்டியிட்டால் கேட்க வேண்டுமா என்ன?
காமராஜர் இங்கே ஜெயித்த வரலாற்றை எடுத்துச் சொல்லி ராகுல் காந்தியை குமரியில் நிற்க வைக்க ப.சிதம்பரம் தீவிர முயற்சி எடுத்து வருவதாகச் சொல்கிறார்கள் காங்கிரஸ் வட்டாரத்தில். ராகுல் குமரியில் போட்டியிடும்பட்சத்தில் பிரியாங்காவும் ராகுலுக்காக குமரிக்கு சில நாட்கள் பிரச்சாரம் செய்ய வருவார் என்கிறார்கள். வடக்கே அமேதி, தெற்கே குமரி என்று போட்டியிட்டால் இந்தியாவை இணைக்கும் மாபெரும் தலைவராக ராகுல் காந்தி விளங்குவார் என்றும் காங்கிரஸ் வட்டாரத்தில் சொல்கிறார்கள்.
2017 இறுதியில் குமரியைத் தாக்கிய ஓகி புயலின்போது ராகுல் காந்தி குமரி வந்து மீனவர்களை எல்லாம் தேடித் தேடி சந்தித்து ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: