திங்கள், 26 மே, 2025

தமிழ் ராப் பாடகர்களில் முதலிடம் வேடனுக்குதான் ..

 Nikhil Dev  :  கலை வடிவங்களில் அரசியலை வீரியமாகவும், மக்களுடன் நேரடி உரையாடலை நிகழ்த்தவும் முடியும் என்பதையும் புரிந்து கொண்ட காலகட்டம்.
புத்தகங்களிலும், எழுத்துக்களிலும் மட்டுமே அரசியலை புரிந்து கொள்வதை தாண்டி திரைப்படங்களிலும், நாடகங்களிலும்,
பாடல்களிலும் நுணுக்கமான அரசியலை தேட துவங்கினேன்.
கலை வடிவங்களில் அரசியலை கண்டுபிடிப்பது அவர்கள் கூற வரும் கருத்துக்களை உள்வாங்குவது மிகவும் சுவாரசியமான ஒன்று.
அதுபோல இந்திய அளவில் யாரெல்லாம் பாடல்கள் வாயிலாக அரசியலை பேசுகிறார்கள் என்பதை தேடினேன்.
 தமிழ்நாட்டில் rapper அறிவு தனது பாடல்கள் வாயிலாக அரசியல் பேசிக் கொண்டிருந்தார்.
2020 ஆம் ஆண்டு தற்செயலாக ஒரு பாடலை கேட்க நேர்ந்தது.
குரலில் அவ்வளவு வலிமை, வரிகளில்  கோபமும், வலியும், போராட்டமும்.
அதுபோன்ற உணர்ச்சிப்பூர்வ பாடலை மலையாள திரைப்படங்களில் அதுவரை கேட்டதில்லை.


அதுவரை, கம்யூனிச சித்தாந்தத்தின் அடிப்படையில் அமைந்த பாடல்கள் மட்டுமே உணர்ச்சிகளை தூண்டிய போது இந்தப் பாடல் மிகப் புதுமையாக இருந்தது,
எனக்கு மிகவும் பிடித்திருந்தது
மற்றும் மாபெரும் அரசியலை மிக எளிமையாக பேச முடியும் என்பதையும் உணர்த்தியது.
குறிப்பாக "ஞான் பாணன் அல்ல, பறையன் அல்ல, புலையன் அல்ல. நீ தம்புரானும் அல்ல.... ஆனெங்கில் ஒரு மயிரும் அல்ல". இந்த வரிதான் என்னை அவர் பக்கம் திருபியது.  அந்தப் பாடல் தான் 'Voice of Voiceless' (எனது twitter கணக்கின் பெயரும் அது தான்) அதை பாடியவர் ஹிரான் தாஸ் முரளி இன்று உலகமெல்லாம் அறியப்படும் 'வேடன்' .

ஈழத்தை சார்ந்த தாயும், கேரள மாநிலத்தைச் சார்ந்த தந்தையும் தமிழ் மேல் ஆர்வம் உள்ள கேரளத்தின் திருச்சூர் பகுதியில் தண்டவாளத்தின் அருகே வளர்ந்த மகனும்.
சிறுவயதிலிருந்தே தனது நிறத்தாலும், ஜாதியாலும், பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்ட, தீண்டாமையை நேரடியாக அனுபவித்த சிறுவன் தனது வேதனையையும் வலிகளையும் வரிகளால் நிரப்பினான். கலைகளை கற்றுக்கொண்டு அதில் சிறப்பிப்பது ஒரு விதம், சிறுவயதிலேயே கலையை கையோடு கொண்டு வருவது ஒரு விதம். வேடன் இரண்டாவது ரகம்..

Voice OF Voiceless' பாடல் நிற வெறியையும், மத வெறியையும், ஜாதிய ஒடுக்கு முறையையும் தகர்த்தெறியும் விதமான பாடலாய் அமைந்தது அதற்கு முக்கியமான காரணம் அந்த வரிகள். அதைத்தொடர்ந்து அவர் எழுதிய ஒவ்வொரு பாடலிலும் தனது அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்துவதும்,  இந்த சமூகத்தின் அவலங்களையும், மனிதருக்கு மனிதர் ஒடுக்கக்கூடிய மனநிலையையும் கேள்வி கேள்வி கேட்கும் விதமாகவே அமைந்தது. அவர் எழுதக்கூடிய எந்த பாடலிலும் அரசியல் இல்லாமல் இல்லை.
உழைக்கும் வர்க்கத்துகாகவும், நிறத்தாலும், ஜாதியாலும் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் குரல் எழுப்பும் விதமாக தனது பாடல்களை மேடை ஏற்றினார்.

கேரளத்தின் திருச்சூர் பகுதியைச் சார்ந்த இளைஞன் தனது சொந்த உழைப்பால் இத்தனை ஒடுக்குமுறைகளையும் உடைத்து எறிந்து இன்று உலக அளவில் பிரபலமாக இருக்கிறான் இது இன்றைய இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சமீபத்தில் அவரின் மேல் சில சர்ச்சைகள் எழுந்துள்ளது அதற்கான விளக்கங்களை அவர் அளித்து வருகிறார். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து யாரேனும் மேல் எழுந்து வந்தால் இது போன்ற சர்ச்சைகள் எழுவதும் இதை வைத்து ஒட்டுமொத்தமாக அவரை முடக்கி விடலாம் என்று நினைப்பதும் சரளமாக நடக்கக்கூடிய நிகழ்வு தான்.

அவர் மீது தவறு இருக்கிறதா இல்லையா என்பதை தாண்டி குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்களை மேலே எழ விடாமல் இது போன்ற சர்ச்சைகளால் முடக்கி வைக்க ஒரு மாபெரும் கூட்டம் வேலை செய்யும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவை அனைத்தையும் முறியடித்து மேலும் தனது கலை எனும் ஆயுதத்தால் இந்த சமூகத்தின் பிரச்சனையை மேலும் வீரியமாக பேசுவார் என்று நம்பலாம்.

கருத்துகள் இல்லை: