வியாழன், 23 ஆகஸ்ட், 2018

தஞ்சை சாஸ்த்ரா பல்கலைகழக நிலம் ..அரசு நிலம் 58 ஏக்கரை மீட்க உத்தரவு!

மின்னம்பலம்: தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள அரசு நிலம் 58 ஏக்கரை மீட்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சையில் திருமலைச்சமுத்திரத்தில் 1985இல் திறந்தவெளிச் சிறைச்சாலை கட்டுவதற்காகச் சிறைத் துறைக்கு 58.17 ஏக்கர் நிலத்தைத் தமிழக அரசு ஒதுக்கியிருந்தது. இந்த நிலத்தை ஆக்கிரமித்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தனது கட்டடங்களைக் கட்டிக்கொண்டது. இதனைத் தொடர்ந்து, தமிழகச் சிறைத் துறையானது சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துக்கு ஆக்கிரமிப்பிலிருந்து வெளியேறுமாறு நோட்டீஸ் அனுப்பியது.
அந்த நோட்டீஸைத் தொடர்ந்து வெளியேற்ற நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. வெளியேற்ற நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.

நிலத்தைப் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைத்து விடலாம் என்றும் நிலத்தின் சந்தை மதிப்பு 10 கோடி ரூபாயைப் பெற்றுக்கொள்ளலாம் என்று நீதிபதி நூட்டி ராமமோகன்ராவ் உத்தரவிட்ட நிலையில், அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்றும் உடனடியாக அரசு நிலத்தை மீட்க வேண்டும் என்றும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டார். இந்த இரண்டு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பை அடுத்து மூன்றாவது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் இந்த வழக்கை விசாரித்தார்.
இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள சுமார் 58.17 ஏக்கர் அரசு நிலத்தை உடனடியாக தமிழக அரசு கையகப்படுத்த வேண்டும் என்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியத்தின் தீர்ப்பை உறுதி செய்து, நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை: