வியாழன், 11 அக்டோபர், 2012

பேபி ஈமு கோழி: பேபி, தங்கதுரை, வங்கிக் கணக்குகள் சொத்துக்கள் முடக்கம்!

Viruvirup
முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி தொடர்பான புகாரில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும், பேபி ஈமு பண்ணை உரிமையாளர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. ஆனால், விசாரணையின் போது இருவரிடமும் எந்த தகவலையும் போலீசாரால் பெற முடியவில்லை.
மேட்டூர் அருகே உள்ள குஞ்சாண்டியூரில் பேபி ஈமு பண்ணை நடத்திய தங்கதுரை, தொழிலை நிர்வகித்து வந்த அவரது மனைவி பேபி ஆகியோர் செய்த கவர்ச்சி விளம்பரங்களை நம்பி தமிழகம் முழுவதும் 46 கிளை ஏஜென்ட்கள் மூலம் 2600 முதலீட்டாளர்களிடம் ரூ.37 கோடிக்கு மேல் வசூல் செய்யப்பட்டது.
தங்கதுரையை முதலீட்டாளர்கள் தேடிப்பிடித்து சேலம் எஸ்பி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பேபியை கருமலைகூடல் போலீஸ் கைது செய்தது. இருவரிடமும் தொடர்ந்து விசாரணைகள் நடைபெறுகின்றன.

கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இவர்களால் வசூல் செய்யப்பட்ட தொகை ரூ.37 கோடிக்கு மேல்! இன்றைய தேதிவரை 249 முதலீட்டாளர்கள் ரூ.4.70 கோடிக்கு மோசடி புகார் அளித்துள்ளனர். விசாரணையின்போது, இவர்களின் வசமுள்ள சொத்துக்களாக அறியப்பட்டவை, ரூ.2.5 கோடி பணம், அலுவலகத்தில் இருந்த மினிஆட்டோ, 2 பைக், ரெக்கவரி வண்டி ஆகியவைதான். போலீசார் இவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும், தங்கதுரை, பேபி பெயரில் பல வங்கிகளில் உள்ள கணக்குகள், 25 ஏக்கர் நிலம், வீடு ஆகியவற்றை போலீசார் முடக்கி உள்ளனர்.
இந்த விவகாரம் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மறுபுறம் பரிதாபகர சம்பவம் ஒன்று நடக்கிறது. விருதாசம்பட்டி ஊராட்சியில் வெள்ளக்கரடில் உள்ள இவர்களது ஈமு கோழிப் பண்ணையில், தீவனங்கள் இல்லாமல் ஈமு கோழிகள் செத்து மடிந்து வருகின்றன. அவற்றை ஊழியர் ஒருவர் குழி தோண்டி புதைத்து வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: