வியாழன், 7 டிசம்பர், 2017

கேரளாவில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம்!

மின்னம்பலம்  : கேரளாவில் ஓகி புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 20 லட்சம் வழங்கப்படும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 30ஆம் தேதி கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவான ஓகி புயலால் தமிழகத்திலும், கேரளாவிலும் ஏராளமான மீனவர்கள் மாயமாகியுள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த கேரள மீனவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்கப்படும் எனக் கேரள அரசு அறிவித்திருந்தது.
மேலும் கேரள மீன்வளத்துறை சார்பில் ரூ.5லட்சம் வழங்கப்படும் எனவும், கேரள மீனவர் நலவாரியம் சார்பில் ரூ. 5லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.20 லட்சமாக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே ஒகி புயலால் உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு செயல்படமுடியாமல் உள்ள மீனவர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும், காணாமல் போன மீனவர்கள் மற்றும் படகுகளை இழந்த மீனவக் குடும்பத்தில் உள்ள பெரியவர்களுக்கு ரூ.60000, சிறியவர்களுக்கு ரூ.45000 கைச்செலவுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழந்த மற்றும் காணாமல் போன மீனவர்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி, மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும் எனக் கேரள அரசு அறிவித்துள்ளது. கேரள அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் நடந்த கேபினட் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 4 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: