ஞாயிறு, 23 ஜூன், 2013

ராஜ்யசபா தேர்தலில் காங்., இழுத்தடிப்புக்கு காரணம் என்ன? இது தாண்டா அரசியல்

லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றால் தான், காங்கிரஸ் கட்சிக்கு கணிசமான எம்.பி.,க்கள் கிடைக்கும் என்பதால், ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க.,வை ஆதரிக்க வேண்டும் என, காங்கிரஸ் எம்.பி.,க்கள் சிலர், அக்கட்சியின் தலைவர் சோனியாவிடம் வலியுறுத்தி உள்ளனர். பலப்படுத்தலாம்: அதேபோல், தே.மு.தி.க., வுக்கு ஆதரவு அளித்து, அக்கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால், லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் ஓட்டு வங்கியை பலப்படுத்தலாம் என, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலிடம், காங்கிரஸ் கோஷ்டித் தலைவர்கள் சிலர் வலியுறுத்தியதால், உடனடியாக முடிவு எடுக்க முடியாமல், காங்கிரஸ் மேலிடம் வழக்கம் போல் இழுத்தடித்து வருகிறது. ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளித்ததன் மூலம், லோக்சபா தேர்தலில், தி.மு.க., அணியில் அக்கட்சி இடம்பெறப் போவது உறுதியாகியுள்ளது. வட சென்னை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய மூன்று தொகுதிகளில், ஒரு தொகுதி, தி.மு.க., கூட்டணியில், மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்படும் என, கூறப்படுகிறது. புதிய தமிழகம் கட்சிக்கு, தென்காசி லோக்சபா தொகுதியை விட்டுக்கொடுக்க, தி.மு.க., முன்வந்துள்ளது. காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கேட்டு, தி.மு.க., தலைவர் கருணாநிதி எழுதிய கடிதத்தை, காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் டி.ஆர்.பாலு வழங்கினார்.  கடைசியில், மனசாட்சி படி வாக்களியுங்கள் என்று உத்திரவு வரும். அதற்க்கு முன் வாய் மொழியாக, யார் பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள் என்று அறிவுருத்தபடுவார்கள்.?


பாதிப்பு:

லோக்சபா தேர்தலில், 8 சதவீதம் ஓட்டுகளைக் கொண்ட தே.மு.தி.க.,விடம் கூட்டணி வைப்பதை விட, 20 சதவீதம் ஓட்டுகளைக் கொண்ட தி.மு.க.,விடம் கூட்டணி வைப்பதன் மூலம், கணிசமான எம்.பி.,க்களை பெற முடியும். தே.மு.தி.க.,விடம் காங்கிரஸ் கூட்டணி அமைத்தால், காங்கிரஸ் கட்சிக்குத் தான் பாதிப்பு ஏற்படும். ஐ.மு., கூட்டணியிலிருந்து, பிரிந்து சென்ற தி.மு.க.,வை மீண்டும் கூட்டணிக்கு இழுப்பதன் மூலம், தேசிய அளவில் சில மாநில கட்சிகளும், ஐ.மு., கூட்டணியில் சேருவதற்கு எழுச்சியாக அமையும். எனவே, தி.மு.க.,வுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்து, ஐ.மு., கூட்டணிக்குள் தி.மு.க.,வை இழுக்க வேண்டும் என, காங்கிரஸ் எம்.பி.,க்கள் சிலர், மேலிடத்தில் வலியுறுத்தியுள்ளனர். அதேபோல், காங்கிரஸ் கட்சியின் கோஷ்டித் தலைவர்கள் சிலர், தே.மு.தி.க.,வுக்கு ஆதரவு அளித்து, லோக்சபா தேர்தலில் அக்கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடலாம். காங்கிரஸ் ஓட்டு வங்கியை அதிகரிப்பதன் மூலம், கட்சியைப் பலப்படுத்தலாம் என்ற ஆலோசனையை, ராகுலிடம் தெரிவித்துள்ளனர். இதனால், முடிவு எடுப்பதில் அவசரம் காட்டாமல், லோக்சபா தேர்தல் கூட்டணியை மையப்படுத்தி, கடைசி நேரத்தில், காங்கிரஸ் கட்சி முடிவை அறிவிக்கும் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெற்றியை தீர்மானிக்க அ.தி.மு.க.,வுக்கு வாய்ப்பு?

ராஜ்யசபா தேர்தலில், தே.மு.தி.க., - தி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகளுக்கும், போதிய எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு கிடைக்காவிட்டால், அவர்களின் வெற்றியை, அ.தி.மு.க., தீர்மானிக்கும் சூழல் ஏற்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ஆறாவது இடத்திற்கு, தே.மு.தி.க., மற்றும் தி.மு.க., இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. தே.மு.தி.க.,விற்கு, 29 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இதில், ஏழு பேர், அ.தி.மு.க., ஆதரவு எம்.எல்.ஏ.,க்களாக மாறியுள்ளனர். அவர்கள் ஓட்டு, அ.தி.மு.க., வெற்றிக்கு தேவையில்லை.
அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் ஏழு:

தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் ஏழு பேரும் அ.தி.மு.க., கட்டுப்பாட்டில் உள்ளதால், அவர்களின் ஓட்டு, முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. அவர்கள், அ.தி.மு.க., கண் அசைக்கும் பக்கம், தங்கள் ஓட்டை பதிவு செய்வர் என்ற நிலை உள்ளது. எனவே, அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியினர், இரண்டாவது வேட்பாளராக, தி.மு.க., அல்லது தே.மு.தி.க., வேட்பாளருக்கு ஓட்டளிப்பரா அல்லது ஒரு ஓட்டை மட்டும் பதிவு செய்வரா என்பது, கேள்விக்குறியாகி உள்ளது.
26 வரை தி.மு.க., காத்திருக்க வேண்டும்?

ராஜ்யசபா தேர்தலுக்கு காங்கிரசின் ஆதரவைத் திரட்ட, தி.மு.க., பார்லிமென்ட் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, டில்லியில் முகாமிட்டுள்ளார். எப்படியும், காங்கிரஸ் ஆதரவைப் பெற்று, கனிமொழியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற, தி.மு.க., தலைமையின் விருப்பத்தை நிறைவேற்ற, காங்கிரஸ் தலைவர்களை, பாலு சந்தித்து வருவதாகத் தெரிகிறது.
தேர்தல் ஒட்டுப் பதிவுக்கு முன்தினம், 26ம் தேதி, காங்கிரஸ் ஆதரவு யாருக்கு என்ற "கிளைமாக்ஸ்' முடிவுக்கு வரும் என, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, சோனியாவை, பாலு ஏற்கனவே சந்திருந்தார். ஆனால், காங்கிரஸ் உறுதியான முடிவை அறிவிக்கவில்லை. இதற்கிடையே, தே.மு.தி.க., வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என, அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவரும், விஜயகாந்தின் மைத்துனருமான சுதீஷ், காங்கிரஸ் தலைவர்களுடன் பேசி வருகிறார். இந்நிலையில், சென்னையிலிருந்து டில்லிக்கு நேற்று சென்ற டி.ஆர்.பாலு, மழை நிவாரணத்துக்கு தி.மு.க., அறிவித்த, 25 லட்சம் ரூபாய்கான காசோலையை, ராணுவ அமைச்சர் அந்தோணியிடம் அளித்தார். அப்போது, ராஜ்யசபா தேர்தல் குறித்து, இருவரும் விவாதித்ததாகத் தெரிகிறது. பாலு சந்திப்பு குறித்து, தமிழகத்தைச் சேர்ந்த, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஒருவர் கூறுகையில், "தி.மு.க.,வுக்கு அதரவு அளிக்கலாம் என்பது, கட்சியின் பெருவாரியோரின் கருத்தாக இருக்கிறது. 26ம் தேதி, காங்கிரஸ் தனது முடிவை அறிவிக்கும்' என்றார்.

- நமது நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: