புதன், 12 டிசம்பர், 2018

காடுவெட்டி சோழன் என்கின்ற ராஜராஜ சோழனை கண்டு பிடித்த ஹூல்ஸ் Eugen Julius Theodor Hultzsch

Eugen Julius Theodor Hultzsch (29 March 1857 - 16 January 1927) was a German Indologist and epigraphis

சோழனை கண்டு பிடித்த Hultzsch

செ.கார்கி : தமிழ்த் தேசியவாதிகளால் மாமன்னன் என்று கொண்டாடப்படும்
ராஜராஜ சோழனைப் பற்றியும் கொஞ்சம் சுருக்கமாகப் பார்த்து விடுவோம். இல்லை என்றால் அவர்கள் கோபித்துக் கொள்வார்கள். தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழன் என்ற மன்னனை கண்டுபிடித்தவர் ஹூல்ஸ் என்ற ஜெர்மானியர்  ஆவார். இவர்தான் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் முதன்முதலாக பெரிய கோவிலில் உள்ள கல்வெட்டுகளைப் படித்து இந்த எழுத்துக்கள் தமிழ்தான் என்றும், அவனுடைய காலம் கி.பி 985-1113 என்றும் சொன்னவர். அதற்கு முன் தஞ்சை பெரிய கோவிலைக் கட்டியது காடுவெட்டி சோழன் என்னும் மன்னன்தான் என்று பெரும்பான்மை தமிழ்மக்கள் நினைத்துக்கொண்டு இருந்தனர். ஆக சீண்டுவார் யாருமின்றி அனாதையாக கல்வெட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராஜராஜனை அதில் இருந்து எழுப்பிவிட்ட பாவத்தைச் செய்தவர் ஓர் ஜெர்மானியர் ஆவர்.

இந்த ராஜராஜன் சாதாரண அரசன் அல்ல, பத்தாம் நூற்றாண்டிலேயே வாழ்ந்த நரேந்திர மோடி ஆவான். அவனது உடல், பொருள், ஆவி என அனைத்தயும் பார்ப்பனியத்தை வளர்ப்பதற்காகவே செலவிட்டவன். இந்த ராசராசன் இரண்டாம் பராந்தகனின் இரண்டாவது மகன் ஆவான். அவனது அண்ணன் ஆதித்த கரிகாலன் என்ற பட்டத்து இளவரசன். அவன் உடையார்குடி பார்ப்பனர்களால் கொல்லப்படுகின்றான். கொலையாளிகள் பார்ப்பனர்கள் என்ற ஒரே காரணத்திற்காக ராஜராஜ சோழன் அவர்களைத் தண்டிக்காமால் விட்டுவிட்டான் என்ற செய்தி உடையாளூர் கல்வெட்டின் மூலம் தெரிந்துகொள்ள முடிகின்றது. அண்ணனின் உயிரை விட பார்ப்பனின் உயிர் ராஜராஜனுக்குப் பெரிதாகத் தெரிந்தது. பார்ப்பனனைக் கொன்றால் பிரம்மஹத்தி தோஷம் வந்துவிடும் என்ற பார்ப்பன சிந்தனையே அவனை அவ்வாறு செய்ய வைத்தது.
இன்று தெலுங்கர்களாலும், மலையாளிகளாலும், கன்னடர்களாலும் தமிழ்நாட்டில் வளங்கள் சுரண்டப்படுவதாக கூப்பாடு போடும் தமிழ்த் தேசியவாதிகள் ராஜராஜனின் அரசியல் பிழைப்புவாதத்தை தெரிந்து கொள்ள வேண்டும். “நாடுபிடிக்கும் ஆசையில் இருந்த ராஜராஜ சோழன் தன் மகள் குந்தவையை வேங்கி நாட்டு மன்னன் விமலாத்தித்தனுக்கு மணம் முடித்து வைத்தான். அது போல ராசேந்தர சோழன் தன்னுடைய மகள் அம்மங்கா தேவியை கீழைச் சாளுக்கிய மன்னன் முதலாம் ராஜராஜனுக்கு மணம் முடித்து வைத்தார். பின்னாளில் அரியணை ஏறிய முதலாம் குலோத்துங்கன் அம்மங்காதேவியின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது தமிழனுக்குப் பிறக்காதவன்.
ராஜராஜன் பார்ப்பனியத்தின் ஊதுகுழலாக இருந்தது மட்டும் அல்லாமல் தாழ்த்தப்பட்ட மக்களை மிகவும் கேவலமாக நடத்தினான். அவனது ஆட்சிக்காலத்திலேயே தாழ்த்தப்பட்ட மக்கள் தனிக்குடியிருப்புகளில் அதாவது ஊருக்கு வெளியே குடிவைக்கப்பட்டனர். பெரியகோவில் கல்வெட்டுகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்த பகுதிகளைக் குறிக்கும் விதமாக பறச்சேரி, தீண்டாச்சேரி என்கிற பெயர்கள் குறிப்பிடுவதில் இருந்தே இதைத் தெரிந்து கொள்ளலாம்.
ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் தஞ்சைப் பெரிய கோவிலில் 400க்கும் மேற்பட்ட பெண்கள் தேவரடியார்களாக பணியமர்த்தப்பட்டனர் என்ற செய்தியை தஞ்சை பெரியகோவில் வட வெளிச்சுற்றுச் சுவரில் உள்ள தளிச்சேரிக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இந்தப் பெண்களுக்கு மணம் புரியும் உரிமை கிடையாது. இந்தப் பெண்கள் அர்ச்சகர்களின் ஆசைக்குட்பட்ட வைப்பாட்டிகளாகவும் விளங்கினர். இப்படி தமிழ்மன்னர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்தத் தேவதாசிமுறை மருத்துவர் முத்துலெட்சுமி ரெட்டி அவர்களின் முன்முயற்சியால் தான் ஒழிக்கப்பட்டது என்பதையும் அதற்குத் தமிழ்த் தேசியவாதிகளின் முன்னோர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர் என்பதும் வரலாறு.
ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் தான் பார்ப்பனர்களுக்கு பிரமதேயம், தேவதானம், சீவிதம் போன்ற பெயர்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தானமாக கொடுக்கப்பட்டன. அப்படி கொடுக்கப்பட்ட நிலங்களுக்கு எந்த வரியும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. ஏழை விவசாயிகள் மீது கொடுமையான வரிகள் விதித்து, அவர்களைத் துன்புறுத்திய ராஜராஜன் பார்ப்பனனின் நிலங்களுக்கு வரிவிதிக்காதது மற்றும் அவர்களுக்குச் சலுகைகள் வழங்கியதில் இருந்தே அவனின் பார்ப்பன அடிமைத்தனம் பல் இளிக்கின்றது.
கங்கையைக் கொண்டான், கடாரம் கொண்டான் என்றெல்லாம் புகழ்கின்றார்கள். ஆனால் சாமானிய மக்களுக்கு என்ன செய்தான் என்பதுபற்றி யாரும் வாய் திறப்பதில்லை. சாதிவெறி பிடித்தவனாகவும், பார்ப்பன அடிமையாகவும், போர்வெறி பிடித்தவனாகவும் உள்ள ஒருவன் சாமானிய மக்களுக்கு எதைச் செய்திருக்கப் போகின்றான்? மக்கள் மீது எக்கச்சக்கமாக வரி விதித்து ஊர் ஊருக்கு கோவில்கட்டியதைத் தவிர அவனது சாதனைகள் என்று எதைச் சொல்வது?
நம்முடைய கேள்வி எல்லாம் ஒரு மன்னனை எதற்காக ஆதரிக்க வேண்டும், எதற்காக எதிர்க்க வேண்டும் என்பதுதான். பல நாடுகளை வெற்றி கொண்டான், கோவில் கட்டினான், குளங்களை வெட்டினான், ஏரிகளை உருவாக்கினான் என்பதற்காக ஒரு மன்னனை தமக்கான வழிகாட்டியாக ஒருவனால் ஏற்க இயலுமா? வரலாற்றை இயக்கவியல் பொருள்முதல்வாத வழியில் ஆய்வு செய்யும் யாரும் இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆட்சி செய்த மன்னர்கள் மீது வெற்றுப் பிரமிப்பை உருவாக்கிக் கொள்வதால் யாருக்கு லாபம்? சமூக மாற்றம் வேண்டுவோர் எப்படி வரலாற்றைப் பார்க்க வேண்டும்? பத்துப்பைசா பிரயோசனம் இல்லாத பழம்பெருமைகள் பேசி ஒருவன் சமூக மாற்றத்தைக் கொண்டுவர விரும்புகின்றான் என்றால் நிச்சயம் அவன் ஆளும் வர்க்கத்தின் கைக்கூலியாகவே இருப்பான். ஜாரை எதிர்த்துதான் ரஷ்ய புரட்சி நடந்தது. சீன நிலப்பிரபுத்துவ அதிகார வர்க்கத்தை எதிர்த்துதான் சீனப்புரட்சி நடந்தது. இங்கே யாரும் தங்களை ஆண்ட மன்னன் என்பதற்காக அவர்களை எதிர்க்காமல் விட்டுவிடவில்லை. தங்களை ஆண்ட, ஆளும் மன்னன் ஒரு கொடுங்கோல்வாதி, பிற்போக்குவாதி, ஏகாதிபத்திய அடிமை என்று தெரிந்தபோது நெஞ்சுரத்தோடு எதிர்த்து நின்று அவர்களை வீழ்த்தினார்கள். அதற்குப் பெயர்தான் புரட்சி. சாதிவெறி பிடித்தவனையும், பார்ப்பனியத்தின் அடிமையாகக் கிடந்தவனையும் மாபெரும் இலட்சியவாதியாக ஒருவன் சித்தரிக்கின்றான் என்றால், அவனும் அதைப் போல சாதிவெறி பிடித்தவானகவும் பார்ப்பனியத்தின் அடிமையாகவும்தான் நிச்சயம் இருக்க முடியும்.
ராஜராஜ சோழன் தமிழ் இனத்தின் அவமானச் சின்னம் என்பதுதான் வரலாறு நமக்கு கற்றுத் தரும் பாடம். அவன் மட்டும் அல்ல சேர, சோழ, பாண்டிய, நாயக்க மன்னர்கள் அனைவரும் அப்படித்தான் இருந்திருக்கின்றார்கள். நாம் வீரபாண்டிய கட்டபொம்மனையும், ஊமைத்துரையையும், கோபால நாயக்கரையும் ஆதரிப்பதற்கு முக்கிய காரணம் அவர்கள் கும்பினி அரசை எதிர்த்து போரிட்டார்கள் என்பதற்குத் தான். அவர்களது சமகாலத்தில் வாழ்ந்த பல தமிழ் மன்னர்கள் கும்பினி ஆட்சிக்கு முழு ஒத்துழைப்பு தந்து, அவர்களது அடிமைகளாய் மாறிவிட்ட சூழ்நிலையில் கட்டபொம்மன், ஊமைத்துரை, கோபால நாயக்கர் போன்றோரின் எதிர்ப்புக்குரல் அன்றைய கும்பினி ஆட்சியை குலை நடுங்கவைத்தது. அவர்களின் தன்னலமற்ற தியாகமும் நெஞ்சுரம்தான் அவர்களை பின்பற்றச் சொல்லி நம்மைத் தூண்டுகின்றது.
ராஜராஜ சோழன் போன்றவர்களைக் கடுமையாக நாம் எதிர்ப்பதற்குக் காரணம் அவன் சாதிவெறியானாகவும், பிற்போக்குவாதியாகவும், பார்ப்பன அடிமையாகவும், பெண்களை தேவதாசிகள் ஆக்கி அழகுபார்த்தவன் என்பதற்காவும் தான். நாம் தமிழ்த் தேசியவாதிகளை கடுமையாக எதிர்ப்பதற்குக் காரணமும் அவர்கள் ராஜராஜ சோழனை தமிழ் இனத்தின் மீட்சிக்காக பாடுபட்டவன் போன்று சித்தரிப்பதுதான். அவர்களும் ராஜராஜ சோழன் போன்றே தாழ்த்தப்பட்ட மக்களிடம் நடந்து கொள்கின்றார்கள். அவர்கள் ராஜராஜ சோழன் போன்றே பார்ப்பனியத்தின் அடிமையாக இருக்கின்றார்கள். அவர்கள் ராஜராஜ சோழன் காந்தளூர்ச் சாலையில் பல மலையாளிகளின் தலையை அறுத்து துள்ளத் துடிக்க கொலை செய்தது போல, இவர்களும் இங்குள்ள தெலுங்கர்கள், மலையாளிகள், கன்னடர்களின் தலைகளை அறுப்பதற்கு ஆயத்தம் செய்து கொண்டு இருக்கின்றார்கள். இப்போது தெரிகின்றதா தமிழ்த் தேசியவாதிகள் ஏன் ராஜராஜ சோழனை ஆதரிக்கின்றார்கள் என்று. ராஜராஜ சோழனை ஆதரிப்பது என்பதன் பொருள் சாதிவெறியனாகவும், பார்ப்பன அடிமையாகவும், இனவெறியனாகவும் நாம் மாற நினைக்கின்றோம் என்பதுதான்.
செ.கார்கி

கருத்துகள் இல்லை: