வியாழன், 7 டிசம்பர், 2017

விட்டுவிடும்படி கதறியும் நடுரோட்டில் பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு.. இளைஞர் கூட்டம்!

ஒரிசாவில் உள்ள பர்கர் பகுதியில் கல்லூரி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணிற்கு நடுரோட்டில் வைத்து சில இளைஞர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.
தன்னை விட்டுவிடும்படி கெஞ்சியும் அதைப் பொருட்படுத்தாமல் அந்தப் பெண்ணை தகாத முறையில் தொட்டு கேலி செய்துள்ளனர். இவை அனைத்திற்கும் மேலாக இந்த முழு சம்பவத்தையும் வீடியோ எடுத்து அதை தற்போது இணையத்திலும் பதிவேற்றியுள்ளனர். இந்த வீடியோ செய்தி ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து ஒரிசா காவல் துறையினர் இந்தச் சம்பவம் குறித்த விசாரணையைத் துவங்கியுள்ளனர்.
அக்டோபர் 2, 2017 அன்று இந்தச் சம்பவம் நிகழ்ந்திருப்பதாகக் காவல் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. வீடியோவில் இருந்த பலரும் துணியால் தங்களது முகத்தை மூடியிருந்த நிலையில் சிலரது முகங்கள் வீடியோவில் பதிவாகி உள்ளது. அதை வைத்துக் காவல் துறையினர் இது வரை எட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.


ஹோட்சன் ஹாடி (24), அஜிட் பாரிக் (28), ஜெயபிரகாஷ் போஹி (31), உமகண்டா போஹி (39), ஷாஹில் பாரிக் (18), நிரோஜ் பாரிக் (38), ஜித்து பெஹிரா (24), முரளி பாரிக் (28) என இவர்கள் அனைவரையும் காவல் துறையினர் இரண்டு தனிப்படை அமைத்துப் பிடித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் 15-ம் மேற்பட்ட இளைஞர்கள் ஈடுபட்டிருப்பதால் மற்றவர்களையும் தேடி வருவதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரு பெண்ணின் ஆடைகளைக் கலைத்து அதை வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்ட மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர், அதே போல் காட்டின் நடுவில் வைத்து ஒரு பெண்ணை அவரது ஆடைகளைக் கழற்றும்படி சில இளைஞர்கள் வற்புறுத்துவதும் போன்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது. பெண்ணைக் கடவுளாக போற்றும் இந்த நாட்டில் வளர்ந்து நிற்கும் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி மனபங்கம் படுத்துவது தொடர் கதை ஆகிக் கொண்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை: