புதன், 26 ஜூன், 2013

ஊரில் உள்ள ஊழலை வெளிச்சம்போடும் புதியதலைமுறை மாலன் !

புதிய தலைமுறை
மிழ்நாட்டில் சமூக விழிப்புணர்வைக் கொண்டு வந்தே ஆகவேண்டும் என்ற இலட்சியத்துடன் நடத்தப்படும் வார இதழ் புதிய தலைமுறை. அதன் ஆசிரியர் மாலன் (நாராயணன்) ஜூன் 27, 2013 தேதியிட்ட இதழில் “நெருக்கடியை நோக்கி…” என்ற தலைப்பில் “இந்தியப் பொருளாதாரம் மெல்ல மெல்ல நெருக்கடியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது” என்று சொல்லி விட்டு, அதற்கான காரணத்தையும் சுட்டிக் காட்டியிருக்கிறார், “இந்தியாவின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் எது காரணமோ, அதுதான் இதற்கும் காரணம். ஆம் ஊழல்!”.
‘சமூக விழிப்புணர்வுக்கு போராடும்’ புதிய தலைமுறை பத்திரிகை
அதே இதழின் தலையங்கத்தில், மத்திய பெட்ரோலிய அமைச்சர் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து விடக் கூடாது என்று சில லாபிகள் மிரட்டுவதாக சொன்னதை கடுமையாக விமர்சித்து, முடிக்கும் போது “லாபிகள்தான் நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கின்றன, அரசை வழி நடத்துகின்றன என்பது உண்மையானால், தன்னை மிரட்டுவது யார் அல்லது எந்த லாபி என்ற விவரங்களை பகிரங்கமாக அமைச்சர் அறிவிக்க வேண்டும். பெட்ரோல் விலை உயர்வை எதிர்கொள்ளும் ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்த உண்மையை அறிந்து கொள்ள உரிமை உண்டு” என்று சாட்டையை விளாசுகிறார்.

வெளி நாடுகளில் வேலை செய்யப் போய் ஏமாற்றப்படுபவர்கள், மாற்று எரிசக்தி, விவசாய பிரச்சனைகள் போன்று பல முக்கியமான விஷயங்களைக் குறித்து ‘சமூகத்தில் விழிப்புணர்வு’ ஏற்படுத்தும் கட்டுரைகளை வெளியிட்டிருக்கும் திரு மாலனின் கவனத்துக்கு ஒரு முக்கியமான விஷயத்தை கொண்டு வர விரும்புகிறோம்.
தமிழ்நாட்டில் செயல்படும் தனியார் பொறியியல் கல்லூரிகளின் கல்விக் கொள்ளை பற்றிய விழிப்புணர்வு கட்டுரை ஒன்றை வெளியிடும்படி புதிய தலைமுறை ஆசிரியரை கேட்டுக் கொள்கிறோம். அது குறித்து ஆய்வு செய்வதற்காக மாலனோ, அவரது உதவி ஆசிரியர்களோ ரொம்ப தூரம் போக வேண்டியதில்லை. பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் ஆர்.பி.சத்தியநாராயணனிடமிருந்து ஆரம்பித்தாலே போதும்.
முதலில், பேராசிரியர் ஆர் பி சத்தியநாராயணன் எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தின் தலைவர் ஆக பதவி வகிக்கிறார் என்றும் அவரது தந்தை டாக்டர் டி ஆர் பச்சமுத்து பல்கலைக் கழகத்தின் வேந்தராகவும், சகோதரர் திரு ரவி பச்சமுத்து சேர்மனாகவும், மச்சான் டாக்டர் ஆர் ஷிவகுமார் துணைத் தலைவராகவும் பதவி வகிப்பதன் மூலம் எஸ்ஆர்எம் கல்வி நிறுவனங்களின் விவகாரங்கள் அனைத்தையும் குடும்பமாக கட்டுப்படுத்துகின்றனர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
இன்னும் பின் நோக்கி போனால், எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தை நடத்தும் வள்ளியம்மை அறக்கட்டளையிலும் பச்சமுத்து, அவரது மகன்கள், மருமகன், மற்றும் மகள் மட்டுமே அறங்காவலர்களாக இருக்கிறார்கள் என்ற விபரம் தெரிய வரும்.
எஸ்ஆர்எம் பல்கலைக் கழகம் ஒரு ஆண்டுக்கு எவ்வளவு வருமானத்தை கையாளுகிறது என்று தகவல்களை தேடினால், அனைத்து கல்லூரிகளையும் சேர்த்து சுமார் 30,000 மாணவர்கள் எஸ்ஆர்எம் குழும கல்லூரிகளில் படிக்கிறார்கள் என்பதையும் அவர்களில் 80%க்கும் மேல் தமிழ்நாட்டுக்கு வெளியில் இருந்து ஒடிசா, பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களிலிருந்து வந்து படிப்பவர்கள் என்பதையும் 2012-ம் ஆண்டில் அவர்கள் மூலம் வந்த கட்டண வருமானம் 23% வளர்ச்சியடைந்து ரூ 622 கோடியை எட்டியது என்பதையும் செலவுகள் போக நிகர வருமானமாக ரூ 255 கோடி மிஞ்சியது என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
பச்சமுத்து, ரவி
சிபிஐ விசாரணைக்கு வரும் பச்சமுத்து, ரவி பச்சமுத்து
சென்ற வாரம், புதிய தலைமுறை பத்திரிகை அலுவலகம் உட்பட எஸ்ஆர்எம் குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களின் அலுவலகங்களிலும், பச்ச முத்து குடும்பத்தினரின் வீடுகளிலும் வருமான வரித் துறை தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது ஏன் என்றும் விசாரித்துப் பார்க்கலாம்.
ஒரு வடமாநில நபரின் வீட்டில் நடந்த வருமானவரித் துறை தேடலின் போது அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ 30 லட்சம் ரொக்கமாக எடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது குறித்துக் கேட்க, அதை எஸ்ஆர்எம் கல்லூரியில் தன் மகளுக்கு மெடிக்கல் சீட் வாங்க நன்கொடையாக கொடுத்தாக சொல்லியிருக்கிறார். அதற்கு விளக்கம் சொல்வதற்காகத்தான் பச்சமுத்து குழுமத்துக்கும் புதிய தலைமுறை அலுவலகத்துக்கும் வருமான வரித் துறை தொந்தரவு கொடுக்க வேண்டியது ஏற்பட்டது என்று சொல்லப்படுவது உண்மைதானா என்று சரிபார்த்துக் கொள்ளலாம். வருமான வரித் துறையின் திருப்திக்காக ரூ 6.75 கோடியை வேந்தன் மூவீஸ் அலுவலகத்திலிருந்து எடுத்துச் செல்ல பச்சமுத்து அனுமதித்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டையும் விசாரிக்கலாம்.
லாப நோக்கில்லாத அறக்கட்டளையின் நிதியை, கல்லூரிகளுக்கு வேலை செய்ததாக கூடுதல் செலவு கணக்கு காட்டி குழும நிறுவனங்களுக்கு மடை மாற்றியதாக கூறப்படுவது உண்மையா என்றும் கண்டு பிடிக்கலாம். 2012-ம் ஆண்டு எஸ்ஆர்எம் எஞ்சினியரிங் நிறுவனத்தில் விற்பனை வருவாய் ரூ 200 கோடியாகவும், எஸ்ஆர் எம் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ 50 கோடியாகவும், எஸ்ஆர்எம் போக்குவரத்து நிறுவனத்தின் வருமானம் ரூ 75 கோடியாகவும், எஸ்ஆர்எம் ஹோட்டல்களின் வருமானம் ரூ 30 கோடியாகவும் உள்ளதாக அதிகாரபூர்வ பதிவுகள் தெரிவிக்கின்றன.
மாலன்2000-ம் ஆண்டில் ராமாபுரம் வளாகத்தை நிகர்நிலை பல்கலைக் கழகமாக பதிவு செய்து கொண்ட எஸ்ஆர்எம், நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் வெளி கல்லூரிகளை இணைத்துக் கொள்ளக் கூடாது என்ற விதி இருந்தாலும், வெளி வளாக கல்லூரிகள் என்ற பெயரில் காட்டாங்கொளத்தூர், திருச்சி, வடபழனி, டெல்லி மோதி நகர் பகுதிகளில் கல்லூரிகளை நடத்துவது தெரியவரும்.
இவற்றை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவிலான பணம் ஆண்டு தோறும் அனுமதிக்கப்படும் 8,000 மாணவர்களிடம் நன்கொடையாக வசூலிக்கப்படும் முறையையும் கண்டு பிடிக்கலாம்.
புதிய தலைமுறை ஆசிரியர் மாலன்
புதிய தலைமுறை பத்திரிகை, புதிய தலைமுறை தொலைக்காட்சி போன்றவற்றில் பொறுப்பு வசிக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும், இந்திய ஜனநாயகக் கட்சியின் பகுதி பொறுப்பாளர்களுக்கும் ஆளுக்கு இத்தனை என்று கல்லூரி சீட்டுகள் பிரித்து கொடுக்கப்படுகின்றன; அவர்கள் ஏஜெண்டுகள் மூலம் வட மாநில மாணவர்களை வலை வீசி பிடிக்கிறார்கள் என்று பேசப்படுவதன் நம்பகத் தன்மையை குறித்து விசாரிக்கலாம். ஏஜெண்டுகள் மூலம் விண்ணப்ப படிவத்தை விற்கும் போதே பொறியியல் சேர்க்கைக்கு ரூ 2 லட்சம் முதல் ரூ 10 லட்சம் வரையும் மருத்துவக் கல்லூரியில் இடம் கொடுக்க ரூ 30 லட்சம் முதல் ரூ 60 லட்சம் வரை வசூலிப்பதாக சொல்லப்படுவது தொடர்பான ஆதாரங்களை திரட்ட முயற்சிக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக் கணக்கான கோடி ரூபாய் கருப்புப் பணம், ரொக்கமாகவும், போலி அறக்கட்டளைகள் மூலமாகவும் கையாளப்படுகிறதா என்று ஆய்வு செய்து உறுதி செய்து கொள்ளலாம்.
கூடவே, எஸ்ஆர்எம் பச்சமுத்துவைப் போலவே தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் அரசியல்வாதிகளாக இருந்து கல்வித்தந்தைகளாக உருவெடுத்த விஐடி விஸ்வநாதன், ஏ சி சண்முகம், ஜேபிஆர் போன்றவர்கள் இது போன்ற குடும்ப சாம்ராஜ்யங்களை நடத்திக் கொண்டிருப்பதை மக்கள் முன் அம்பலப்படுத்தி சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நற்பணியை செய்யலாம். திரு மாலன் அதைச் செய்வாரா?
மற்ற இடங்களிலும், துறைகளிலும் ஊழல் வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடுவதை மாலன் ஒத்துக் கொள்வதோடு கண்டனமும் செய்வார். ஆனால் புதிய தலைமுறையின் தாய் நிறுவனங்களிலேயே அது இருப்பதை அவர் ஏன் இத்தனை நாட்கள் ஆய்வு செய்து பார்க்கவில்லை?
கல்லூரிகளுக்கு நன்கொடை கொடுப்பதெல்லாம் ஊழலில் வராது என்று அவர் முடிவு செய்திருக்கலாம். உண்மைதான் கொள்ளையடிப்பதையும், வழிப்பறி செய்வதையும் ஊழல் என்று சொல்ல முடியாதுதான். ஆனால் அந்தக் கொள்ளைப் பணத்தில் மாத ஊதியம் வாங்கிக் கொண்டு ஊருக்கு உபதேசம் செய்வது பிரச்சினையில்லையா? மாலன் தன் ஜன்னலுக்கு வெளியே பார்ப்பது முக்கியமில்லை, ஜன்னலுக்கு உள்ளே என்ன என்பதை பார்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: