செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

மாறன் சகோதரர்கள் மீது 30ஆம் தேதி குற்றச்சாட்டுப் பதிவு!

மாறன் சகோதரர்கள் மீது 30ஆம் தேதி குற்றச்சாட்டுப் பதிவு!மின்னம்பலம்:   பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்டோர்மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதமாக பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பைப் பயன்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும் சன் தொலைக்காட்சி தலைவருமான கலாநிதி மாறன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்து கடந்த மார்ச் 14ஆம் தேதி சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி நடராஜன் உத்தரவிட்டிருந்தார்.
இதை எதிர்த்து சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லாது என அறிவித்தது. மீண்டும் சிபிஐ நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் எனவும், குற்றச்சாட்டுப் பதிவை மீண்டும் தொடங்கவும் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து மாறன் சகோதரர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து பிஎஸ்என்எல் வழக்கு, சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஆர்.வசந்தி முன், கடந்த 11ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேருக்கு எதிராக, ஆகஸ்ட் 17ஆம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என அறிவித்த நீதிபதி, அன்றைய தினத்தில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட ஏழு பேரும் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவையொட்டி 17ஆம் தேதி நீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. எனவே, இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பிஎஸ்என்எல் முன்னாள் பொது மேலாளர் பிரம்மநாதன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கேரளாவில் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள பிரம்மநாதன் நீதிமன்றத்தில் இன்று ஆஜராக முடியவில்லை என்று தெரிவித்தார்.
மற்றவர்கள் தரப்பிலும் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படுவதை ஒத்திவைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, மாறன் சகோதரர்கள் உட்பட ஏழு பேருக்கு எதிராக ஆகஸ்ட் 30ஆம் தேதி குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் எனத் தெரிவித்த நீதிபதி, அன்றைய தேதியில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை: