புதன், 12 டிசம்பர், 2018

சென்னை வடமாநில கொள்ளை கூட்டம் சிக்கியது .. ராஜஸ்தான் மாநில இளைஞர்கள் ..

THE HINDU TAMIL< கைதான நஷேஸ் சிங், கைப்பற்றப்பட்ட பிஸ்டல் சென்னையில் கொள்ளையடித்துச் சென்று ராஜஸ்தானில் சிக்கிய நாதுராம் போன்று இன்னொரு கொள்ளையன் துப்பாக்கியுடன் யானைக்கவுனியில் சிக்கியுள்ளார்.
சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகில் முத்துசாமி சாலையில் நேற்று நள்ளிரவு இணை ஆணையரின் சிறப்புப்படை போலீஸார் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வடமாநில டிப்டாப் இளைஞர் ஒருவரை போலீஸார் சந்தேகப்பட்டு அருகில் அழைத்து விசாரித்தனர். அவர் போலீஸாரைக் கண்டதும் ஓட ஆரம்பித்துள்ளார்.

உடனடியாக போலீஸார் அவரைத் துரத்த அவர் கோட்டை ரயில்வே தண்டவாளத்தில் குதித்து ஓடியுள்ளார். போலீஸார் விடாமல் துரத்திச் சென்று பிடித்தனர். அவர் தோளில் மாட்டியிருந்த பையைக் கழற்றி சோதனையிட்டுள்ளனர். அப்போது போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தோல் பையில் பிஸ்டல் ஒன்று இருந்தது.
இதைப் பார்த்த போலீஸார் அவர் யார் எங்கு தங்கியுள்ளார் என விசாரித்துள்ளனர். யானைக்கவுனியில் ஸ்கூல் பை, தோல் பைகள் தயாரிக்கும் கடை நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். உடனடியாக அவரை யானைக்கவுனி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. பிடிபட்டவர் பெயர் நரேஷ் என்ற நசேஷ் சிங் (39) என்பதும் ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. பல ஆண்டுகளுக்கு முன்னரே சென்னை வந்துவிட்ட நசேஷ் சிங் சென்னையில் ஸ்கூல், டிராவல் பேக்குகள் மொத்தமாக தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.
பின்னர் சிறிது நாட்கள் கழித்து ராஜஸ்தான் பாலியில் உள்ள தங்கள் ஊரைச்சேர்ந்த இளைஞர்களை சென்னை வரவழைத்து அவர்களைத் தங்கவைத்து வீடுகளில் புகுந்து திருடும் தொழிலை செய்து வந்துள்ளார். பகலில் ஆளில்லாத வீடுகளை நசேஷ் சிங் நோட்டமிட்டு தன் ஆட்களுக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்துவிட்டு அவர் வேலையைப் பார்ப்பார்.
திருடும் இளைஞர்கள் கச்சிதமாக காரியத்தை முடித்துவிட்டு கிடைத்ததை பங்கு போட்டுக் கொள்வார்கள். இவ்வாறு செய்வதில் அதிக வருமானமும் ரிஸ்க் குறைவாகவும் இருந்ததால் தீவிரமாக அதில் இறங்கியுள்ளார். இவர்கள் தொடர்ச்சியாக யானைக்கவுனி, ஏழுகிணறு, பூக்கடை பகுதியில் தொடர் திருட்டை நடத்தியுள்ளனர்.
திருட்டு நடந்த நேரத்தில் போலீஸார் துப்பறிந்து திருடர்களைப் பிடித்துள்ளனர். ஆனால், பிடிபட்டவர்கள் கூட்டத்தலைவன் நசேஷ் சிங் பெயரைச் சொல்லாததால் அவர் தொடர்ந்து தப்பித்து வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ராஜேஷ் என்பவர் நிறுவனத்திலிருந்து 50 கிலோ வெள்ளியும், ஜெயந்தி என்பவர் வீட்டிலிருந்து ரூ. 2 லட்சம் ரொக்கப் பணமும், நகைப்பட்டறை ஒன்றிலிருந்து 25 சவரன் நகையையும் திருடியுள்ளதாக நசேஷ் சிங் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பிஸ்டலை வாங்கியுள்ள நசேஷ் சிங் கூட்டாளிகளை வைத்து தொடர் திருட்டை நடத்தும் அதே வேளையில் வருமானம் அதிகரித்ததால் தான் வேலை செய்யும் நிறுவனத்திலிருந்து விலகி சொந்தமாக பேக் தயாரிக்கும் கடையை ஆரம்பித்து நடத்தி வந்துள்ளார்.
நசேஷ் சிங் கொடுத்த தகவலின் பேரில் யானைக்கவுனி வரதய்யன் தெருவில் வசிக்கும் கீடா பட் (33) என்பவரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு கொளத்தூரில் நாதுராம் என்பவர் நகைக்கடையைக் கொள்ளையடித்து ராஜஸ்தான் தப்பிச் செல்ல, அவரைப் பிடிக்கச் சென்ற நொளம்பூர் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் கொல்லப்பட்டார். நாதுராம் பெரிய அளவில் பல மாநிலங்களில் கொள்ளைகளை நடத்தியது தெரியவந்தது.
நாதுராமுடன் சிலரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வடமாநிலங்களிலிருந்து சென்னைக்கு ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் வருகின்றனர். அதில் சிலர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு பின்னர் இங்கு தஞ்சமடைந்து இங்கும் பெரிய அளவில் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர்.
மின்ட் தெருவில் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த கோயில் பூசாரி கொலை மற்றும் கொள்ளையில் தப்பிச் சென்றவர்கள் இதுவரை பிடிபடவில்லை, விருகம்பாக்கத்தில் வங்கிக்கொள்ளை, சேலம் சென்னை ரயில் கொள்ளை போன்ற கொள்ளைகளில் ஈடுபட்டது வடமாநில கும்பல்களே.
தற்போது பிடிபட்டுள்ள நரேஷ் என்ற நசேஷ் சிங் துப்பாக்கியை எங்கிருந்து வாங்கினார், நசேஷ் சிங்குக்கும் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? சென்னையில் உள்ள நெட்வர்க் என்ன என்பது குறித்து தீவிரமாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நசேஷ் சிங்கையும், கீடா பட்டையும் கைது செய்துள்ள போலீஸார் அவர்கள் மீது பிரிவு  457, 380 ( வீடு புகுந்து திருடுதல் குறித்த சட்டம்) கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்துக்குள் ஊடுருவும் வெளி மாநிலக் குற்றவாளிகளை கண்டறியும் தொழில்நுட்பத்தை தமிழக காவல்துறை செயல்படுத்தி வருகிறது. ஆனால் அதில் இதுபோன்ற ஆட்கள் உழைப்பாளிகள் போர்வையில் தப்பிக்கின்றனர். இதையும் கண்காணிக்கும் நடவடிக்கைகளை காவல்துறை செயல்படுத்தவேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது

கருத்துகள் இல்லை: