சனி, 13 அக்டோபர், 2012

தமிழகம் முழுவதும் 16,502 ரவுடிகள்: சென்னைக்கு முதலிடம்

தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகளின் பெயர் பட்டியலை, ஐகோர்ட்டில் டிஜிபி நேற்று தாக்கல் செய்தார். அதில், Ôமாநிலம் முழுவதும் 16 ஆயிரத்து 502 ரவுடிகள் உள்ளனர். ரவுடிகள் பட்டியலில் தலைநகர் சென்னை முதலிடத்திலும் 2வது இடத்தில் நெல்லையும் 3வது இடத்தில் மதுரையும் கடைசி இடத்தில் நீலகிரி மாவட்டமும் உள்ளதுÕ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த முத்துக்குமார், காதல் பிரச்னையில் வெட்டி கொல்லப்பட்டார். இந்த கொலையில் போலீசார் கைது செய்த இருவர், ஜாமீன் கேட்டு ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்த போது, தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள் பட்டியல், குற்றங்களின் எண்ணிக்கை, தண்டனை விபரம் ஆகியவற்றை தாக்கல் செய்ய, தமிழக டிஜிபிக்கு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.
அதன்படி தமிழக டிஜிபி ராமானுஜம் ஐகோர்ட்டில் நேற்று அறிக்கை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில், 31 மாவட்டங்கள், 6 நகரங்களில் காவல் நிலையங்களில் பராமரிக்கப்படும் ரவுடிகள் பட்டியலில் 16 ஆயிரத்து 502 ரவுடிகளின் பெயர்கள் இடம் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் சென்னையில் 3,175 ரவுடிகள் உள்ளனர். பட்டியலில் நெல்லை 2வது இடத்தில் உள்ளது. நெல்லை நகரில் 334 ரவுடிகளும், நெல்லை புறநகரில் 1,214 ரவுடிகளும் உள்ளனர். மதுரை 3வது இடத்தில் உள்ளது. மதுரை நகரில் மட்டும் 888 ரவுடிகள் உள்ளனர். புறநகரில் 484 பேர் உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் 748 ரவுடிகளுடன் 4ம் இடத்தில் உள்ளது. டிஜிபி பட்டியல்படி, கோவை நகரில் 512, புறநகரில் 226, சேலம் நகரில் 353, புறநகரில் 299, திருச்சி நகரில் 427, புறநகரில் 155 ரவுடிகள் உள்ளனர். ரவுடிகள் எண்ணிக்கை நீலகிரி மாவட்டத்தில் குறைவாக உள்ளது. இங்கு 65 ரவுடிகள் மட்டுமே போலீஸ் பட்டியலில் உள்ளனர். திருவாரூர், பெரம்பலூரில் தலா 84 பேர் உள்ளனர்.

தவிர காஞ்சிபுரம்416, திருவள்ளூர்318, விழுப்புரம்452, கடலூர்680, வேலூர் 376, திருவண்ணாமலை200, ஈரோடு276, திருப்பூர்127, நாமக்கல்308, தர்மபுரி165, கிருஷ்ணகிரி329, புதுக்கோட்டை 157, கரூர்143, அரியலூர்290, தஞ்சாவூர்584, நாகப்பட்டினம்287, விருதுநகர்655, திண்டுக்கல்299, தேனி111, ராமநாதபுரம்462, சிவகங்கை214, தூத்துக்குடி605 பேர் என ரவுடிகள் பட்டியலில் உள்ளனர். குற்றங்களை பொறுத்த வரை, 2001 முதல் 2011 வரை பத்து ஆண்டுகளில் 17 ஆயிரத்து 32 கொலைகள் நடந்துள்ளன. 3 லட்சத்து 11 ஆயிரத்து 308 கொலை முயற்சி, சிறு குற்ற சம்பவங்கள் நடந்துள்ளன. 2 லட்சத்து 33 ஆயிரத்து 738 சொத்து தொடர்பான குற்றங்களும் கடந்த பத்து ஆண்டுகளில் நடந்துள்ளன. இ.பி.கோ சட்டப்பிரிவு வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பது தமிழகத்தில் 2001ம் ஆண்டு 62.80 சதவீதமாக இருந்தது, 2011ம் ஆண்டு 62.10 சதவீதமாக குறைந்துள்ளது. இவ்வாறு டிஜிபி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தேதி குறிப்பிடப் படாமல் ஜாமீன் மனு மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: