வியாழன், 27 ஜூன், 2013

கூட்டணியின் பின்னணி பற்றி சில கிசு கிசுக்கள் சில உண்மைகள்

தி.மு.க.வை கடைசி நேரம்வரை பதற வைத்துவிட்டு, ராஜ்யசபா தேர்தலில் கனிமொழிக்கு ஆதரவு கொடுத்திருக்கிறது காங்கிரஸ். கடைசி நேர ஆதரவுக்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக டில்லி அரசியல் வட்டாரத்தில் சொல்கிறார்கள்.
முதலாவது, டி.ஆர்.பாலு போன்ற தூதர்களை அனுப்பி ஆதரவு கேட்ட கருணாநிதி, ஒன்றுமே சரிப்பட்டு வராத நிலையில், கடைசியில் மகளுக்காக தாமே சோனியாவுடன் நேரில் பேசினார் என்கிறார்கள். கலைஞரே  நேரடியாக வாய்விட்டு கேட்டபின் சோனியாவால் மறுக்க முடியவில்லையாம்.
இரண்டாவது, அடுத்த ஆண்டு வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில், தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்கு ஒரு ஸ்கெட்ச் போட்டுக் கொடுக்கப்பட்டதாம் தி.மு.க. தரப்பில் இருந்து!
அதாவது, “தேர்தல் அறிவிப்புக்கு முன், இலங்கை தமிழர் மற்றும் இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்படும் தமிழக மீனவர் தொடர்பாக சில ‘உறுதியான’ நடவடிக்கைகளை எடுங்கள். அதன்பின் அதை காரணம் காட்டி நாங்கள் (தி.மு.க.) கூட்டணிக்குள் வருகிறோம்” என்ற உத்தரவாதம் தி.மு.க. தலைவரால் கொடுக்கப்பட்டதாம்.
அதையடுத்தே, கனிமொழியை ஆதரிப்பது என்ற முடிவை டில்லி எடுத்தது என்கிறார்கள்.

தி.மு.க. ஆதரவு கேட்பதற்கு முன்னர், தே.மு.தி.க.வை ஆதரிப்பது என்ற முடிவிலேயே காங்கிரஸ் தலைமை இருந்தது என்கிறார்கள். அந்த முடிவு ராகுல் காந்தியால் எடுக்கப்பட்டது என்றும் தெரிகிறது. காங்கிரஸ் ஆதரவு நிச்சயம் என்று விஜயகாந்த்துக்கும் சொல்லப்பட்ட பின்னரே அவர் தமது வேட்பாளரை நிறுத்தினாராம்.
அந்த டீலின் பின்னணியும், அடுத்த ஆண்டு வரப்போகும் நாடாளுமன்ற தேர்தல்தான். அதில் காங்கிரஸ் – தே.மு.தி.க. கூட்டணி கிட்டத்தட்ட உறுதி என்ற சிக்னல் விஜயகாந்திடம் இருந்து போனதாம். இப்போது காங்கிரஸ் கடைசி நேரத்தில் தி.மு.க.வை ஆதரிப்பதாக அறிவித்ததில் கேப்டன் ஏக அப்செட்!
இனி நாடாளுமன்ற தேர்தலுக்காக கேப்டனின் கதவுகள் காங்கிரஸூக்கு திறக்கவே திறக்காது என்று அடித்துச் செல்கிறார்கள், தே.மு.தி.க. தலைமையுடன் நெருக்கமானவர்கள். அந்தளவு கடுப்பில் இருக்கிறாராம் கேப்டன். “கட்சியை கலைத்தாலும் கலைப்பேனே தவிர, காங்கிரஸ் பக்கம் போகவே மாட்டேன்” என்று சீறினாராம் அவர்.
நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வந்தபின் தி.மு.க. கைவிட்டால், நடுத் தெருவில் நிற்கப் போகிறது காங்கிரஸ்!
சரி. ஒரு lateral thinking-ல் யோசித்துப் பாருங்கள்.
இதுவே கலைஞரின்  மாஸ்டர் பிளானாக இருக்கலாமே. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி விஷயத்தில் விஜயகாந்த் காங்கிரஸ் பக்கம் சாய முடியாதபடி செய்வது ஒரு பக்கம், கனிமொழியை எம்.பி.யாக்குவது மறு பக்கம் என்று ஒரு கல்லில் இரண்டு மாங்காய்.
பிளஸ், காங்கிரஸை கழட்டிவிட்டு (இலங்கை தமிழர் மற்றும் மீனவர் விஷயத்தில் நாங்கள் சொன்னபடி நீங்கள் ‘உறுதியான’ நடவடிக்கை எடுக்கவில்லை) காங்கிரஸ் மீது ஆத்திரத்தில் உள்ள விஜயகாந்தை தம் பக்கம் இழுத்து கூட்டணி வைத்துக் கொள்வது!
கலைஞர் பக்கம் அடிக்கிறது காற்று!

viruvirupu.com

கருத்துகள் இல்லை: