புதன், 12 டிசம்பர், 2018

யார் இந்த சக்திகாந்த தாஸ்? ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர் ... ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர்

BBC : இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் ராஜிநாமா செய்த
நிலையில் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டார். இந்திய அரசின் முன்னாள் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளராக இருந்த இவர், மூன்று வருடங்களுக்கு ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாகவும் இருந்தவர் சக்திகாந்த தாஸ்.
சக்திகாந்த தாஸ் 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை பொருளாதார விவகாரங்களின் செயலராக இருந்தவர். மேலும் ரிசர்வ் வங்கியுடன் நெருக்கமாக பணிபுரிந்துள்ளார்.2016-ஆம் ஆண்டில், இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்திய பணமதிப்பிழப்பு விவகாரத்தை அமலாக்கும் முதன்மை முகங்களில் ஒன்றாக விளங்கினார்.

தமிழக அரசின் தொழிற்துறையின் செயலராகவும், தமிழக காகித நிறுவனத்தின் (டி.என்.பி.எல்) தலைவர் மற்றும் இயக்குநர், டைட்டன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குநர், தமிழ்நாடு பெட்ரோ பிராடக்ஸின் தலைவர், மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் தலைவர், எண்ணெய் மற்றும் எரிவாயு கழகத்தின் தலைவர், இந்தியன் வங்கியின் கெளரவ தலைவர், தென்னிந்திய பெட்ரோலிய தொழிற்துறை கழகம் மற்றும் வெடிப்பொருள் துறையின் இயக்குநர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர்.
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தின் கூடுதல் இயக்குநராகவும் பணியாற்றியவர். ஒடிஷாவில் 1957-ஆம் ஆண்டு, பிப்ரவரி 26-ஆம் தேதி சக்திகாந்த தாஸ் பிறந்தார். வரலாற்றுத் துறையில் முதுகலை பட்டம் பெற்ற இவர், இந்திய ஆட்சிப் பணி சேவையில் 1980-ஆம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி சேர்ந்தார். அவருக்கு தமிழக பிரிவு ஒதுக்கப்பட்டது. பிரதமர் மோதியின் முதன்மை செயலராக உள்ள நிருபேந்திர மிஸ்ராவுக்கு மிக நெருக்கமானவராக சக்திகாந்த தாஸ் கருதப்படுகிறார்.

கருத்துகள் இல்லை: