புதன், 22 ஆகஸ்ட், 2018

திமுக பொருளாளர் பதவிக்கு கடும் போட்டி .. துரைமுருகன் , டி ஆர் பாலும் .ஆ.ராசா. எ /வ. வேலு

tamilthehindu :திமுக பொருளாளர் பதவியை கைப்பற்ற அக்கட்சிக்குள் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
திமுக தலைவராக இருந்த கருணாநிதி கடந்த 7-ம் தேதி காலமானார். இந்நிலையில் திமுக பொதுக்குழு கூட்டம் வரும் 28-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறவுள்ளது. இதில் திமுக தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 2017 ஜனவரி 4-ம் தேதி முதல் செயல் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.
திமுக கட்சி விதிகளின்படி கட்சியில் ஒருவர் ஒரு பதவியில் மட்டுமே இருக்க முடியும். அதன்படி ஸ்டாலினிடம் உள்ள பொருளாளர் பதவிக்கு வேறொருவரை தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. எனவே, வரும் 28-ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவில் பொருளாளர் பதவிக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.
திமுகவைப் பொறுத்தவரை பொருளாளர் பதவி முக்கிய மானது. கருணாநிதி, எம்ஜிஆர், சாதிக்பாட்சா, ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின் என பலரும் அப்பதவி யில் இருந்துள்ளனர். முக்கியத் துவம் வாய்ந்த திமுக பொருளாளர் பதவியை கைப்பற்ற முதன்மைச் செயலாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
அண்ணா காலத்தில் இருந்து திமுகவில் பல முக்கிய பொறுப்புகளில் உள்ள துரைமுருகன் பொதுச்செயலாளர் பதவியை குறிவைத்து வருகிறார்.
தற்போதைய பொதுச்செயலாளர் க.அன்பழகன் அப்பதவியில் தொடர்வதால் பொருளாளர் பதவியை கைப்பற்ற துரைமுருகன் முயற்சித்து வருகிறார்.
இதுதவிர, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, டி.ஆர்.பாலு மற்றும் எ.வ.வேலு ஆகியோரும் பொருளாளர் பதவியைப் பிடிக்க கட்சிக்குள் ஆதரவு திரட்டி வருவதாகக் கூறப்படுகிறது. துரைமுருகன் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அவரிடம் உள்ள முதன்மைச் செயலாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு அல்லது ஆ.ராசா நியமிக்கப்படுவார் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை: