சனி, 13 அக்டோபர், 2012

இயக்குனர் பாலா: பரதேசிகளில் ஒருத்தன் தான் அதர்வா.

இயக்குனர் பாலா படம் என்றாலே ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு மட்டுமில்லாமல் ஒரு தேடலும் இருக்கும். வித்தியாசமான கதாபாத்திரங்களை தன் படத்தில் தொடர்ந்து பயன்படுத்தி வருபவர் இயக்குனர் பாலா. சேது படத்தில் விக்ரமின் கதாபாத்திரத்தை பார்த்ததிலிருந்து தொடர்கிறது ரசிகர்களின் தேடல்.விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்களை திரையில் முற்றிலும் மாறுபடுத்திக் காட்டிய பாலா, விஷால்-ஆர்யா என இளம்நடிகர்களையும் மாற்றினார். ஆனால் இரண்டு படங்கள் மட்டுமே நடித்த அதர்வாவை பரதேசி படத்தின் கதாநாயகனாக அறிவித்து, அவரை மலைப்பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று படவேலைகளில் தீவிரமாக இறங்கியது தான் ரசிகர்களை குழப்பத்திலும், ஆச்சர்யத்திலும் ஆழ்த்தியது.
நடிகர் அதர்வாவும் கேமரா கண்களில் சிக்காமல் தலைமறைவாகவே(தலையில் தொப்பியுடன்) இருந்துவந்தது மேலும் எதிர்பார்ப்புகளை கிளப்பியது. பாலா ஆதர்வாவை என்ன செய்தார்? படத்தி அதர்வாவின் தோற்றம் என்ன? என பாலாவே கூறியுள்ளார்.சமீபத்தில் ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில் பாலா “ பரதேசிக்கு முன்பு நான் எடுத்த அவன்-இவன் மற்றவர்கள் பார்வையில் தோல்வி தான். ஆனால் என் பார்வையில் அது வெற்றியடைந்த படம். விஷாலிடமிருக்கும் அபாரத்திறமையையும், ஆர்யாவால் எந்த கதாபாத்திரத்தையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையும், என் பட தயாரிப்பாளருக்கு நிம்மதியான தூக்கத்தையும் கொடுத்தது அந்த படம். சினிமா ஒரு பரமபதம். பகடைகள் இங்கே உருட்டப்பட்டுக்கொண்டே இருக்கும்.எப்போ ஏணி வரும், எப்போ பாம்பு வரும் என்று தெரியாது. தெரிஞ்சா சுவாரஸ்யம் இருக்காது. ’பரதேசி’ என்ற தலைப்பு பாங்கரமா இருக்குனு சொல்றாங்க. பிழைக்க வழி இல்லாமல் சொந்த மண்ணை விட்டுப் பிரியும் ஒவ்வொருத்தனும் பரதேசி தான். இப்படி 1940-களில் தேயிலைத் தோட்டத்துக்கு கொத்தடிமையா போன பரதேசிகளில் ஒருத்தன் தான் அதர்வா.அதர்வாவை நல்லா கவனிச்சு பாருங்க. வெள்ளந்தியா சிரிக்கும்போது கூட அவன் கண்ணில் மெல்லிசா ஒரு சோகம் தெரியும். ஒரு நடிகனுக்கு அது பேரழகு. நூறாவது படத்தில் தொட வேண்டிய உச்சத்தை தன்னோட மூணாவது படத்திலேயே அதர்வா தொட்டுட்டான்னு நினைக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: