வெள்ளி, 12 அக்டோபர், 2012

10 நாட்களில் 21 பேருக்கு "டெங்கு' :அதிகரிக்கிறது பாதிப்பு

சென்னை: கடந்த, 10 நாட்களில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டோரில், 21 பேருக்கு, "டெங்கு' பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாட்களில் மட்டும், எட்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், காய்ச்சல் வேகமாகப் பரவுகிறதோ என்ற அச்சம் பொதுமக்களிடம் எழுந்துள்ளது.
சென்னையில், "ஈடிஸ்' வகை கொசுக்களால், "டெங்கு' காய்ச்சல் அதிகம் பரவி வருகிறது. அரசு, தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். ஆங்காங்கே, "டெங்கு' பாதிப்பால், இறப்பு நேர்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
"எட்டு நாட்களில், 13 பேருக்கு, "டெங்கு' பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது; மற்றபடி இறப்பேதும் இல்லை' என, மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். எட்டு நாட்களில், 13 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அக்., 9, 10 என, இரண்டு நாட்களில் மட்டும் அரசு, தனியார் மருத்துவமனைகளில், எட்டு பேருக்கு, "டெங்கு' காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, "டெங்கு'வால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 21 ஆக உயர்ந்துள்ளது. நோய் தாக்குதலை உணர்ந்து, மாநகராட்சி சுகாதாரத் துறை, கொசு ஒழிப்புப் பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாநகராட்சி கொசு ஒழிப்புப் பணியை தீவிரப்படுத்தி வருகிறது. செவ்வாய், வியாழக் கிழமைகளிலும், 200 வார்டுகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. பொதுமக்களும் முழுமையாக ஒத்துழைத்தால் மட்டுமே, "டெங்கு' பாதிப்பை கட்டுப்படுத்த முடியும். வீட்டைச் சுற்றி தண்ணீர் தொட்டி, தேங்காய் ஓடு, குளிர் சாதனப் பெட்டி, டயர், வாளி, ஆட்டுக்கல் குழி ஆகியவற்றில் தேங்கி நிற்கும் நீரிலிருந்து, "ஈடிஸ்' வகை கொசு உற்பத்தியாகிறது. இதனால், தண்ணீர் தேங்க விடாமல், வீட்டின் சுற்றுப் புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பொதுமக்கள் விழிப்போடு இருப்பது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அமைச்சர் இன்று ஆலோசனை: டெங்கு காய்ச்சல், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மத்திய சுகாதார துறை அமைச்சர், குலாம் நபி ஆசாத் தலைமையில், சென்னையில் இன்று ஆய்வு கூட்டம் நடக்கிறது. இதில், தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களின் சுகாதார அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, நேற்று முன்தினம், தமிழக முதல்வர் தலைமையிலும், 9ம் தேதி, சுகாதார துறை அமைச்சர் தலைமையிலும், தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதே நாளில், டெங்கு தாக்கம் அதிகம் உள்ள, நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில், சுகாதார துறை செயலர் தலைமையிலான குழு, இக்காய்ச்சலின் தாக்கம் குறித்து, கள ஆய்வு நடத்தியது. தினமும் ஆலோசனை கூட்டம் நடத்தும் அளவிற்கு, தமிழகத்தில், டெங்கு காய்ச்சலின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வேலூர் மாவட்டம், வாணியம்பாடியைச் சேர்ந்த ரவிகுமார், 21, சென்னை, மாதவரத்தைச் சேர்ந்த நரேந்திரன், 27, ஆகியோர், டெங்கு அறிகுறிகளுடன், சென்னை, ராஜிவ்காந்தி, அரசு பொது மருத்துவமனையில், மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மத்திய சுகாதார துறை அமைச்சர், குலாம் நபி ஆசாத் தலைமையில், கிண்டியில் உள்ள, பிரபல நட்சத்திர ஓட்டலில், இன்று ஆய்வு கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, குலாம் நபி ஆசாத், நேற்று மாலை சென்னை வந்தார். தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் சுகாதார துறை அமைச்சர்கள், துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

திருவாரூரிலும் "டெங்கு': திருவாரூர் மாவட்டத்திலும், "டெங்கு' காய்ச்சல் பரவத் துவங்கியதால், அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். மதுரை அருகே, இருவர் "டெங்கு' காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், காரைக்காலில், 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, கலெக்டர் அசோக்குமார் தெரிவித்தார். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே, கணேஷ், 22; நாகையில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். திருத்துறைப்பூண்டி அருகே, நாதன், 24; கோவையில், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும், காய்ச்சல் காரணமாக, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ரத்த பரிசோதனை செய்ததில், "டெங்கு' காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. மேலும், இழுப்பூரைச் சேர்ந்த வீரமணி, 31, என்பவருக்கும், "டெங்கு' காய்ச்சல் இருப்பது தெரிந்தது. இதனால், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரப்பகுதியில், "டெங்கு' காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது.

40 பேருக்கு "டெங்கு': காரைக்காலில், வேகமாக பரவி வரும் "டெங்கு' காய்ச்சலுக்கு, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, ”காதாரத் துறையினருடன் கலெக்டர் அசோக் குமார் ஆலோசனை நடத்தினார்.

அதி விரைவு மருத்துவர் குழுக்கள்: டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: காய்ச்சல் அதிகளவில் பரவும் பகுதிகளில், "அதிவிரைவு மருத்துவர் குழுக்கள்' அனுப்பப்பட்டு, சோதனைகள் நடத்தப்படுகிறது. நோய் பரவாமல் தடுக்க, உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா மருத்துவமனைகள்,மாவட்ட தலைமை மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில், மூன்றடுக்கு தீவிர சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மருந்து தெளித்தல் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

கருத்துகள் இல்லை: