சனி, 15 டிசம்பர், 2018

கர்நாடகாவில் கோயில் உணவை சாப்பிட்ட 12 பேர் உயிரழப்பு .. விசம் கலந்த உணவு .. சதி வேலை


BBC : கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டத்திலுள்ள மராம்மா கோயில் ஒன்றில் வழங்கிய உணவை உண்டு 11 பேர் இறந்துள்ளனர்.
 டஜன் கணக்கானோர் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த கோயிலில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற வழிபாட்டுக்கு பின்னர் வழங்கப்பட்ட உணவை உண்ட பின்னர், 70 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
11 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக காவல்துறையின் செய்தி தொடர்பாளர் ஒருவர் பிபிசியிடம் கூறினார்.
இந்த சம்பத்தை தொடர்ந்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு நஞ்சாகியிருக்கலாம் என்று சுகாதார அதிகாரி ஒருவர் உள்ளூர் ஊடகங்களிடம் கூறியுள்ளார். "துர்நாற்றம் வீசிய தக்காளி சாதம் எங்களுக்கு வழங்கப்பட்டது," என்று இந்த வழிபாட்டில் கலந்து கொண்ட ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
"அதனை உண்ணாமல் எறிந்துவிட்டவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர். அதனை சாப்பிட்டவர்கள் வாந்தி எடுக்க தொடங்கி, வயிற்று வலியெனக் கூற தொடங்கினர்," என்று அவர் மேலும் கூறினார்.
வெள்ளிக்கிழமையன்று சிறப்பு நிகழ்வு நடைபெற்ற சாமராஜநகர் மாவட்டத்திலுள்ள மராம்மா கோயிலில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கோயிலை விட்டு செல்கையில், மத சடங்கில் அன்னதானமாக வழங்கப்படும் உணவாக இந்த தக்காளி சாதம் அனைவருக்கும் பரிமாறப்பட்டுள்ளது.
"இன்று இங்கு புனிதப்படுத்தும் சடங்கு நடைபெற்றது" என்று சம்பவத்தை நேரில் பார்த்த இன்னொரு நபர் கூறினார். இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பக்கத்து கிராமங்களிலுள்ள மக்கள் பலரும் வந்திருந்தாகவும் அவர் தெரிவித்தார்.இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவ கௌடா உள்பட பலரும் இந்த சம்பவம் பற்றி சமூக ஊடக பதிவுகளில் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
"இந்த சம்பவத்தில் தங்களின் உறவினர்களை இழந்துள்ள குடும்பங்கள், இந்த துன்பத்தை எதிர்கொள்ளும் பலமும், தைரியமும் கொள்ள வேண்டும்" என்று தேவ கௌடா பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: