வியாழன், 3 ஜூலை, 2014

இராக்கில் இந்திய செவிலியர்கள் மொசுல் நகருக்கு கடத்தல் ! ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் பிடியில் 46 பேர்

இராக்கின் திக்ரித் மருத்துவமனையில் இருந்த இந்திய செவிலியர்கள் 46 பேரை, ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் மொசூல் நகரத்திற்கு கடத்திச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இராக்கில் பரவலான நகரங்களை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி வரும் நிலையில், தற்போது அவர்கள் திக்ரித் நகரை குறிவைத்துள்ளனர்.
திக்ரித் நகரில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த இந்திய செவிலியர்கள் 46 பேர், கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்தனர்.
இந்த நிலையில், செவிலியர்களை இன்று (வியாழக்கிழமை) கிளர்ச்சியாளர்கள் மொசூல் நகரத்திற்கு கடத்தி சென்றுவிட்டதாக தகவல் வெளியாகின.

இது குறித்து பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சயீத் அக்பரூதீன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "செவிலியர்கள் பேருந்தில் அழைத்து செல்வதற்கு முன்னர், நாங்கள் அவர்களிடம் தொடர்புகொண்டு பேசினோம். அவர்களை யார் கடத்தி சென்றார்கள் என்ற தகவல் இன்னும் தெரியவில்லை.
மருத்துவமனையின் அருகாமையில் இருந்த கட்டிடத்தில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. அதில் சில செவிலியர்கள் கண்ணாடித் துகள்கள் பட்டு லேசான காயமடைந்ததாக தெரியவந்துள்ளது" என்றார்.
இராக்கின் திக்ரித் நகரம் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் சொந்த ஊர் ஆகும். இராக்கின் எண்ணெய் வளம் மிக்க நகரங்கள் மற்றும் சிரியாவை இணைக்க கூடிய எல்லை நகரங்களை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய நிலையில், இன்று திக்ரித் நகரில் தாக்குதல் ஆரம்பித்துள்ளது கவனிக்கத்தக்கது. /tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை: