செவ்வாய், 1 ஜூலை, 2014

விடுதியில் 50 மேற்பட்ட பெண்களை சிறைவைத்த விடுதி வார்டன் ! காவல்துறையினர் மீட்டனர் !

வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே தனியாருக்கு சொந்தமான பெண்கள் தங்கும் விடுதி உள்ளது. இங்கு சேலம், திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் 50–க்கும் மேற்பட்டோர் மாதம் ரூ.4 ஆயிரத்து 500 வாடகையில் தங்கி இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் அனைவரையும் விடுதியை காலி செய்யும்படி உரிமையாளர் கூறினார். இதையடுத்து மாணவிகளும், பெண்கள் விடுதியில் தாங்கள் ஏற்கனவே கொடுத்த முன்பணத்தை திருப்பி தருமாறும், அறையை காலி செய்ய அவகாசம் வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
ஆனால், பணத்தை கொடுக்க விடுதி நிர்வாகம் மறுத்ததாக தெரிகிறது. மேலும் அறையை உடனடியாக காலி செய்ய நெருக்கடி கொடுத்தனர்.

இதையடுத்து மூட்டை முடிச்சுகளுடன் அறையை காலி செய்த மாணவிகளும், பெண்களும் இதுபற்றி போலீசில் புகார் செய்யப் போவதாக கூறினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த விடுதி வார்டன் அனைவரையும் உள்ளேயே வைத்து கேட்டை பூட்டி சிறை வைத்தார். அவருடன் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதற்குள் மாணவிகளும், பெண்களும் விடுதி அறைக்குள் சிறை வைக்கப்பட்டது பற்றி ஓட்டேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்–இன்ஸ்பெக்டர் லட்சுமி, ஏட்டு செல்வி மற்றும் போலீசார் விரைந்து வந்து பூட்டை திறந்து அனைவரையும் மீட்டனர்.
விடுதி நிர்வாகத்தினரை வரவழைத்து எச்சரித்தனர். பின்னர், மாணவிகள், பெண்களுக்கு சேர வேண்டிய முன்பணத் தொகையை பெற்று கொடுத்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் விடுதியை காலி செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. maalaimalar.com

கருத்துகள் இல்லை: