புதன், 22 ஆகஸ்ட், 2018

ஐ.ஜி மீது பெண் எஸ் ஐ பாலியல் குற்றச்சாட்டு : விஷாகா கமிட்டி ஆலோசனை!

ஐ.ஜி மீது பாலியல் புகார்: விஷாகா கமிட்டி ஆலோசனை!
மின்னம்பலம்: தமிழக காவல்துறையில் ஐஜி அந்தஸ்தில் உள்ள உயரதிகாரி மீது, பெண் எஸ்.பி கொடுத்த பாலியல் புகாரில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து, விஷாகா குழு நாளை (ஆகஸ்ட்,23) ஆலோசனை நடத்த இருக்கிறது.
இந்த புகார் தொடர்பாக, கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையிலான விஷாகா குழு உறுப்பினர்கள் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மாநிலக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் நாளை ஆலோசனை நடத்தவுள்ளனர். இந்தக் கூட்டத்தில் புகார் கொடுத்த பெண் எஸ்.பி மற்றும் போலீஸ் ஐ.ஜி ஆகியோரிடம் விசாரிப்பது தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
இந்த விசாரணைக் குழுவில், கூடுதல் டி.ஜி.பி. அருணாசலம், காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. தேன்மொழி, ஓய்வுபெற்ற காவல் அதிகாரி சரஸ்வதி, டி.ஜி.பி. அலுவலக மூத்த நிர்வாக அதிகாரி ரமேஷ் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இதுகுறித்து விசாகா கமிட்டியில் உள்ளவர்கள் கூறுகையில், “இந்தக் கமிட்டி நடத்தும் முதல் கூட்டத்தில் பெண் எஸ்.பியின் புகாரை முதலில் எடுத்து விசாரிக்கவுள்ளோம். புகார் தெரிவித்த பெண் எஸ்.பி, குற்றம் சுமத்தப்பட்ட போலீஸ் ஐ.ஜி ஆகியோரிடம் விசாரிப்பது தொடர்பான நாளை நடக்கும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். முதலில் பெண் எஸ்.பி கொடுத்த புகார் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்தப்படும். அதற்கான தேதி கூட்டத்தில் முடிவு செய்யப்படும். விசாரணையின்போது பெண் எஸ்.பி அளிக்கும் தகவல்கள் வாக்குமூலமாகப் பதிவு செய்யப்படும். அதன் பிறகே போலீஸ் ஐ.ஜியிடம் விசாரிக்கப்படும். இருவரிடம் மட்டுமல்லாமல், அந்தப் பிரிவில் உள்ள இன்னும் சிலரிடமும் விசாரணை நடத்திய பிறகுதான் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பெண் எஸ்.பி கொடுக்கும் வாக்குமூலம் ரகசியமாக வைக்கப்படும். அரசு மற்றும் காவல்துறையில் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்படுவோர்களின் புகார்களுக்கு இனி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை: