வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

அழகிரி : தலைவராகவும், முதல்வராகவும் ஸ்டாலினே இருக்கட்டும். நான் தடையாக இருக்க மாட்டேன்

ஸ்டாலின் பேசினாலே போதும்: அழகிரிமின்னம்பலம்: திமுக தலைவர் கலைஞரின் நினைவிடம் நோக்கி செப்டம்பர் 5ஆம் தேதி பேரணி செல்லப்போவதாகவும், இதில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்றும் கலைஞரின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
எனினும் பேரணி நடத்துவது தொடர்பாக இருவேறு மனநிலையில் அழகிரி உள்ளார். இது தொடர்பாக நேற்றைய டிஜிட்டல் திண்ணையில் கூறியிருந்தோம்.
இந்நிலையில், மதுரை சத்தியசாய் நகரில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் அழகிரி இன்று (ஆகஸ்ட் 24) ஆலோசனை நடத்தினார்.
கட்சியின் பொறுப்புகளில் இருந்தவர்கள், அழகிரியால் அரசு அதிகாரத்தில் இருந்தவர்கள் ஆகியோர் எதிர்பார்த்த அளவுக்கு இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இது அழகிரிக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
பின்னர், வந்தவர்களிடம், “உங்கள் பகுதிகளில் இருந்து எத்தனைப் பேர் வருவார்கள், எத்தனை கார், வேன் வரும் ஆகிய விவரங்கள் அடங்கிய லிஸ்ட்டைக் கொடுங்கள்” என்று கூறியுள்ளார்.

பேரணிக்கு மொத்தமாக எத்தனை பேர் வருவார்கள் என்றும் அழகிரி கேட்டுள்ளார். ஒவ்வொருவரும் ஒரு கணக்கைக் கூற, சரி பார்ப்போம் என்று மட்டும் பதிலளித்துள்ளார்.
ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர், தனக்கு நெருக்கமானவர்களிடம், “ஸ்டாலின் போன் செய்தால்கூட போதும், பேரணியை ரத்து செய்துவிடலாம். கட்சித் தலைவராகவும், முதல்வராகவும் ஸ்டாலினே இருந்திட்டு போகட்டும். நான் தடையாக இருக்க மாட்டேன்”என்று கூறியுள்ளார்.
மேலும், “வேறு கட்சியில் நான் சேர மாட்டேன்” என்று சொன்னதுடன், ஸ்டாலின் தரப்பிடம் உங்களுக்குத் தெரிந்தவர்கள் இருந்தால் பேசிப் பாருங்கள் என்றும் இறங்கி வந்து பேசியுள்ளார்.

கருத்துகள் இல்லை: