திங்கள், 10 டிசம்பர், 2018

ஜெயலலிதா - ‘உன்னை எவ்வளவு நம்பினேன்... ஏன் ஆஞ்சியோ செய்யவில்லை? நம்பினதுக்கு? கதறி அழுத டாக்டர் சிவகுமார்

மின்னம்பலம் :ஜெயலலிதா மரணம் தொடர்பாக
விசாரிக்க அமைக்கப்பட்ட
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சியான டாக்டர். சிவகுமாரின் லேட்டஸ் சாட்சியம் அதிர்ச்சியோடு பார்க்கப்படுகிறது. அதுதான் சசிகலா குடும்பத்துக்கு பயங்கர அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும் சொல்கிறார்கள்.
சசிகலாவின் உறவினர்தான் டாக்டர். சிவகுமார். ஜெயலலிதாவுக்கு போயஸ்கார்டனில் இருந்தபோதும், அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை அளித்தவர்களில் முக்கியமானவர் இந்த சிவகுமார். அவரிடம் ஆறுமுகசாமி ஆணையத்தில் விசாரணை நடந்தது.
ஆணையத்தின் வழக்கறிஞர் பார்த்தசாரதி அப்பல்லோ மருத்துவமனை குறிப்புகளை கையில் வைத்துக் கொண்டு, ‘அமெரிக்காவில் இருந்து இதய சிகிச்சை நிபுணர் ஸ்டுவர்ட் ரசல் வந்தார். அவர் ஜெயலலிதாவை கொரனரி ஆஞ்சியோ சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். சிகிச்சைக்கான குறிப்பிலும் அதை எழுதி இருக்கிறார். உங்க குடும்பத்தினர் எல்லோருமா சேர்ந்து அமெரிக்காவில் இருந்து சமின் சர்மா என்ற இதய சிகிச்சை நிபுணரை வர வெச்சுருக்கீங்க. அவரும் ஜெயலலிதாவுக்கு கொரனரி ஆஞ்சியோ செய்யணும்னுதான் சொல்லி இருக்காரு. அந்த சிகிச்சையை தானே செய்வதாகவும் அந்த மருத்துவ நிபுணர் சொல்லியிருக்காரு. இதையெல்லாம் மருத்துவ குறிப்பில் அவரே எழுதியிருக்காரு.
ஆனால் ஆஞ்சியோ ஜெயலலிதாவுக்கு செய்யவே இல்லை. இதய சிகிச்சைக்கு சற்றும் தொடர்பே இல்லாத லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே சொன்னதை ஏற்று ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று அதில் குறிப்பிட்டு இருக்கீங்க. அதுக்கு ரெஃபரன்ஸ் உங்க பேரைத்தான் போட்டு இருக்காங்க. இது உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு டாக்டர் சிவகுமார், “தெரியும்” என்று மட்டும் சொல்லி இருக்கிறார்.
தொடர்ந்து வழக்கறிஞர் பார்த்தசாரதி அடுத்த கேள்வியை கேட்டிருக்கிறார். “ஒருவேளை ஜெயலலிதா இப்போது எழுந்து வந்து, ‘உன்னை எவ்வளவு நம்பினேன்... ஏன் ஆஞ்சியோ செய்யவில்லை? உன்னை நம்பினதுக்கு இப்படியா செய்வீங்க?” என்று கேட்டால் என்ன பதில் சொல்வீங்க?’ என்று கேட்டிருக்கிறார்.

சிவகுமாரால் பதில் சொல்ல முடியாமல் கிட்டதட்ட 4 நிமிடங்கள் கதறி அழ ஆரம்பித்துவிட்டாராம். ‘அழுவதால் எதுவும் ஆகப் போறது இல்ல. பதில் சொல்லுங்க...’ என்று விடாமல் கேட்டாராம் ஆணைய வழக்கறிஞர். அதற்கு சிவகுமார், ‘இப்போ வரைக்கும் அம்மாவுக்கு ஆஞ்சியோ செய்திருக்கலாமோ, செய்திருந்தா அம்மாவைக் காப்பாத்தியிருக்கலாமோ என்ற குற்ற உணர்வு மட்டும் என் மனதை அறுத்துக்கிட்டேதான் இருக்கு. செஞ்சிருக்கணும். ஆனால் செய்யலை.’ என்று சொன்னாராம்.
‘இதை நோட் பண்ணிக்கோங்க...’ என்று சொல்லிவிட்டு அமர்ந்துவிட்டாராம் வழக்கறிஞர் பார்த்தசாரதி.
அதன் பிறகு சசிகலா தரப்பு வழக்கறிஞரான ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை தொடங்கியது.
சிவகுமாரிடம் அவரும் ஒரு கேள்வியை முன்வைத்தார். ‘நீங்க ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர். அவருடைய குடும்ப உறுப்பினர் என்றே உங்களை சொல்லலாம். அப்படிப்பட்ட உங்களுக்கு ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் திருப்தி இருக்கிறதா?’ என்பதுதான் அந்த கேள்வி. அதற்கு உடனே பதில் சொல்லாமல் சற்று யோசித்துவிட்டு, ‘ ஆஞ்சியோ சிகிச்சையும் செய்திருக்கலாமோ என்ற வேதனை எனக்குள் இன்னும் இருக்கிறது. மற்றபடி என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்தேன்” என்று சொன்னாராம்.
’ஜெயலலிதாவுக்கு இதயத்தில் உள்ள மைட்ரல் வால்வில் எண்டிரோ காக்கஸ் என்ற நுண்ணுயிர் தொற்று இருந்திருக்கிறது. இது வெடித்து மூளைக்குச் சென்று ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டால் பக்கவாதம் ஏற்படும். இதயத்தில் தங்கினால் இதயம் பாதிக்கும் என்பதை ஆணையத்தில் ஏற்கெனவே சாட்சியம் அளித்த மருத்துவர்கள் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். அதை வைத்துப் பார்க்கும் போது, ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்யாததால்தான் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருப்பாரோ என்ற சந்தேகம் வருகிறது.’ என்று பார்த்தசாரதி சொல்ல... அமைதியாகவே இருந்தாராம்
வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்.
ஆணையத்தின் கிடுக்குப்பிடி கேள்விகளால் சிவகுமார் ஏன் அப்படி அழுதார்... ஏன் திடீரென பேசக் கூடாததை பேசினார் என்றெல்லாம் தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறது தினகரன் தரப்பு”

கருத்துகள் இல்லை: