வியாழன், 11 அக்டோபர், 2012

சரக்கடித்துவிட்டு சட்டகல்லூரி மாணவர்கள் ரகளை

திருச்செங்கோட்டில் நடந்த தனியார் கல்லூரிக்கு எதிரான முற்றுகை போராட் டத்தில் பங்கேற்க சென்ற சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள், ஆறு பேர் நேற்று மாலை சேலம் வந்தனர்.புதிய பேருந்து நிலையம் உள்ள “டாஸ்மாக்” கடை பாரில், சரக்கடித்த  மாணவர்கள் கடையில் சுண்டல் விற்றுகொண்டிருந்தவர்களிடம் காசு கொடுக்க முடியாது என தகராறில் ஈடுபட்டனர். அப்போது, பாரில் இருந்த கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டது. அங்கிருந்து வெளியேறிய மாணவர்கள், வி.எஸ்.ஏ., வணிக வளாகம் அருகில் உள்ள ஷேர் ஆட்டோ ஸ்டேண்டுக்கு சென்றுள்ளனர். அங்கு பயணிகளுடன் நின்ற ஆட்டோவில் ஏரியுள்ளனர். ஏற்கனவே ஆட்டோவிற்குள் இரண்டு பெண்கள் இருந்துள்ளனர்.
நிலை தடுமாறிக்கொண்டிருந்த மாணவர் களை பார்த்ததும், அந்த பெண்கள் தங்கள் பக்கத்தில் உட்கார எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ஆட்டோ உரிமையாளரும், நீங்கள் வேற ஆட்டோ பாருங்க தம்பி என்று கூறியுள்ளார்.அப்போது, மாணவர்கள் ஆட்டோ உரிமையாளருடன் தகராறில் ஈடுபட்டனர். அப்போது, மாணவர்களில் ஒருவர், சேலம் மாநகர நுண்ணறிவு பிரிவு போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளார்.அங்கிருந்து, பக்கத்தில் உள்ள பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த  பயிற்சி எஸ்.ஐ., தனசேகரன் தலைமையில் சில போலீஸார் அங்கு வந்துள்ளனர்.அவர்கள், ஆட்டோ உரிமையாளருடனும், சட்டக்கல்லூரி மாணவர்களுடனும்  பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, போலீசார் ஆட்டோ டிரைவர்களுக்கு ஆதரவாக பேசுவதாகக் கூறி, பயிற்சி எஸ்.ஐ.,யுடன் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில், ஆட்டோ உரிமையாளர் ஆட்டோவை எடுத்துகொண்டு பறந்துவிட்டார்.போலீசார் கையை பிசைந்துகொண்டு, மெதுவாக அங்கிருந்து போலிஸ் ஸ்டேசனுக்கு சென்றனர். போதையில் இருந்த மாணவர்கள்,  பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றும் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து அங்கு வந்த உதவி கமிஷனர் சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் மாணவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பினர்சிறிது நேரத்தில், உதவி கமிஷனர் பெரியசாமி, சட்டம் - ஒழுங்கு துணை கமிஷனர் பாபு ஆகியோர் பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு அவசர அவசரமாக வந்து என்ன நடந்தது என்று விசாரணை நடத்தினர்.இது குறித்து துணை கமிஷனர் பாபுவிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, "டாஸ்மாக் பாரில் இருந்தோ, ஆட்டோ டிரைவர்களிடம் இருந்தோ, மாணவர்கள் தங்களிடம் ரகளை செய்தது பற்றி புகார் எதுவும் எங்களுக்கு வரவில்லை.. நான், சம்பவ இடத்துக்கு போகும் போது,  மாணவர்களும் அங்கு இல்லை,'' என்றார்.<போதையில் இருந்த மாணவர்கள்,  பொது இடத்தில் போலீசாருடன் ரகளையில் ஈடுபட்டு, பயிற்சி எஸ்.ஐ.,யிடம் வாக்குவாதம் செய்த போதிலும், போலீஸார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது பொதுமக்கள் மத்தியில் போலீசார் மீதும், சட்டக்கல்லூரி மாணவர்கள் மீதும் “நல்ல” மரியாதையை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை: